திருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.
வேலம்பாளையம் செல்லுவதற்கு ஒருநாளைக்கு மூன்று முதல் ஐந்து பேருந்துகள் வரை வரும். இல்லையெனில் நடந்துதான் செல்லவேண்டும். மருதத்திற்குரிய வயல் காடுகளும் பீக் காடுகளும் முதலில் வரவேற்கின்றன. சிறு பொழுதான வைகறையில் அதாவது காலை ஐந்து அல்லது ஆறு மணியளவில் இங்கே நடைபெறும் தொழிலைக் காணலாம். ஊரில் மொத்தம் எண்ணிப்பார்த்தால் ஐம்பது வீடுகள் இருக்கும். பெரும்பாலும் சொந்தமாக வயல் வைத்திருப்பவர்கள் அதிகம். காலை எட்டு மணியளவில் வயலுக்குச் சென்று பார்வையிட்டால் பசுமையின் குளிர்ச்சியும் சுத்தமான காற்றும் நம்மை வரவேற்கும். ஓரிரு பெட்டிக் கடைகளைக் காண நேரிடலாம். நகரத்து கடைகளைப் போலல்லாமல் வரவேற்பு இங்கே கிடைக்கிறது. அதோடு நமக்குத் தேவையான தின்பண்டத்தை எடுக்கும்போது அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் கணக்கு வழக்கின்றி பணம் வாங்குவதோடு நாம் கேட்காமலேயே தருவதும் கிராமத்துக்கே உரிய பாசம். வயலுக்குச் செல்லும் வழியில் ஆடு மேய்ப்பவர்களைக் காணலாம். அவ்வாறு மேய்ப்பவர்கள் லட்சாதிபதிகள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அங்கங்கே சுற்றித் திரியும் கோழிகளும் குஞ்சுகளும், காவல் நாய்களும் நம்மை விருந்தாளியாகவே பார்க்கின்றன. வயலை அடைந்ததும் ஒருவித வாசம் நம்மைக் கவர்கின்றன. அதோடு பாசமும் கவர்கின்றன. அங்குள்ள கிழத்திகள் வரவேற்று உபசரிக்கிறார்கள். வயல் சார்ந்த மருத நிலமாகையால் வீட்டுக்கு அருகே கிணறு வெட்டியிருப்பதைக் காணலாம். அதோடு ஊரில் எண்ணிப் பார்த்தால் வீடுகளின் எண்ணிக்கையைவிட கிணறுகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது சிறப்பு. கிழத்திகளின் உபசரிப்பைத் தாண்டி, அவர்களின் கொட்டகையைப் பார்வையிட நேரிடுகையில் அங்கே வளரும் எருமைகளையும் பசுக்களையும் ஆடுகள் மற்றூம் கோழிகளையும் காண நேரிடலாம். மருத நில மக்களுக்கு பெரும்பாலான தொழில் வயலிலேயே முடிந்துவிடுகிறது. பகுதி நேரத் தொழிலாக பால் கறத்தல், கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல், போன்றவைகள் நடைபெறுகின்றன. இவற்றை பெரும்பாலும் கீழ் மக்கள் செய்கிறார்கள். பால் கடையும் கடைச்சிகள், ஆடு மாடு மேய்க்கும் கடையர்கள், களை பிடுங்கும் உழத்திகள், நாற்றூ நட்டு பயிரிடும் உழவர்கள் என பலரைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவரும் அரிசன மக்கள். நாளொன்றுக்கு அறுபது ரூபாய்க் கூலியில் வேலை செய்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் நிலம் பறித்த சோகம் இன்னும் கண்களுக்குள் தென்படுகிறது. மருதநிலத்திற்குரிய பூச்சிகளாகிய பட்டாம்பூச்சிகளும் மண்புழுக்களும் சில பாம்பு வகைகளும் காணலாம். தென்னை மரம், பனை மரம், ஆலமரம் மற்றும் வேப்பமரங்கள் பெரும்பாலான ஊரை ஆக்கிரமித்திருக்கின்றன.
காய்கறிகள், கிழங்குகள், கடலை வகைகள், தென்னை, பனை, திணை(மாவு) எனப் பல உணவுப் பொருட்களை பயிரிட்டு வளர்க்கிறார்கள். இந்த ஊர்ச் சிறப்பு இங்கே கண் வலிக்கு நிவாரணியாக ஒரு செடியை வளர்க்கிறார்கள். அழகான பூக்களுக்கு இடையே வளரும் காய்களை நறுக்கி காயவைத்து அரைத்து கிலோ முந்நூறு வரையிலும் விற்கிறார்கள். பெரும்பாலான தோட்டங்களில் இந்த வகைச் செடியைக் காணமுடிகிறது. தெளுவு இங்கே காய்ச்சுகிறார்கள். சுத்தமான தெளுவு கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. பெரும்பாலும் தென்னைமரத்துத் தெளுவுதான் இங்கே இருக்கின்றன. ஒருசிலர் பனைமரத்துத் தெளுவையும் காய்ச்சுகிறார்கள்.
அனைவரின் வீட்டிலும் கிணறு வெட்டிவைத்திருக்கிறார்கள். ஒருசிலர் வீட்டில் இரண்டு கிணறு வரை காணப்படுகிறது. அரசு கொடுக்கும் இலவச மின்சாரத்தின் வாயிலாக நிலத்தடி நீரை எடுத்து கிணற்றில் விட்டு, பின் மீண்டும் வயலுக்கு வாய்க்கால் வழியாக பாய்ச்சுகிறார்கள். எந்த நேரமும் நீர் இறைக்கும் மோட்டார் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு பண்ணைக்காரர்களும் சுமார் இருபது முப்பது ஏக்கர் அளவில் நிலம் வைத்திருப்பார்கள். அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அனைத்து வயலுக்கும் நீரை வாய்க்கால் சுமந்து செல்கிறது. அழகாக அமைக்கப்பட்ட பாத்தியின் வழியே நீர் செல்கிறது. இவர்கள் துணி துவைப்பது முதல் குளிப்பது வரை இந்த வாய்க்காலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வயலை விட்டு வெளியே வந்தால் பலரது வீட்டில் சிறு சிறூ கைவினைத் தொழில்களைக் காணலாம். பனை ஓலையில் கூடை பின்னுவது முதல் விசிறி செய்வது வரையிலும் தொழில்கள் நடைபெறுகின்றன. வீட்டைச் சுற்றிலும் உணவுப்பொருட்கள், தானியங்கள் இறைந்துகிடக்கின்றன. கோழிகள், வாத்துகள், ஆடுகள் ஆகியன அங்கங்கே சுற்றித் திரிகின்றன.
பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் இல்லை. பீக்காடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அச்சுறுத்தும் ஊர்வன வகைகள் அதிகம் நடமாடுவதாக சொல்லுவார்கள். என்றாலும் நான் இருந்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஊரில் கேபிள் வசதி இல்லாததால் டிடி எச் உபயோகப்படுத்துகிறார்கள். மேலும் அந்த ஊருக்கு ஒரே கிணறுதான். ஆழம் அதிகம். கிணறுக்கு வெகு அருகே ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. சிறு பிராயத்தில் அங்கே தாயம் ஆடியிருக்கிறேன். இன்றும் பல பெரிசுகள் அங்கே ஆடுபுலி ஆட்டம் ஆடுவதைக் காணலாம். அந்த கோவில் சுமார் நூறு வருடப்பழமை என்று கூறப்படுகிறது.
ஒருவாறாக குறிஞ்சி மற்றும் மருத நில ஊர்களை ரசித்து ருசித்து நகரம் வந்து சேர்ந்தால் அது நரகமாகவே தென்படுகிறது. இயற்கையான சூழல், காடு மேடு, மலை, வாசம். பீக்காடுகள், சிலிர்த்திடும் காரணிகள், கிராமத்து பாசம், தெளுவு, என அனைத்தையும் விடவா வேறு ஒரு சந்தோசம் இருக்கப் போகிறது......
கிராமத்தின் எழிலைப் பாருங்கள்...
ஒரு வீட்டின் பின்புறத்தில்
கண் வலி மருந்தாக இந்த பூவிலிருந்து வரும் காயை உலர வைத்து பொடியாக்கி மருந்தாக மாற்றுகிறார்கள். இதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்
அங்கே வளரும் ஒரு பயிர் (வெண்டைக்காய்)
இங்கு வளரும் உயிரினங்கள்..... என்னே அருமை!!
Bookmarks