மார்க்கெட் பக்கம் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்குமந்த கடைக்கு அருகில் கூட்டமாக இருந்தது.கடைக்குப் போனவன் என்னவாகஇருக்குமென்ற ஆவலில் கூட்டத்தில் நுழைந்து பார்த்தேன்.முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணை நான்கைந்துபேர்
அடித்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் கட்டிடவேலை செய்பவர்கள்போல இருந்தார்கள்.வழக்கம்போல விலக்கிவிட
நான்குபேர்.விலக்கிவிட யாராவது இருக்கும்போதுதான் அடிப்பவர்களுக்கு வீரம் பொங்கிக்கொண்டு வரும்.அவர்களும் அப்படியேதான் சின்னச் சின்ன இடைவெளிவிட்டு எகிறிக்கொண்டிருந்தார்கள்.அடிபடுபவன் முகத்தில் வழியும் ரத்தத்துடன் பரிதாபமாக இருந்தான்.சிறிது கறுப்பாக,மெலிதான சோகம் முகத்தில் தெரிய நம்ம ஊர் ஆளைப்போல இல்லாமல் இருந்தான்.
பொறுக்க முடியாமல் அருகில் சென்று அடிப்பவர்களைத் தடுத்து\"ஏன்யா இந்த ஆளை அடிக்கிறீங்க ஏதாவது திருடிட்டானா?\" என்று கேட்டதற்கு அந்த ஆட்கள்\"எங்க பொழப்பையே திருடுறானுங்க இவனுங்க\"என்றதும் புரியாமல்\"என்னயா சொல்ற?\"
\"ஆமா சார் இவனுங்க இலங்கை அகதிங்க.இங்க இருக்கற முகாம்லதான் தங்கியிருக்கானுங்க...நாங்கல்லாம் கட்டடவேலை
செய்றவங்க.பாருங்க இந்த கடை கட்ற இடத்துலயும் நாங்கதான் வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம்..இப்ப அந்த மேஸ்திரி எங்களை
வேனான்னு சொல்லிட்டு இவன் கூட இன்னும் மூணுபேர வெச்சிக்கிட்டாரு...கேட்டா உங்களவிட கூலி குறைவாக் கேக்குறாங்க
நல்லாவும் வேலை செய்றாங்க அதனால இவங்களே போதும்ன்னு சொல்லிட்டாரு. இவங்க இப்படி கொறஞ்ச கூலிக்கு வேலை செஞ்சாநாங்கல்லாம் என்ன பன்றது?\"ஆத்திரமா கேட்டவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்,\"சரி
விடுங்கய்யா...பாவம் சொந்த பந்தங்களையெல்லால் பறிகுடுத்துட்டு அவங்களே ஆதரவில்லாம் இங்கே வந்து பொழைக்குறாங்க
அவங்களைபோய் அடிக்கிறீங்களே..நான் பேசிக்கிறேன்\" என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட ஆளை தனியாக கூட்டிக்கொண்டு
வந்தேன்.அதே மார்க்கெட்டில் எனக்கும் நான்கு கடைகள் சொந்தமாக இருப்பதால் அவர்களுக்கு என்மேல் மரியாதை இருந்தது.அதனால் ஒன்றும்சொல்லாமல் போய்விட்டார்கள்.பிரச்சனை பெரியதுதான்.என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு அந்த ஆளைக் கூட்டிக்கொண்டுமுதலில் மருத்துவரிடம் சென்று முதலுதவி செய்துகொண்டு அவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அவரை அழைத்துச் சென்றேன்.
அந்த முகாம் இதற்கு முன்பு அரசாங்க பண்டகசாலையாக இருந்தது.அங்கிருக்கும் பாதாம் மரங்களில் ஏறி சிவப்பாய் பால் வழியும்
அந்த பாதாம் காய்களைப் பறித்து கல்லால் அதை உடைத்து பருப்பை சுவைப்பது என்னுடைய சின்ன வயது பொழுதுபோக்குகளில்
ஒன்று.நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்ததும் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது.மூன்று நீண்ட பெரிய ஹால் போன்ற
அந்தக் கட்டிடங்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்ப்ட்டிருந்தனர்.சிலர் குடும்பத்துடன் இருந்தனர்.சிலர் தனியாக.அங்கு
அவர்களின் நிலையைப் பார்த்ததும் மனம் சங்கடப்பட்டது.எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரே ஹாலில் இவ்வளவு
பேரையும் அடைத்து வைத்திருந்தார்கள்.
ஒரு பாயும் அழுக்கான ஒரு தலையணையும் தரையில் இடப்பட்டு அதனருகே அவர்கள் நாடுவிட்டு வந்தபோது அவசரத்தில் கையோடுகொண்டுவந்திருந்த ட்ரங்குப் பெட்டிகளும் சில பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பாயும் அதனருகில் இருந்த அவர்களின்உடமைகளும் வைக்கப்பட்டிருந்த பகுதி ஒரு குடும்பத்துக்கு என்றவிகிதத்தில் நிறைய குடும்பங்கள் இருந்தார்கள்.
இதில் எத்தனை செல்வந்தர்கள் இருப்பார்கள்..எத்தனை குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு
வந்திருப்பார்கள்...எத்தனைப் பெண்கள் இதுநாள்வரை வீட்டைவிட்டே அதிகம் வெளியில் போகாமல் சந்தோஷமாக
இருந்திருப்பார்கள்..அனைவரும் இப்போது இந்த தேசத்தில்,ஆதரவுக்கு யாருமில்லாமல் அவர்களுக்கு அவர்கள்தான் சொந்தங்கள் என்ற நிலையில் அரசாங்கம் அளித்திருந்த அந்த தாற்காலிக தங்குமிடத்தில் துக்கத்தை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
அவன் பேசத் தொடங்கினான்.சமீபத்தில் தெனாலி படம் பார்த்திருந்ததால் அந்த தமிழ் நன்றாகவே புரிந்தது.புரியாத சொற்களையும்
அனுமானித்துக்கொண்டேன்.\"எங்க தேசத்தில்...இப்ப அப்படி சொல்றதுக்கு அங்கே என்ன இருக்கு?\" என்று அவனை அவனே
கேட்டுக்கொண்டு தொடர்ந்தான்...\"நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்துக்கிட்டிருந்தோம்.முதல் முறை யுத்தம் நடந்தபோதுகூட எங்கள்
பகுதியில் அவ்வளவா பாதிப்பு இல்லை.ஆனால் இந்தமுறை சிங்களப் படைகளோட அக்கிரமம் ரொம்பவும் அதிகமாகிவிட்டது.இதோ
இங்கே நிக்கற என்னோட மகள் இவ ஒருத்திதான் இப்ப எனக்குன்னு சொல்ல ஒரே சொந்தம்.அருகிலிருந்த எட்டுவயது சிறுமியை
அனைத்துக்கொண்டே,என் மனைவி...\"என்று சொன்னவன்...அந்த நிகழ்வின் பாதிப்பு நினைவில் தோன்ற கண்கள் கலங்க சிறிது நேரம்அமைதி காத்து மகளையும் பார்த்தவாறே\"என்னன்னு சொல்றதுங்க...இந்த பிஞ்சு குழந்தையோட முன்னாலயே அத்தனையும்
நிகழ்ந்தது.எல்லாத்தையும் இழந்துட்டு இனி அங்கே எனக்கு வாழ்க்கையில்லைங்கறதால அங்கேருந்து கிளம்பினவங்களோட நானும்
என் மகளைக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டேன்.அதுலருந்து கொஞ்ச பேரை இந்த ஊருல இருக்கிற இந்த முகாமுக்கு
கொண்டுவந்தாங்க.வந்ததிலிலருந்து அரசாங்கம் கொடுக்கிற உதவியிலதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தோம்.பிள்ளைங்களெல்லாம்
நல்ல சோறுக்கு ஆசைப் பட்டதுங்க. படிக்கனுன்னு சொல்லுதுங்க.ஆனா அது முடியுமோ என்னவோ..நல்ல சோறாவது
கொடுக்கலாமேங்கறதால வெளி வேலைக்குப் போக அனுமதி வாங்கிக்கிட்டு போக ஆரம்பிச்சோம்.எவ்வளவு கூலின்னாலும்
பரவாயில்லை,வேலை எவ்வளவு கஷ்டமின்னாலும் பரவாயில்லைன்னு நெனைச்சுகிட்டு கிடைச்ச வேலையை
செஞ்சுகிட்டிருக்கும்போதுதான் இன்னைக்கு என்னை அடிச்சவங்க தொடர்ந்து ரெண்டு மூனு நாளா ஓடிப் போய்டுங்கன்னு மிரட்டிகிட்டேஇருந்தாங்க.நாங்க சொல்றது அவங்களுக்குப் புரியல.எங்க வேதனையையும் அவங்க புரிஞ்சிக்கல.அதுவுமில்லாம இன்னைக்கு காலையில அவங்க வேலைக்கு வந்தபோது மேஸ்திரி அவங்களை வேண்டான்னு சொன்னப்ப ஆத்திரப்பட்டு என்னை
அடிச்சிட்டாங்க.பாவம் அவங்களுக்கும் அவங்களோட வேலையைப் பத்தின பயம் வந்திருக்கும்.அவங்களை நான் குறை
சொல்லல...எங்க விதியை நினைச்சுத்தான் நான் வேதனைப் படறேன்.\"தொண்டை அடைக்க கடைசியாய் சொன்ன சொற்கள் உடைந்து மெல்லியதாக விசும்பத் தொடங்கினார்.நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அந்த நாகரீகமான அழுகையில் தெரிந்தது.அவர்மேல் எனக்குப் பரிதாபமும்,மரியாதையும் ஒருங்கே வந்தது.
அந்த கூடத்தில் இருந்த பெரும்பாலோர் எங்களை கூடியிருந்தனர்.நான் ஏதோ அரசாங்க அதிகாரி என்று நினைத்துவிட்டனர்.ஆனால்
எங்கள் பேச்சைக் கேட்டதும் அவர்களின் சோகம் கேட்கும் ஒரு சாதாரன உள்ளூர்க்காரனென்று விளங்கிக்கொண்டு அவரவர்
வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.எத்தனைப் பேரிடம் அவர்களின் சோகத்தை இறக்கிவைத்திருப்பார்களோ...இப்போது ஒருவித
சலிப்பு மனநிலைக்கு வந்து விட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியாது.ஆனால் எங்கள் இரண்டு பேரையுமே மாறி மாறி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த
அந்த சின்னப் பெண்ணுக்காவது ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டு.\"உங்க மகளை வேணுன்னா பள்ளிக்கூடத்துல
சேர்க்கமுடியுமான்னு பாக்கலாமா?\"நான் கேட்டதும் எங்கிருந்துதான் அந்த ஒளி வந்ததோ அவருடைய கண்களில்...மிகப் பிரகாசமாகி ஒருவித பரபரப்புடன்\"உங்களால முடியுமாய்யா.?\'என்று கேட்டார்.
\"முயற்சி செய்யலாம்.முதல்ல நான் தாசில்தார்கிட்ட பேசறேன்.அகதிகளுக்கு ஏதாவது அரசாங்க சட்டம் இருக்கும்.அதைப் பற்றி
தெளிவாக தெரிந்துகொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்\" என்று சொல்லிவிட்டு விடைபெறும்போது தயக்கத்துடனே நான் கொடுத்தபணத்தை வாங்க மறுத்துவிட்டார்.
அன்றே தாசில்தாரை சந்தித்து விவரம் சொன்னபோது அவர் என்னைப் பார்த்த பார்வையில் உங்களுக்கு ஏன் சார் இந்த வேண்டாத
வேலை என்று நினைப்பது புரிந்தது.அதை சொல்லவும் செய்தார்.\'சார் இவனுங்களுக்கெல்லாம் சொந்தக்காரங்க கனடா,இத்தாலின்னு
வெளிநாட்டுல இருக்காங்க,அதுல யாராவது ஒருத்தங்க கூட்டிகிட்டுப் போய்டுவாங்க..அப்புறம் நீங்க இவ்வளவு செஞ்சதெல்லாம்
வீணாயிடும்\"என்று சொன்னவரிடம்.\"பரவாயில்லை சார்..அட்லீஸ்ட் இங்க இருக்கறவரைக்குமாவது
படிச்சிக்கிட்டிருக்கட்டுமே\"என்றேன்.\"சரி உங்க இஷ்டம்.லோக்கல் கார்டியனா நீங்க கையெழுத்துப் போட்டு ஒரு விண்ணப்பம் குடுங்கபாக்கலாம்\"வேண்டாவெறுப்பாய் சொன்னவருக்கு நன்றி சொல்லிவிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.நகரத்தில் ஒரு முக்கியமான நபர் என்பதால் அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.கையெழுத்துப் போட்டுவிட்டு அந்த துறை ஊழியர்களிடம் கொடுத்து ஆவன செய்யும்படி சொல்லிவிட்டார்.
நகராட்சிபள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.புத்தகப்பையுடன் பள்ளிக்கு கிளம்பிய அந்த பிஞ்சு முகத்தில் சந்தோஷமும் பயமும்
கலந்து தெரிந்தது.பள்ளியில் சேர்த்துவிட்டு கொஞ்ச நாள் என்னுடைய வேலையில் மூழ்கிவிட்டதால் அவர்களைச் சந்திக்க
முடியவில்லை.20 நாட்களுக்குப் பிறகு அந்த முகாமுக்குப் போனபோது அந்த சிறுமி கட்டையில் தீக்குச்சி
அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவளுடைய தந்தை நைந்துபோன ஒரு கைலியை உடுத்திக்கொண்டு அவரும் அதே வேலையில்
ஈடுபட்டிருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது.
\"நிரஞசன் ஏன் நிஷாந்தி ஸ்கூலுக்குப் போகலையா?நீங்க ஏன் இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கீங்க.\" என்று கேட்டதும்.அவசரமாய் எழுந்து என் அருகே வந்தவர்,மிகுந்த தயக்கத்துடனும்,லேசான குற்றவுணர்வுடனும்\"சார் இவ கதைக்கறது அந்த பள்ளிக்கூடத்துல இருக்கற பசங்களுக்குப் புரியலையாம்..அதிகமா கிண்டல் பண்ணியிருக்காங்க...பாவம் சின்னப் பிள்ளை பயந்துட்டா.பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு அடம் பிடிக்கறா...எனக்கும் வெளியில வேலைக்குப் போனா நிறைய பிரச்சனை அதனாலத்தான் இங்கே இருந்து செய்யறமாதிரி இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கோம்.இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட முடியுது.பார்க்கலாம் ஆண்டவன் இன்னும் எத்தனை நாளைக்கு எங்களை சோதிக்கறான்னு.நல்லநேரம்ன்னு ஒண்ணு வராமலா போய்டும்..?\"
அந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை...ஆனால் அவருடைய எதிர்பார்ப்புகள் நிஜமாகவேண்டுமென்றும் அந்த நல்லநேரம் விரைவில்வரவேண்டுமென்றும் மனம் விரும்பியது.
Bookmarks