இனம் விட்டுப் பிரிந்து
மொழி களைந்து
கடல் கடந்து
புது மொழி பயின்று
புது உறவு கண்டு வியந்து
பழையது பற்றி
அவதூறாக பேசி பொழுதைக்
கிழித்திடும் வேடிக்கை மனிதன்
போலும் வேஷம் போடும்..
காலை முதல் மாலை வரை
இந்தியக் கல்வியை
அயலானுக்கு
தவணை முறையில் விற்று
மாலை வீடு வந்து
தொலைக்காட்சி செய்தி
கண்டு வெட்டியாய்
வியாக்கியானமும் பண்ணும்..
ஒன்றுமே இல்லை
என்றும் எல்லாம்
தாய் நாடுதானென்றும்
பணப் பொறியில் அகப்பட்ட
எலியாய் வாழ்வாதாயும்
மற்ற படி நிம்மதி
இங்கில்லையென்றும்
ஒப்பாரியும் வைக்கும்..
பார்வை விசாலனம்
ஏதுமற்ற இருண்ட
தனிமையில்
இருப்பது போலவும்
உலகமே கைக்குள்
அடக்கம் என்பது
போலவும்
நரம்பில்லா நாவை
மாற்றியும் பேசும்..
நத்தை வாழ்வு
வாழ்ந்து கொண்டு
ஊர்க்குருவி
வாழ்வு வாழ்வதாய்
புறம் பேசித் திரியும்..
என்ன செய்வது
மாயமான் வேட்டைக்குப் போன
இந்த நடிப்பு விதேசிகளை?
பாவப்பட்டவர் கணக்கில்தான்
சேர்க்க வேண்டும்..
Bookmarks