சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான இடைவெளி
ஓர் ஞானி கடவுளுடன் கதைக்கும் வல்லமை பெற்றிருந்தார். ஒரு தடவை கடவுளுடன் பேச்சிலீடுபட்டிருக்கும்போது தான் "சொர்க்கத்திற்கும்", "நரகத்திற்கும்" இடையிலான வித்தியாசத்தை/ வேறுபாட்டை அறிய விருப்பப்படுவதாக கூறினார்.
உடனே கடவுள் இரண்டு கதவுகளை அவர் முன் வருவித்து அவற்றினுள் சென்று பார்க்க அனுமதித்தார்.
ஞானி முதலாவது கதவை திறந்தார்...
அறையின் மையத்திலே ஒரு பெரிய வட்ட மேசை,மேசையின் மையத்திலே பெரிய வட்ட வடிவிலான சூடான உணவுப் பண்டம் மிக்க நல்ல வாசத்தை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. அதன் வாசனை இந்த ஞானியின் வாயை உமிழ்நீரால் நிரப்பிவிட்டது.
அந்த உணவுப் பண்டங்களை சூழ்ந்திருந்தோர் மிகவும் மெலிந்தோராகவும் வறுமையில் வாடியோராகவும் காணப்பட்டதுடன் பசியுடனும் இருந்தனர். அவர்கள் கையில் பற்றியிருந்த கரண்டி, கைபிடி மிகவும் நீண்டதாக, அவர்கள் கைகளின் நீளத்திலும் சற்று அதிகமானதாகவும் காணப்பட்டது.அவற்றின் உதவியால் பாத்திரத்திலிருக்கும் உணவினை தாராளமாக அள்ளிக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் கையின் நீளத்திலும் அதிகமாக இருப்பதால் எடுத்த உணவு அவர்களுடைய வாயை இட முடியாத நிலையில் காணப்பட்டனர்.
இதனைக்கண்ட ஞானி மிகவும் கவலையுற்ற நிலையில் சோர்ந்து காணப்பட்டார்.
கடவுள் குறிக்கிட்டு, "இப்போது நீ பார்த்தது நரகம், சொர்க்கத்தையும் பார்" என்று சொல்லி, சொர்க்கத்தை பார்க்க அனுமதித்தார்...
அடுத்த கதவை திறந்த ஞானி, அங்கேயும் நரகத்தில் பார்த்த மேசை ஒழுங்குமுறை, உணவுவகை, மற்றும் கரண்டி போன்றவற்றை பார்த்தார். ஆனால் அந்த அறையிலிருந்த மனிதர்கள் மிகவும் சந்தோஷமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் தங்களுக்கிடையே சிரித்து கதைத்துக் கொண்டுமிருந்தனர்.
இவற்றை கவனித்த குழம்பி நின்ற ஞானி, "எனக்கு ஒன்றுமே விளங்கவில்லயே" என்று கடவுளிடம் விளக்கம் கேட்டார்.
"மிகவும் எளிதான ஒன்று" என்று கடவுள் விளக்கத்தை அளிக்க ஆரம்பித்தார்.
சொர்க்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரு இயல்பு அதிகமாக காணப்படுகிறது,அவர்கள் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த தெரிந்தவர்கள். அடுத்தவன் தேவைகளை பூர்த்திசெய்யும் மனப் பக்குவம் அடைந்தவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.
பி.கு: மின்னஞ்சலில் கிடைத்தது. படித்துவிட்டு அதன் சாராம்சத்தை எழுதியுள்ளேன்.
Bookmarks