ஒரு மாலை இளவெயில் நேரம்..!
"ச்சே....! மணி ஆறு ஆச்சு... ஒரு சேர் ஆட்டோ கூட காணோமே..! இத்தன நேரம் காத்திருக்க வச்சி.. ரெண்டு நாள் கழிச்சா வரச் சொல்லுவாங்க.. இத மதியமே ஃபஸ்ட் ரவுண்ட் ஆன்லைன் டெஸ்ட் முடிஞ்சதுமே சொல்லியிருக்கலாமே..!" என்று மனசுக்குள் புலம்பியபடியே ஃபைலோடு மைலாப்பூரின் ஒரு எம்.என்.சி நிறுவனத்துக்கு இண்டர்வியூவுக்காக சென்று விட்டு வடபழனியில் காத்திருந்தாள் சந்தியா.
மெல்ல சூரியன் மேற்கு நோக்கி பயணப்பட்டிருந்தது. வெள்ளை நிற சுடிதாரும், வையலட் நிய ஃபைலும், களையான முகமும் கொண்டு சந்தியா ஒரு குட்டி தேவதைப் போலத்தான் நின்றிருந்தாள். மெல்லிய தூரலோடு சில்லென்ற காற்றும் வீசத் துவங்கியிருந்தது.
நேரம் மாலை 6.30 ஆகியது. ஆட்டோ பிடிக்கலாம் என்றால், ஆட்டோவையும் காணோம். வரும் ஷேர் ஆட்டோக்களும் வேறு ஊரின் பெயர் போட்டிருந்தது.
ஒரு ஷேர் ஆட்டோ, "கோல்டன் ஃப்ளாட்ஸ்/அண்ணாநகர்" என்று பெயர் பலகை இட்டு வந்துகொண்டிருந்தது. சந்தியா கையசைக்க, அங்கு வந்து நின்றது.
ஷேர் ஆட்டோவினுள் ஓட்டுநர் தவிர யாருமே இல்லை. சந்தியா சற்று யோசித்து பின்வாங்கினாள், பின் இன்னும் நேரமானால் ரொம்ப சிரமமாயிடுமே என்று எண்ணி, "திருமங்கலம் போகுமாங்க??" என்று கேட்டாள்.
ஓட்டுநர், போகும் என்பது போல் தலையசைத்து ஏறச் சொல்லி சைகை காட்டினார்.
ஏறி, மெல்லிய தூரலில் நனைந்த தனது கூந்தலை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே பார்த்த வண்ணம் வந்தாள்.
அடுத்த நிறுத்தத்தில், ஒரு கால் நூற்றாண்டு மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் ஏறினார். அவர் வலது ஓரத்தில் உட்கார, சந்தியா இடது ஓரத்தில் கம்பியைப் பிடித்து ஓட்டி அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம், இன்னொருவரும் ஏற, கிட்டத்தட்ட, சந்தியா ஓரத்தில் கம்பியோடு ஒட்டி அமர்ந்து கொண்டாள்.
மாலை இருட்டத்துவங்கியது.
ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம், "ஏங்க, திருமங்கலம் வந்தா சொல்லுங்க.." என்று சொன்னாள் சந்தியா. ஷேர் ஆட்டோவின் ஓட்டுனர், புன்னகைத்தபடியே சரி என்று தலையாட்டினான்.
வேறு திசை நோக்கி ஆட்டோ பயணப்பட்டிருந்தது. சந்தியாவின் அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓரப்பார்வையில் இவளை நோட்டமிட்டதை சந்தியா கவனித்தாள். சட்டென்று துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவர்கள், நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
கொஞ்ச நேரத்தில், எந்த நிறுத்தத்திலும் நில்லாமல், ஷேர் ஆட்டோ வேறு ஒரு குறுகிய வழியில் போய்க்கொண்டிருந்தது. சந்தியாவுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது. பயத்தோடு, "ஏங்க, எந்த வழியா போறீங்க? மெயின்ரோடு மாதிரி தெரியலையே" என்று தைரியத்தை வரவழைத்து
கேட்டாள் சந்தியா.
"இது குறுக்கு வழி மா... மெயின் ரோட்டில் ட்ராப்கினால இந்த வழியா போகச் சொல்லியிருக்காங்க" என்று சொன்னார் ஓட்டுநர். அவரது பதில் சமாளிப்பு என்று சந்தியாவுக்கு மெதுவாகத்தான் விளங்கிற்று.
யாருமற்ற ஒரு காலி இடத்தின் அருகில் நின்றது ஷேர் ஆட்டோ.
சந்தியா, திடுக்கிட்டு, "ஏங்க.. என்ன ஆச்சு? எங்கே இருக்கோம்??" என்று பதட்டமாகி கேட்டாள். நடத்துனர், பதில் சொல்லாமல், திரும்பி... வில்லத்தனமாய் சிரித்தான். கூட அது வரை அமைதியாய் வந்த ஆண்களில் ஒருவன் சந்தியாவின் கையைப் பிடிக்க, அவள் கத்தும் முன், இன்னொருவன் அவள் வாயில் கை வைத்து, சத்தமெழுப்பா வண்ணம் அழுத்த, ஓட்டுனர், இறங்கி பின்னே ஏற... சந்தியா திமிறி விட்டு வெளியே வர முயல அந்த மூவரின் பலத்திற்கு நடுவில் எதுவும் முடியாமல் பூனைக்குட்டி போல் நடுநடுங்கி போய்விட்டாள்.
சந்தியா கத்த முயன்று, தோற்று, வாயின் வைத்த கையின் விரலை பலம் கொண்ட மட்டும் கடிக்க, அவன், "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஆ.....!" என்று கத்திக்கொண்டு கையை அகற்ற, அது தான் தருணமென்று,
சந்தியா,
"ஆ.........! காப்பாத்துங்க....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!" என்று கத்தினாள்.
..
...
...
...
...
...
...
...
...
"ஏம்மா.. ஏம்மா... உன்ன தாமா... திருமங்கலம்னு தானே கேட்டீங்க??" என்று சத்தமாய் கேட்டார் ஓட்டுநர்.
அதுவரை, நினைத்தது எல்லாம் பிரமை என்று உணர்ந்து, சட்டென்று நினைவு வந்தவளாய், சந்தியா, "ஆமாங்க!" என்று சொன்னாள்.
"இது அண்ணா நகர் போகுதுமா.. நீங்க இங்கயே இறங்கிக்கோங்க. திருமங்கலம் திரும்பி நடந்து ஒரு வளைவு திரும்பினா போதும்." என்று சொன்னார் ஓட்டுநர்.
சந்தியா, பத்து ரூபாய் நோட்டை நீட்ட, ஓட்டுனர், ஐந்து ரூபாய் காயினை எடுத்துக் கொடுத்தார். சந்தியா,"ரொம்ப நன்றிங்க..!" என்று சொல்லிப் புன்னகைத்து விலகினாள்.
அவளது, நன்றி நவிழலும், புன்னகைக்கும் அர்த்தம் விளங்காமல் ஷேர் ஆட்டோவை இயக்க ஆரம்பித்தார் ஓட்டுநர்.
மெல்ல, இருள் படர, சந்தியாவின் இதயத்தில் நிம்மதி பரவத் துவங்கியிருந்தது.
Bookmarks