நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி!-எனைச்
சுடர்முகு மறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மானிலம் பயனுறவாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும்- சிவ
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன். - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
.
Bookmarks