சில விஷயங்கள் சில வேளைகளில் நமக்கு பல நினைவுகளை கிளறும். அதே தான் இன்றும் நடந்தது... டி.வி.யில் இன்று "League of Extra-Ordinary Gentlemen" படம் போட்டார்கள். பார்க்கையில் இதை எங்கே முதன்முதலில் பார்த்தேன் என்று நினைவு சுழன்றது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்....
உங்களுக்கு முன்னால் ஒரு சக்கரமோ இல்லை ஒரு கொசுவர்த்தி சுருளோ சுத்துவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சும்மா கொஞ்ச நேரத்துக்கு தான்.
அந்த படத்தை முதன்முதலில் பார்த்தது மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில். இப்போ சொல்லவந்தது படத்தை பத்தி இல்லை.. கோச்சுக்காதீங்க.
கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைத்தது மதுரையில் தான். ட்ரெயினியாக இருந்தேன். அதே கல்லூரி போன்ற வாழ்க்கை. செலவழிக்க கொஞ்சம் பணம். வீட்டிலிருந்து முதல் முறையாக வெளியுலக வாசம். எந்நேரமும் வேலையிலிருந்து தூக்கியெறியப் படக்கூடிய அபாயம். இப்படி பல விஷயங்களும் அந்த 6 மாத கால மதுரை வாழ்க்கை எங்களை அரற்றியிருந்தது. நெருக்கடி என்றால் என்ன என்று முதன் முறையாக அங்கு தான் கண்டோம். எப்போது யாரை கூப்பிட்டு வெளியே அனுப்புவார்கள் என்று தெரியாது. அந்த பயத்துடனே வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. இப்போ அதைப் பத்தியும் சொல்லப் போறதில்லை.. அடிக்க வராதீங்க... சொல்றேன்.
இந்த வாழ்க்கையில் எங்கள் வசந்தம்னு சொன்னால் தியேட்டர்கள் தான். மதுரை ஊர் முழுக்க தியேட்டர்கள். அதுக்குன்னே பேர் பெற்ற ஊர். எங்க பொழுதுபோக்கே படம் பாக்கறது தான். ராத்திரி பத்து மணி வரைக்கும் ஆபிஸிலே இருப்போம். எவனாவது கிளப்பிவிடுவான். பத்தேகாலுக்கு ஏதாவது ஒரு தியேட்டர்ல இருப்போம். அப்படி தான் ஒருநாள் ஏதோ ஒரு புதுப்படம் வெளியாகி இருந்தது. அந்தவாரம் தேர்வு இருந்ததால யாருக்கும் படம் போகணும்னு எண்ணம் இல்லை. எல்லோரும் சாப்பிடாம கூட வேலை பாத்துகிட்டு இருந்தோம். அதுல ஒருத்தன் ரொம்ப நொந்து போய் 'டேய் எல்லோரும் வாங்கடா..படத்துக்கு போலாம். என்ன படிச்சாலும் நடக்கறது தான் நடக்கும்னு' கிளப்பிவிட்டுட்டான். முதல்ல யாரும் கிளம்பல. வாழ்க்கைய பத்தின பயம் தான். கடைசியா அஞ்சு பேர் மட்டும் கிளம்பினோம். அந்த அளவு விரக்தி. சாப்பிட கூட இல்லை. தியேட்டர் போய் அவசர அவசரமா டிக்கெட் எடுத்தாச்சு. இன்னும் 10 நிமிஷத்துல படம் போட்டுடுவான். பசி வயித்தை கிள்ள ஆரம்பிச்சுது. அந்த ஏரியால சுத்தமா கடைகளே இல்ல. கொஞ்சம் நடந்தா ஒரு பொட்டிக் கடை இருந்துச்சு. அங்க ஒரு பாட்டி இருந்தாங்க. லாந்தர் விளக்கு மட்டும் தான்.
சின்ன வயசில பார்த்திருந்த ஐட்டங்களான கமட்கட்டு, கடலமிட்டாய், வத்தல், இலந்தவடை, தேன்குழல்..இத்யாதி இத்யாதின்னு ஏகப்பட்டது இருந்தது. இதெல்லாம் இன்னுமா இருக்கு நம்ப முடியல. பசிக்கு எல்லோரும் பாக்கெட் எடுத்து காலி பண்ண ஆரம்பிச்சுட்டோம். ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி சாப்பிட்டது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. ஒரு வழியா எல்லோரும் அவசர அவசரமா சாப்பிட்டு வயித்தை நல்லா ரொப்பிகிட்டு அந்த பாட்டிகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு எவ்ளோன்னு கேட்டோம். அப்படியே ஷாக்காயிட்டோம்.
மூணு நாலு அயிட்டம் அஞ்சு காசு, பத்து காசுனு விலை சொன்னாங்க. அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் உண்மையிலேயே அந்த இடத்தில் தான் மதிப்பைக் கண்டோம். மொத்தமா நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து வயிறு நிறைய சாப்பிட்டிருந்தது 12 ரூபாயோ என்னவோ. மொத்தமா 20 ரூபா குடுத்துட்டு கிளம்பினோம்.
இன்னிக்கு பெங்களூரில் என்ன வாங்கினாலும் அஞ்சு ரூபாய் பத்து ரூபாய்க்கே மதிப்பில்லை. இதுல அஞ்சு காசை எங்க போய் தேடுறது. அதுலேயும் அந்த கமர்கட், தேன்குழல்..ம்ஹூம்.. எங்கியாவது கிடைக்கும்னு தோணல. என்ன தான் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் அன்னிக்கு கிடைச்ச திருப்தி கிடைக்கறதில்லை.. ஏதோ இன்னிக்கு ஞாபகம் வந்தது.. அதான் சொன்னேன்..வர்ட்டா..
Bookmarks