தெரு முனையில் நுழையும் போதே பலகார வாசனை மூக்கை துளைத்தது. யாரு வீட்டுலப்பா இப்படி ஒரு விசேட சமையல்! எதும் பண்டிகை கூட இல்லியே? என்று மனதுக்குள் எண்ணியபடி நன்றாக வாசம் பிடித்தேன். ஹ்ம்ம் என் வீட்டுலயும் தான் ஒருத்தி இருக்காளே புருசன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ருசியா சமயல் பண்ணி குடுக்கணுமே ம்ம்ம் அதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும். இனிமே அடுத்த பிறவில தான் இந்த ஆசை எல்லாம் நிறைவேறும் போலருக்கு.. என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தேன். அடடே என்ன அதிசயம் இது! .. இந்த வாசனை என்னோட வீட்டுலருந்துதான் வருது.. வீடுதவறி வந்துட்டனா? சுற்நும் முற்றும் பார்த்து ஒருதடவை உறுதிப்படுத்திக் கொண்டேன். மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தேன் எனக்கு முதுகு காட்டிக்கொண்டு என் மனைவி வேலையில் மும்முரமாக இருந்தாள். அடுப்பில் நெய் காய்ந்து கொண்டிருந்தது. நெய்யில் முந்திரியை போட்டுக்கொண்டிருந்தவள் என் வருகையை உணர்ந்து திரும்பி வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றாள்.
வந்துட்டீங்களா வாங்க தண்ணி எடுத்து வச்சிருக்கேன் போய் கை; கால் கழுவிட்டு போய் திண்ணைல உக்காந்துருங்க தோ ரெடியாயிடும்
ஆச்சரியம் தாளாமல்! என்;னடா என்ன விசேசம்? சமையல் எல்லாம் பலமாருக்கு. என்று கேட்டேன். அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது போய் தயாரா உக்காருங்க வந்து சொல்றன் முகத்தை தீவிர மாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
சரி என்னமோ விசேசம் போலருக்கு . என்று கை கால் கழுவ சென்றேன். திடீரென்று மனதுக்குள் ஒரு கவலை அழுத்தமாய் வந்து அமர்ந்து கொண்டது. அய்யய்யோ இன்னிக்கி எதாவது விசேசமா? நான் மறந்துட்டனா? அப்புறம் அதுக்கு வேற ஒரு மூச்சு பாட்டு வாங்கி கட்டிக்கணும். மனதிற்குள் ஒவ்வொரு முக்கிய நாள்களாக வந்து போனது.. கல்யாண நாள் .. இல்லை காதலை சொன்ன நாள்? அதுவும் இல்லை .. வேற என்னோட பிறந்த நாள்? இல்லியே அது செப்டம்பர் 5 தானே ஒரு வேளை அவளோட பிறந்த நாளோ? இல்லியே மனதுக்குள் பல நினைவுகள் வந்து போனது சரி வருவது வரட்டும் சமாளிக்கலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு.. போய் சோபாவில் அமர்ந்தேன்.. சன்னலுக்கு வெளியே எதிர் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்கள் நான்கு பேராக சேர்ந்து சுவாரசியமாக பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் குதூகலப்பேச்சு கலகலப்பாக என் காதுவரை கேட்டுக் கொண்டிருந்தது.
சட்டென்று மூக்குக்கு பக்கத்தில் வாசம் வீசியது தலை அதுவாக திரும்பியது விழிகள் வியப்பால் விரிந்தன.. எனக்கு முன்னால் தட்டு தெரிந்தது அதில் கேசரி, லட்டு, மைசூர் பாகு போன்ற இனிப்புகள் நிறைந்திருந்தது தட்டை ஒரு கரம் பற்றியிருந்தது. இன்னொரு கரத்தில் ஒரு துண்டு மைசூர் பாகு இருந்தது அதுவும் என் வாய்க்கு அருகில் நீண்டிருந்தது.
இந்தாங்க சாப்பிடுங்க அட காதுகளுக்கு கூட சுவையறியும் தன்மை வந்துவிட்டதே என் காதில் தேன் பாய்கிறதே.. காது இனித்தது தலை நிமிர்ந்தது ஆகா மஞ்சளில் குளித்த வெள்ளை ரோசாவுக்கு கண், காது, மூக்கு வாய் படைத்தது யாhர்.. வெட்கம் தோய்ந்த என் மனைவியின் முகம் தெரிந்தது.
ஆகா செல்வா.. ரொம்ப நாளக்கி அப்புறமா அதிர்ஷ்டம் உன்பக்கம் வீசுதுடா கப்புனு புடிச்சுக்க. உள்ளுணர்வு எச்சரிக்க வேகமாக கரத்திலிருந்த பாகை விழுங்கிவிட்டு அவள் கரம் பற்றி தட்டை வாங்கி வைத்துவிட்டு இழுத்து பக்கத்தில் அமர்த்தினேன். இடது கையால் அவள் தோளை அணைத்துக் கொண்டு வலக்கரத்தால் அவள் முகத்தில் வந்து படர்ந்த முடிக்கற்றைகளை விலக்கியபடி அவள் கன்னங்களை வருடிக்கொண்டே என்னடா செல்லம் என்ன விசேசம் இனிப்பு எல்லாம் தூள்பறக்குது.. இன்னிக்கி யாரோடவும் பிறந்தநாள் கூட இல்லியே..
சட்டென்று என் கரத்தைப் பற்றி தன் கரங்களுக்குள் சிறைவைத்துக் கொண்டாள். மெதுவாக என் விரல்களை நீவியபடி சொல்லத்தொடங்கினாள்.
என்ன மன்னிச்சுருமா? உன்ன மன்னிக்கணுமா எதுக்கு? இல்லமா உனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் இப்பல்லாம் நீ கதை, கவிதை, கட்டுரைண்ணு பேசும்போது நான் காது குடுத்து கேக்குறது இல்ல. உன்ன உற்சாகப் படுத்துறது இல்ல.. ஆனா நான் தப்பு பணறண்ணு தோணுது. முன்னால காதலிக்கும் போது பாராட்டுன அளவுக்கு அப்புறமா உனக்கு நான் காது குடுக்குறதே இல்ல..
நான் மௌனமாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவள் தலைகுனிந்தபடியே தொடர்ந்தாள்
நேத்திக்கு அம்மாவீட்டுக்கு போனப்ப என் பழைய தோழி சுசிலாவ பார்த்தேன். ஆவ உன்னபத்தி நெறய சொல்றா.. நீ எதோ சைட்ல எழுதுறியாமே அது நல்;லாருக்குண்ணு சொன்னா. அடுத்ததா நீ என்ன எழுதப்போற, என்கிட்ட படிச்சு காட்டுனியாண்ணு கேட்டா. முதல்ல நீதானே வாசிப்ப எதாவது விமர்சனம் பண்ணுவியா?ண்ணு என்கிட்டயே கேட்டா எனக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியல.. அப்போதான் உன்னவிட்டு ரொம்ப விலகி வந்துட்டனோண்ணு தோணுச்சு உன்ன பத்தி மத்தவங்க சொல்லி கேக்க வேண்டியிருக்கேணு கஷ்டமாருந்துச்சு
என்னோட நிலைய வர்ணிக்க தமிழ்ல வார்த்தைகளே இல்லீங்க உண்மையிலே எந்தவொரு மனுசனுக்கும் தன்னோட மனைவிகிட்டருந்து பாரட்டு கேக்குறதவிட சந்தோசமான விசயம் வேற இல்லீங்க. மத்தவங்க கிட்டருந்து பாராட்டு வாங்குறது பெரிய விசயமே இல்ல. தன் மனைவியே மனசார பாரட்டறது எவ்ளோ பெரிய விசயம். அதுவும் என் மனைவி மன்னிப்பே கேக்குறா அப்படிண்ணா என் நிலமை எப்படிருக்கும்ணு நீங்களே நெனச்சுக்குங்க. கொஞ்சம் தலைக்கனம் கூடிப்போனதென்னவோ உண்மைதான்.
அதுனால இனிமே நான்தான் உங்களோட எழுத்துக்கள முதல்ல படிப்பேன். சுரி சொல்லுங்க அடுத்ததா இலக்கிய சோலைல என்ன எழுதப்போறீங்க
எனக்கு அப்படியே தூக்கி தலைக்குமேல வச்சாப்புல இருந்துச்சு என்னமோ பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுனமாதிரி மெதப்புல தொண்டைய செருமிக்கிட்டே பேச ஆரம்பிச்சேன் வரக்கூடிய பின்விளைவுகள் எதப்பத்தியும் யோசிக்காம
அதோ வெளிய பந்தடிக்குறாங்களே அவங்கள பாத்தா உனக்கு என்ன தோணுது
எனக்கு பந்து விளையாடுறாங்கண்ணு தோணுது ஏன் உனக்கு வேற ஏதும் தோணுதா? (அவள் குரலில் தொனத்த சிறிய மாற்றம் அப்போது எனக்கு தெரியவே இல்லை)
எனக்கு குற்றால குறவஞ்சில சில பாடல்கள் ஞாபகம் வருது.
கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்திலானே
(பூமுடிந்த கூந்தல் கலைந்து விழ முன்னும் பின்னுமாக மூன்று நான்கு அடிகள் நடந்து தனது தோழிப்பெண்களுடன் சேர்ந்து சந்தோசமாக களித்துப் பேசியபடி வசந்தவல்லி பந்தடிக்கும் காட்சியைக் காண கண்கள் ஆயிரம் எனக்கு இல்லையே)
பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே
மந்தர முலைக ளேசலாட மகரக் குழைகளுசலாடச்
சுந்தர விழிகள் பூசலாடத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்)
பொன்னி னொளிவில் வந்துதாவிய மின்னினொளிவு போலவே
சொன்ன யத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக் கூடி
நன்ன கர்த்திரி கூடம் பாடி நகுர்தத் திகுர்தத் திகுர்தத் தொம்மெனப் (பந்)
(காதிலணிந்த மீன்வடிவம் கொண்ட கம்மல்கள் ஊஞ்சல் போல ஆட
அழகான கண்கள் இரண்டும் தங்களுக்குள் சண்டையிட
பெரிதாக மூச்சு விடுவதால் மார்புக்கூடு ஏறிஇறங்க
பொன்னிலிருந்து தெறித்து வரும் மின்னல்போல
பறந்துவரும் பந்தினைத் தேடி தேடி தோழியருடன் சேர்ந்து பந்தடித்தாள்)
ஏதோ பெரிய கதாகாலட்சேபம் முடித்த பாவனையோடு சிறிது கேசரி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்
(இந்த கதய இதோடே நிறுத்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும் .. ஆனா விதி யாரை விட்டது?)
அதோ கைல பந்து வச்சுகிட்டு பொண்ணு ஒரு பொண்ணு வராளே அவகிட்ட எத்தன பந்திருக்கு சொல்லு?
இதென்ன கேள்வி ஒண்ணு தான்
இல்லை ஐந்து
ஐந்தா? கேள்விக் குரலில் சந்தேகம் தொனித்தது எனக்கோ அது இனித்தது.
வருசங்க வீதி தன்னில் வசந்தபூங்கோதை காலில்
இருபந்து குதிகொண்டாட இருபந்து முலைகொண்டாட
ஒருபந்து கைகொண்டாட ஒரு செப்பி லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை.
வெளியே பார்த்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்த என் மனதுக்கு ஏதோ விபரீதம் என்று தோன்ற விருட்டென்று திரும்பினேன். பத்திரகாளி அவதாரமாய் என்னவள் என்முன்னால் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் என் புத்திக்கு உறைத்தது.. இடுப்பில் கைவைத்து நின்று கொண்டு முறைத்துப் பார்த்தவள். ஏதும் பேசாமல் விடுவிடென்று உள்ளே சென்றாள்.
கொஞ்ச நேரத்துக்கு உள்ளிருந்து மேசை இழுபடும் சத்தமும் புத்தகங்கள் கிழிபடும் சத்தமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஏதோ எரியும் வாசம் வந்தது. மனதிறகுள் நினைத்துக் கொண்டேன் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு மீண்டும் புத்தகங்கள் வாங்க பணம் சேமிக்க வேண்டியது தான் என்று.
Bookmarks