சினிமா விமர்சனம் - மாறுபட்ட கண்ணோட்டம் - இறுதிப்பகுதி
அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு?
அது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கு, பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப விரும்புகிற வர்க்கத்திற்கு
உலகமயமாக்கம் குறித்த தத்துவஞான உபதேசம்! அன்றாட வாழ்விஒல் பார்ப்பனியச் சாதிய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்துப் போராட முனையாத எல்.ஐ.சி. வர்க்கத்துக்கு வரலாற்றில் பார்ப்பனமயமாக்கம், பூகோளத்தில் சமஸ்கிருதமயமாக்கம் குறித்த ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள்.
களத்தில் ந்திற்கும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு தீக்கதிர் சார்பில் தீபாவளி மலர், திருவண்ணாமலை தீபம் சிறப்பிதழ்,; தொழிலாளி வர்க்கம் தம் அன்றாட வாழ்வில், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கு வழிகாட்ட தீக்கதிர் நாட்காட்டி, அதில் இந்து, கிறித்துஅவ, இசுலாமியப் பண்டிகைகளின் பட்டியல், ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூலம் இன்னபிற... இன்ன பிற...
இது இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல, இரட்டை வேடம்! மார்க்சிஸ்டு கட்சியின் இந்த அரசியல் இரட்டை வேடத்தை அறம் சார்ந்த இரட்டை வேடமாக வெளிப்படுத்துகிறான் நல்லசிவம்.
நண்பர் மதன் தன்னை விருந்துக்கு அழைத்த இடம் முதலாளியின் வீடு என்று தெரிந்த பின்னரும் உள்ளே நுழைகிறான்.(இதிலென்ன தப்பு தோழரே, நாம பேச்சு வார்த்தைக்கு முதலாளி விட்டுக்குப் போறதில்லையா, அறிவொளி இயக்கத் தோழர்கள் கலெக்டர் விருந்துல கலந்துக்கிறதில்லையா?)
முதலாளி மகள் கைத்தவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். (நம்ம எழுத்டஹளர்கள் குமுதத்தில் போட்டிக் கதை எழுதிப் பரிசு வாங்குறதில்லையா?)
அவள் 'சாரி' என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். (பி.ஜே.பி.யை ஆதரிச்சதுக்கு 'சார்' ன்னு ஜெயலலிதா சொன்னவுடனே நாம கூட்டணி வச்சுக்கிறலயா?)
இப்படி ஒரு பட்டியல் போடலாம். அன்பரசுவுக்கு அடுத்து நல்லசிவத்துடன் உறவு வைக்கும் முக்கியப் பாத்திரம் அவன் காதலி - அதாவது முதலாளியின் மகள். " தொழிலாளிகளுக்கெதிராக முதலாளி(காதலியின் அப்பா) செய்யும் சதியை அவளை வைத்தே வேவு பாக்கலாம்" என்று தொழிற்சங்கத் தோழர் கூறியவுடனே அதை நிராகரிக்கிறான் நல்லசிவம்.
இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்: இது நேர்மையற்ற வழிமுறை.
"தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக் கொள்ளும் அறநெறிகளின்படி நடத்த வேண்டும்" என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால் காந்தியிடம் பார்க்கலாம்; நிகழ்காலத்தில் அந்த தார்மீக ஆவேசத்தை சோம்நாத் சாட்டர்ஜியிடம் பார்க்கலாம்.
'புனிதமான' அரசியல் சட்டத்தின் மீதும் அது எழுந்தருளியுள்ள பாராளுமன்றக் கருவறையின் மீது சங்க பரிவாரத்தினர் காலைத் தூக்கி அலட்சியமாக ஒன்னுக்கடிக்கும்போது, சாட்டர்ஜியின் முகத்தில் ஒளிரும் தார்மீக ஆவேசத்தையும், வாஜ்பாயிடம் நீதி கேட்கும் போது துடிக்கும் அவருடைய உதடுகளையும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
பாத்திரங்களை மிக நுட்பமாக ஆய்வு செய்து தனது நடப்புக்கு மெருகேற்றிக் கொள்ளும் கமலஹாசன் இந்தக் காட்சியைப் படமாக்குமுன் சிறிது நேரம் தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்திருந்தால் காட்சி வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படியொரு அறம் வழுவிய யோசனையைச் சொன்ன தோழரை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பான் நல்லசிவம்!
இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் வரவேற்பறையில் ஓவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் 'அறவுணர்வு' தடுக்கவில்லை. "கலை விலை போகலாம்; கலைஞன் விலை போகக் கூடாது" என்று அவன் சார்பாக அவனுடைய காதலி தத்துவ விளக்கம் தந்து விடுகிறாள்.
மேலும் சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ. 910 -ஐயும் நல்லசிவம் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்திற்குள் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவது போல!
மார்க்சிஸ்டு கட்சியின் அரசியலும் அவர்களது அழகியல் ரசனையும் துல்லியமாக ஒன்றுபடும் ஒரு காட்சியும் படத்திலிருக்கிறது. கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும் கூலிப்பட்டாளத்தைத் தன்னந்தனியே நின்று சமாளிக்கிறார் ஹீரோ. நகைச்சுவை நடிகர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது.
"இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று முழக்கமிட்டபடியே கமலஹாசனுக்குப் பின்னே அணுவகுக்கிறார்கள் தோழர்கள்.
"இந்தப் படை போதுமா...." என்று தி.மு,க., அ.தி.மு.க. வின் பின்னே மார்க்சிஸ்டுகள் கோஷம் போட்டுச் சென்ற காட்சிகளையும், சிரிக்கும் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம் எனத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் போராட்ட முறைகளையும் மனதில் ஓடவிடுங்கள். அந்த அரசியல் இந்தக் காட்சியின் அழகியலுக்குக் கனகச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.
படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முதலாவதாக, பிரளயனின் வீதி நாடகக்குழு. சகல கலா வல்லவனான ஹீரோவுக்கு அவர்கள் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, நாசர். வாய்க்கு வாய் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லிக் கொண்டே வில்லன் வேலை செய்யும் எம்.ஆர்.ராதா வகைப்பட்ட பாத்திரம் அவருக்கு. கமலஹாசன் கூறுகின்ற உலகமயமாக்க சகாப்தத்தின் வகைமாதிரி இவரல்ல. அது யார் என்பதை ஏற்கெனவே சொல்லிவிட்டோம்.
பேச்சில் கடவுளும், செயலில் கயமையுமான கதாப்பாத்திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே போதிய அளவு சித்தரித்து விட்டன. "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறும் இந்த முதலாளிதான் "ஜெய் சீயாராம்" என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையலாம். குஜராத் படுகொலைக்கு 'பைனான்ஸ் பண்ணியவர்கள் என்.ஆர்.ஜ. யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
இந்த சூட்சுமம் புரிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட இல.கணேசன் படத்தைப் பாராட்டிவிட்டார். நாசர் பாத்திரத்தைக் காட்டி "உங்களுக்குக் கோபம் வரவில்லையா?" என்று அவரிடம் கேட்டால் "நான் அவனில்லை" என்று பதில் சொல்லிவிடுவார்.
இத்தகைய தொலைநோக்கில்லாத ஓட்டைவாயான இராம.கோபாலன் படத்தை எதிர்க்கிறார். "யார் யாரு சிவம்" என்ற பாடல் காட்சியில் கன்னிகா ஸ்திரி சிலுவை போடுவது மட்டும்தான் அவரை அலைக்கழித்திருக்கும்.
இல.கணேசனைக் கேட்டிருந்தால் "கிறித்துவர்கள் சேவை செய்வதை நாங்கள் மறுக்கவில்லையே. அதை வைத்து மதமாற்றம் செய்வதைத்தானே கண்டிக்கிறோம்" என்ற மிகச் சுலபமாக இந்தக் காட்சிக்குள் நுழைந்து வெளியே வந்துவிடுவார்.
"மோசமான ஒரு முதலாளியை இந்து ஆன்மீகவாதியாகச் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மதவுணர்வைப் புண்படுத்திவிட்டீர்கள்" என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள். "நானே ஆன்மீகவாதிதான், நான் தான் கடவுள்" என்று கண் சிமிட்டுவார் நல்லசிவம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, 'இந்து மதவெறி' என்று பெயர் சொல்லிக் கண்டிக்காமல் "கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு?" என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்கள் மார்க்சிஸ்டுகள். "எங்கள் இந்துமத உணர்வைப் புண்படுத்திவிட்டீர்கள்" என்று குற்றம் சாட்ட முடியாமல் தவித்தார்களே ஆர்.எஸ்.எஸ். காரர்கள்! அதே உத்தி தான்!
படத்தில் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் வருத்தப்பட்டால் அவர்களுக்குச் கூறிக் கொள்கிறோம்: "ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனைத் துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை சி.ஐ.டி.யூவின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்று உண்மை காட்சிக்குக் காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
(முற்றும்)
நன்றி:
சினிமா: திரை விலகும் போது.. (புத்தகம்)
கட்டுரையாளர்: தோழர். மருதையன்
Bookmarks