1990, ஆகஸ்டு மாதம். மும்பை.
நான் நெல்கோ கம்பெனியில் சேர்ந்த புதுசு. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் தானே ஈஸ்டில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தோம். நான் தான் முன்னால நின்னு வாடகை பேசி முடிச்சேன்..
இராமகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ். அப்பதான் கட்டி முடிக்கப்பட்ட புது கட்டிடம். மாசம் 1000 ரூபா வாடகை, 3000 ரூபா அட்வான்ஸ்.
7 வது மாடியில் எங்க அபார்ட்மெண்ட். அது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வீடு (உங்க கற்பனைக் குதிரையைக் கடிவாளத்தை இறுக்கிப் பிடிச்சு நிறுத்துங்க. அது இல்லைப் பிரச்சனை).
கதவைத் திறந்தால் ஹால். முதல் மூணடி தாண்டினால், கீழ் வீடு தெரியும். கண்ணாடி மாதிரி தளம் இல்லிங்க. தளமே கிடையாது. 6 வது மாடி அபார்ட்மெண்டும் 7 வது மாடி அபார்ட்மெண்டுக்கும் அப்படி ஒரு கனெக்ஷன், 4 மாடிக்கு அப்ரூவல் வாங்கிட்டு ஏழு மாடி கட்டி இருக்காங்க. முனிசிபாலிட்டியை ஏமாத்தி அப்ரூவல் வாங்கறதுக்காக அப்படி ஹாலுக்கு கான்கிரீட் போடாம 7 மாடியை நான்கு மாடியா காட்டி இருந்தாங்க. அந்த மூணடி ஹாலிலே உள்ள போனா ஒரு ரூம், கிச்சன் அப்புறம் பாத்ரூம் இவ்வளவுதான் வீடே!..
முதலில் நான் தான் குடியேறினேன். ஒரு வாரம் தனிக்காட்டு ராஜா. எங்களுக்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறை. அந்த வியாழக் கிழமை மாலை கார்த்தி எங்கிட்ட வெள்ளிக்கிழமை நைட் லக்கேஜ் எடுத்துகிட்டு நானும் வந்திடறேன் என்று சொன்னான். அதுவரை அவன் தங்கி இருந்தது மும்பை வீ.டி. அருகில் மஸ்ஜித் பந்தரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கட்டிடத்தில் இருந்த இண்டஸ்டிரியல் டைமண்ட்ஸ் இண்டியா லிமிட்டெடுடைய கெஸ்ட் ஹவுஸில், அதன் கேட்டை இரவூ 10 மணிக்கு மூடி விடுவார்கள். அப்புறம் அடுத்த நாள் காலையில் தான் திறப்பார்கள்.
வெள்ளிக்கிழமை எனக்கு கார்த்தி வருவது சுத்தமா மறந்து போயிடுச்சி. நான் ஒன்பது மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டு தூங்கி விட்டேன்..
அந்த வீட்டுக் கதவுக்கு உள்பூட்டு, அதாவது கதவிலேயே பொருத்தப் பட்ட பூட்டு உண்டு. ஆனால் அதற்கு சாவிதான் இல்லை, அதனால் வீட்டுக்குள் இருக்கும் போது உள்பூட்டையும் வீட்டிற்கு வெளியே செல்வதானால் தனிப்பூட்டையும் உபயோகித்தோம்.
சனிக்கிழமை காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு ஆஃபீஸ் பஸ் பிடிக்க போனேன். என்ன ஆச்சர்யம் கார்த்தி பஸ் ஸ்டாண்டில் பெட்டி படுக்கையுடன். அடடே கார்த்தி நீ தாதர் பஸ்ல தானே வருவ, தாணா எப்படி வந்தே என ஆச்சர்யமாய் கேட்டேன்.
கார்த்தி என்னை எரித்து விடுவது போலப் பார்த்தான். .ஏண்டா ராத்திரி 10:30 ல இருந்து 11:30 வரைக்கும் கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டறேன் திறக்காம இப்ப கேள்வி கேட்கறயா? நான் தான் வர்ரேன்னு சொல்லி இருந்தன்ல.. ஏன் பூட்டு போட்டே? கடைசியில இந்தப் பாடாவதி லாட்ஜில இடங் கெடச்சது பிழைச்சேன். இல்லாட்டி ரெயில்வே பிளாட்ஃபார்ம்தான் என்று தாளிச்சுட்டான்..
ஸாரி எனக்கு மறந்துருச்சி.. சத்தியமா வேணும்னு செய்யலை.. எனக்குத் தூக்கம் வந்தா ஒண்ணும் தெரியாது அப்படி இப்படின்னு கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டுகிட்டேன்..
இதோட கதை முடிஞ்சது அப்படின்னு நினைச்சிங்களா? இல்லை. இன்னும் இருக்கு.
தொடரும்.
Bookmarks