அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர் - பாகம் 1
நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா?? அதற்கு அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? - அதற்கும் அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் - என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அந்நிய நேரடி முதலீடு.
ஒரே அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அந்நிய நேரடி முதலீடு (FDI) எனப்படுகிறது. இதற்கு அந்த அந்நிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அந்நிய நிறுவனங்கள் இதற்காக நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.
"பிரிட்ஜ் ஸ்டோன்" என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் "ஃப்யர்ஸ்டோ ஸ்டோன்" டயர் கம்பெனியை 1988-இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதே போலத் தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%-க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அந்நிய நேரடி முதலீடுதான் என்று தாராளமயதாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.
"உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது ஆனால், அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?" என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.
ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அந்நிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப்பங்கு, திறன் கட்டணம் - எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ.95 கோடி வீதம் விழுங்கியது. இப்போது பல்வேறு அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அந்நியச் செலாவணி வெகுவிரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?
ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அந்நிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 1995-2003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இது தான் நடந்தது. அந்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998-இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: UNCTAD அறிக்கை, 2005)
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத்தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின் சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அந்நிய மூலதனம் நுழைகிறது.
அந்நியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அந்நிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை.
(அந்நிய நேரடி முதலீட்டின் விளைவுகள் அடுத்த பகுதியில் நிறைவடையும்..)
நன்றிகள்: புதிய ஜனநாயகம் (செப்டம்பர் 2007) மாத இதழ்
அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின் மறுபெயர் - நிறைவு பகுதி
Bookmarks