திரிகோணம்----03
இலண்டன் வந்ததும் பல்கலைக்கழகத்துடன் எனது பெரும் பொழுதும் பகுதிநேர வேலையாக "மாருதம்" வானொலியில் நிகழ்ச்சித்தொகுப்பாளனாக மீதிப்பொழுதுமாக ஆண்டுக்காலன்டர் மூன்று குப்பைக்குப் போய் நாலாவது காட்டியின் பாதிக்குமேல் பாரம் குறைந்துவிட்டது.அன்று வழக்கம்போல மாருதம் பணியகம் சென்றேன்.செல்லும் வழியெல்லாம் இயற்கையாலேயே குளு குளு என ஏசி செய்யப்பட்டிருக்க பணியகத்திற்கு உள்ளே வெதவெதப்பான காலநிலை இருந்தது. வருகைப்பதிவேட்டில் நானும் வந்தேன்ல என்பது போல முத்திரை பதித்துவிட்டு தொகுப்பாளர்கள் ஓய்வு அறைக்கு போனேன். வீட்டிலிருந்து வந்ததும் ஓய்வு அறையா என் கிண்டலாகச் சிரித்தால் நிச்சயமாக நீங்கள் சொந்தமாக தொழில் செய்பவராகவே இருக்கவேண்டும். சரி கதைக்கு வருவோம்.. ஓய்வு அறைக்கு வந்து இளங்சூடான தேனீர் அருந்திவிட்டு நிகழ்ச்சிக்கான தயாரிப்புக்கு ஆயத்தாமக சற்றுமுன்னர் பணிப்பாளர் அழைப்பதாக தகவல் வந்தது.
பணிப்பாளர் நடராஜாவை தாங்கி நின்ற கதவுக்கு முன்னால் சொடக்கிவிட்டு (தட்டினால் பெரிசு சத்தம் போடாதீங்கன்னு கத்துமே) உள்ளே நுழைந்தேன்.
"வாப்பா பாமரன். இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலை முடியுது"
யாரு அது பாமரன்னு நீங்க அங்கலாய்ப்பது கேட்கிறது. பண்பலையில் எனது குரலை சேர்த்த நாள்முதல் எனக்கு பாமரன் என்று பட்டாபிஷேகம் செய்துவிட்டது நட'ராஜா'.
"இன்னைக்கு ஞாயிறு ஆகையால் மதியம் ஒரு மணி ஆகும்சார்"
பெரிசு போட்டிருந்த மூக்குக் கண்ணாடியின் கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு
"அப்படியா..."என்னு யோசிச்சுது...அப்புறம்
"ஒரு மணிக்கு ஒரு பொண்ணு வரும். அவளுடன் சேர்ந்து ஒரு மணியின் 'உச்சித்தென்றல்' நிகழ்ச்சியை செய்ய முடியுமா"
முடியாதுன்னா விடவா போகிறாய் வாய்வரை வந்ததை முழுங்கிவிட்டு ஆம் என தலை அசைத்துவிட்டு, "வாருவோர் எல்லாம் வாரலாம்" நிகழ்ச்சியை படு ஜோராக நடத்த தீட்டிய திட்டங்களை செயல்படுத்தும் வேளை நெருங்கியதால் இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
நிகழ்ச்சியும் 12 மணிக்கு நிறைவுக்கு வந்தது. வயிற்றுக்குள் அலாரம் அடித்தது. பக்கத்து உணவகத்தில் சான்ட்விச் இரண்டு துண்டை உள்ளே தள்ளி அலாரத்திற்கு விடைகொடுத்தேன். புதிய தொகுப்பாளினி வந்துவிட்டதாக சொன்னார்கள். ஓய்வு அறைக்கு சென்றால் அங்கே பட்டுப்போன செடிக்கு கனிப்பொருள் கலந்த தண்ணீர் விட்டு துளிர்க்க செய்வது போல மீண்டும் என் முன்னால் கலா! அவளை நானும் என்னை அவளும் பார்த்து விக்கித்து நின்றோம்.
"எப்படி இருகிறாய்" அவள்தான் கேட்டாள்.
"நல்லா இருக்கேன்..ஆமா நீ எப்படி இலண்டனில்...?"
"நாட்டில் பிரச்சினை உக்கிரமடைந்துவிட்டதால் இங்கே புலம்பெயர வேண்டியதாகிவிட்டது.."
"கதிர் எப்படி இருக்கான்".
"சந்தோசமாக இருப்பான் என நினைக்கிறேன்" எனச்சொல்லி மேலே கை காட்டினாள். விபத்து ஒன்றில் சிக்கியதாகச் சொன்னாள். கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவியது..நானே கலைத்தேன்
"அம்மா..எப்படி இருக்காங்க"
"நலமாக இருக்கேன்னு சொன்னாங்க"
"அப்படின்னா"
ஒன்றுமே சொல்லாமல் மௌனமான குறுநகையை சிந்தினாள்.
கதிரைபற்றி கேட்க உதடுகளை பிரித்தபோது அடுத்த நிகழ்ச்சிக்கான ஆயத்த அறிவிப்பு கிடைத்தது..
இருவரும் கலையகத்திற்கு சென்றோம்.
கலையக நடைமுறைகளை அவளுக்கு சொல்லித் தந்தேன்.
"இதோ இந்த அடுக்குகளில் இசைத்தட்டுகள் இருக்கு. ஒவ்வொரு அடுக்குக்கும் எழுதுகளால் பெயரிடப்பட்டு இருக்கு..குறிப்பிட்ட இசைத்தட்டை எடுக்க விருப்பின், கணினியில் பாட்டின் பெயரை தட்டச்சி என்டர் பண்ணினால் எந்த அடுக்கில் உள்ளது என்பதை துல்லியமாக சொல்லும்..தமிழிலேயே தட்டச்சலாம்..தமிழில் தட்டச்சுவாயா?"இல்லை என்ற அவள் தலை அசைப்புக்கு
"பரவாயில்லை கற்றுக்கொள்ளலாம்" என்று தட்டிக்கொடுத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
அது நேரடிலை நிகழ்ச்சி.ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கருக்கொடுத்து அதைப்பற்றி நேயர்கள்கருத்துடன் பொருத்தமான பாடலையும் கேட்பதே அந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.எனது உதவியுடன் ஓரளவு சிறப்பாகவே செய்து முடித்தாள்...எமக்கிடையேயான அன்றைய சந்திப்பும் அத்துடன் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து வந்த காலங்களில் பல்கலைக்கழக தேர்வுகளும் நெருக்கடியான வேலை நேரமும் அவளைக் காண்தை மட்டுப்படுத்தின. ஞாயிற்றுக்கிழமை அரை மணித்துளிகள் அவளை பார்த்தத்தோடு சரி. அந்த அரை மணிகளில் அவளைக் கேட்க நினைத்தவையும் கேட்காமலே கரைந்து போயின. எனக்குள் வெறுமையான ஒரு உணர்வு. அதை தீர்க்க, தீர்த்தமாக வந்த தமிழ்மன்றம் என்னும் வற்றாத நதிகள் பல சங்கமிக்கும் தேன்சுவை சாகரத்தில், திரிகோணம் என்னும் பெயரில் கலாவின் கதையை எழுதினேன்.கதை பாகங்கள் மூன்றைக் கடந்ததே தவிர முடிவு எட்டவில்லை.அவளுடன் மனம் விட்டுப்பேசினால்த்தானே முடிவு அறிந்து கதையை முடிக்க முடுக்கலாம். காலம்தான் எனக்கெதிராக சதி செய்கிறதே..
"எத்தனை நாளைக்குத்தான் வர்ணனைகளால் கதை ஜவ்வாக்குவது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க மன்ற உறவுகள் வேறு காத்திருப்பார்களே..."மனம் கலங்கியது. எனது நிலைமைகண்டு மனமிரங்கியது போலும் கால தேவனுக்கு.. .
இன்று திங்கள்கிழமை... உறவினர் வர இருப்பதால் பல்கலைக்கழகத்திற்கு விடுப்பு போட்டேன்..இதைத் தெரிந்த நண்பன் ஒருத்தன்
"மச்சான் இன்று கலாவுடன் சேர்ந்து உச்சிதென்றல் செய்ய முடியாதுபோல..நீ செய்கிறாயா" என்றான்..
வேறு வழி சம்மதித்தேன்..உறவினர்கள் மாலைதானே வருவார்கள்..
கதையை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் 12 மணிக்கு பணியகம் போனேன். ஓய்வு அறையிலிருந்து யோசித்தேன். எப்படி கலாவுடன் பேச்சை தொடக்குவது..
"என்ன சார் பலமான யோசனையில் இருக்கீங்க" கேட்டவாறு கலா..கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மகிழ்வில் சிரித்தேன்..
"எனக்குத்தெரியும்" என்று அவளே சொன்னாள்..எப்படி என்பதுபோல் பார்த்தேன்..
"மன்றத்தில் நீ எழுதும் கதைக்கு முற்றும்போட முடியவில்லை..அப்படித்தானே" கேட்டு விட்டு அவளே தொடர்ந்தாள்...."நான் வேணும்னா உதவட்டா..."
"விடுகதைக்கு விடை தேடுபவனுக்கு விடுகதையே முடிச்சை அவிழ்க்கிறேன் என்றால் கசக்குமா" என்றேன்.
"நல்லாவே பேச, எழுதக் உனக்கு கத்துக்கொடுத்திருக்கு மன்றம்.."
"எல்லாப் பெருமையும் மன்றத்திற்கே"
"சரி..இப்போ புரோக்கிராமுக்கு நேரமாச்சு...அப்புறம் பேசலாம்"ன்னு சொல்லிவிட்டு என்னுடன் கலையகம் ஏகினாள். காதலை எப்படிச் சொல்லலாம் என்பதே அன்றைய டாபிக்...பல நேயர்கள் பல கருத்துகளைச் சொல்லி விருப்பத்தேர்வுப் பாடல்களை கேட்டு நிகழ்ச்சி நிறைவை நெருங்கும்போது அறிவிப்பாளர் சார்பாக இறுதிக்கருத்தை சொல்ல முன்வந்தாள் கலா.
"சொல்லாத காதல் ஜெயிப்பதில்லை. உணர்வுகளால் சொல்லாதது காதலே இல்லை" என்று சொல்லி மேர்க்கூரிப்பூக்கள் சொல்லவாத்தைகள் இல்லை சொல்லாமல் காதலுமில்லை என்னும் பாடலை தனக்காக டெடிக்கேட் செய்தாள். அர்த்தப் பார்வையை என்மேல் வீசினாள்..
மீண்டும் ஓய்வறை...தேனீர் அருந்தியவண்ணம் "கதையை வாசித்து விட்டு முடிவைச் சொல்கிறாயா" என்றேன்
"இருபாகங்கள் படித்துவிட்டேன்..அடுத்து எப்படி நகர்ந்த்தி இருப்பாய் என அறிந்துகொண்டேன். முடிவை மட்டும் இப்படி எழுது...."கூர்மையானேன்..
"காதலிக்காமல் காதலித்தவனின் நினைவுகளுடனும் காதலித்தும் காதலிக்காதவன் நிஜங்களுடனும், வாழ்க்கைப்பாதையில் அபயம்தரும் அபாயங்களுக்காக காத்திருக்கிறாள் கலா"
நிமித்திய என் கண்களை ஒருகணம் ஊடுருவி பார்த்தாள்..அடுத்த கணம் விலக்கி விலகினாள்..
மூளையில் ஏதோ ஒரு இராசயனம் சுரந்தது.. நினைவடுக்குகளில் இருந்த பழைய நினைவு படிகங்களை கரைத்து நரம்புகளுக்குள் செலுத்தி மூடிய என் கண்மடல்களில் துண்டுக் காட்சிகளை அமைத்தது...உண்மை புரிந்தது...
கதிர்: நரேன்...நீ கலாவை காதலிக்கிறாயா
அம்மா: ஊரில் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அவற்றை விட்டு விடு. ஆனால் உனக்கு பொருத்தமான துணை அவள் என நான் நினைக்கின்றேன். அவளுடன் இது தொடர்பாக நாளை பேசப்போகின்றேன்
கதிர்: உன்னிடம் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை நரேன். அவளுக்கு நான் எனக்கு அவள் என்பது உனக்குத் தெரியும். இந்த பிரச்சினைகளால் நான் ஏதாவது தப்பாக நினைபேனோ என்று பயப்படுகிறாள். அப்டி எல்லாம் நினைக்கமாட்டேன்னு சொல்லியும் அவளை சமாதானப்படுத்துவது சாத்தியமாக தெரியவில்லை
அவள் சொன்ன முடிவை தட்டச்சிவிட்டு முற்றும் போட முனைந்த கரங்களை ஏதோ ஒன்று திசை திருப்பியது...
அனுமதியின்றி புகுந்து
கலந்து கருக்கட்டி
சுயமாக தேதி குறித்து
முக்கல் முனகலின்றி
தொடர் கவிதைகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது
அவள் மின்னல்பார்வை...!
Bookmarks