இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கொலை செய்யப்போகிறேன்.யாரை...என்னைப் பெற்றவளை....'படுபாவி..பெத்தவளையே கொலைசெய்ய துணிஞ்சிட்டியே...நீயெல்லாம் ஒரு மனுஷனா' நீங்கள் திட்டுவது கேட்கிறது.ஆம்...இந்த நொடியில் நான் மனிதனில்லை....மனம் மரத்த ஒரு மிருகம்.ஏன் அவளைக் கொலைசெய்யவேண்டும்...?சொல்கிறேன்.அந்த காரியத்தை செய்தபின் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது...அதனால் இப்போதே சொல்லிவிடுகிறேன்..சொல்லிமுடித்ததும்..இன்னும் கொஞ்சம் வேகம் வரும் அது என் செயலுக்கு உதவியாக இருக்கும்.
அம்மாவின் அப்பாவும் செல்வந்தர்,அப்பாவின் அப்பாவும் செல்வந்தர்.இருவரும் வெகு அழகாக தங்கள் பிள்ளைகளின் திருமண வியாபரத்தை நல்லமுறையில் நடத்தி ஏராளமான பணத்தை இவர்களுக்கு விட்டுச்சென்றார்கள்.தொழில் எதுவும் செய்யவில்லையென்றாலும் ஏழரை (ஏழு என்பதே ஏன் வழக்கத்தில் இருக்கவேண்டும்)தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.வழக்கமான பணக்கார பெற்றோரின் உதாசீனத்தில் நானும் என் அண்ணனும் வளர்ந்தோம்.பெரிய பாசமெல்லாம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.நடு இரவில் வீடு திரும்பும் பெற்றோர் தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை தட்டி எழுப்பியா கொஞ்சுவார்கள்.அப்படியே கொஞ்சினாலும் அந்த 'மழலை'மொழி கேட்க எங்களால் மு(டி)தியாது.
அண்ணன் அவன் போக்கில் வளர்ந்தான்,எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கே இல்லாமல் செலவழித்தான்.கெட்ட சகவாசம்,கெட்ட பழக்கவழக்கங்கள்...அவனைக் கண்டிக்க யாருமில்லை.படிப்பு ஏறவில்லை.ஆனால் நான் வித்தியாசப்பட்டேன்.எங்கள் தலைமுறையில் யாருடைய மரபணுவோ எனக்கு வாய்த்திருக்கவேண்டும்.படிப்பு ஒழுங்காக வந்தது.கணிணித்துறையில் பொறியியல் படித்தேன்.
வளாக நேர்முகத்தேர்விலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.சம்பளம் ஒரு பெரிய விஷயமில்லை.அதைவிட அதிகமாக எனக்கு பாக்கெட்மணி கிடைத்துக்கொண்டிருந்தது.ஆனால் நான் வேறு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன்.அதற்கு இந்த வீட்டிலிருந்து வெளியேறி வசிப்பதுதான் சிறந்தது என்று நினைத்ததால் வேறு நகரம் போனேன்.
நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில்தான் காயத்ரியும் இருந்தாள்.அடடா..இதுவரை என் பெயரைச் சொல்லவில்லையே...என் பெயர் கார்த்திக்.இதை இங்கே சொல்ல ஒரு காரணம் இருக்கிறது.காயத்திரின் நெருக்கம் எனக்கு இந்த பேராலும்,தோற்றத்தாலும் கிடைத்தது.'நீங்க பாக்கறதுக்கு இளமையான அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி இருக்கீங்க...அதிசயமா அதே பேரும் உங்களுக்கு' இப்படித்தான் ஆரம்பித்தது.காஃபிஷாப்,பீச்,மாயாஜால் என்று காதலை வளர்த்தோம்.
சில நேரங்களில் பிதாமகன் லைலா மாதிரி காயூ என்னைப் பார்த்து'லூஸாடா நீ'என்று கேட்பாள்.ஏனா..? பின்ன அவளை தள்ளி உட்கார வைத்துவிட்டு அரைமணிநேரமாக அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தால் அப்படித்தான் கேட்பாள்.உண்மையில் அவளை பார்த்துக்கொண்டிருக்கும்போது பார்வை மட்டும்தான் அவள் மேல் இருக்கும்,மனதுக்குள் பாரதிராஜா படத்தின் டூயட் ஆடும் வெள்ளைத் தேவதைகள் ஆயிரம்பேர் லல்லல்லா..பாடிக்கொண்டிருப்பார்கள்.'என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனைநாளாய் எங்கிருந்தாயென்று' உள்ளுக்குள் உருகிக்கொண்டிருப்பேன்.அந்த அளவுக்கு பாசத்திற்காகவும்,காதலுக்காகவும் ஏங்கியிருந்தேன்.
காயூவின் குடும்பமும் பணக்காரக் குடும்பம்தான்.அம்மா இல்லை அப்பா மட்டுமே.எப்போதாவது கண்ணில் படும்போது மட்டும் 'என்னடா காயூ...நல்லா படிக்கிறியா..லண்டன் போறேன்..வரும்போது ஏதாவது வேணுன்னா சொல்லுடா மை ஸ்வீட் ஏஞ்சல்' என்பதோடு சரி.அவளும் என்னைப்போலவே வளர்ந்ததால் இருவரும் ஒருத்தர்மேல் ஒருத்தர் காதலை சின்ஸியராக காட்டினோம்.பாசாங்கு இல்லாத பாசத்தை பரிமாறிக்கொண்டோம்.இரண்டு குடும்பங்களுமே அந்தஸ்தில் சமமானவர்களென்பதால் இந்தக்காதல் கல்யாணத்தில் முடிவதில் எந்த தடையுமிருக்காது என்ற என் எண்ணம் இன்று காயுவை அம்மாவிடம் அறிமுகப்படுத்தியபோது உடைந்து சுக்கு நூறானது.
ஆரம்பத்தில் வரவேற்பென்னவோ பலமாகத்தான் இருந்தது.சடை ஜோக்குகளைச் சொல்லி ஆர்ப்பாட்டமாய் சிரித்தாள் அம்மா.காயூ என்னை பார்த்த பார்வையில்'ப்ளீஸ் காப்பாத்துடா கார்த்திக்'என்று கெஞ்சுவதைப்பொல் இருந்தது.கொஞ்சம் பொறுத்துக்கோ என்று நானும் கண்ணாலேயே பதில் சொன்னேன்.அம்மா காயுவின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தாள்,அவளுடைய அப்பா பெயர் கேட்டாள்.சொன்னதும் இன்னும் கொஞ்சம் விவரம் கேட்ட அம்மாவின் முகம் மாறியது.'அவரோட பொண்ணா நீ' கேட்ட தொணியே வித்தியாசமாக இருந்தது.அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவள் முகத்தை கடுமையாக்கிக்கொண்டு 'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காது' என்று திட்டவட்டமாகச் சொன்னாள்.
'ஏன்.... ஏன் நடக்காது'கைகால்களெல்லாம் பதட்டத்தில் நடுங்கியபடி கேட்டேன்.
'நடக்காதுன்னா நடக்காது...இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதே' சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய இருந்தவளை இரண்டு கைகளையும் விரித்து தடுத்து கோபத்தோடு மீண்டும் கேட்டேன்..'ஏன்...காரணம் சொல்லு'
என்னுடைய முக மாற்றத்தையும்,ஆவேசத்தையும் பார்த்த அம்மா முகத்தில் அதிர்ச்சியுடன்'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காதுங்கறதவிட நடக்கக்கூடாதுங்கறதுதான் பொருத்தமான வார்த்தையா இருக்கும்.'சொன்னவளைப் புரியாமல் பார்த்தேன்.மீண்டும் ஆவேசமாய்க் கத்தினேன்.அதே வேகத்தில் அம்மாவும் திரும்பக் கத்தினாள்...'ஏன்னா அவ உன் தங்கைடா' கைகாலெல்லாம் ஆட கத்தி சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டாள்.அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் திரும்பினேன்.காயு இல்லை.
நீங்களே சொல்லுங்கள் எந்த பாசத்திற்க்காக இத்தனை வருடங்களாகக் காத்திருந்தேனோ..அது காதலின் மூலமாக கிடைக்குமென்று நினைத்திருந்தேனோ,அவளை எப்படியெல்லாம் மனதில் கற்பனை செய்துவைத்திருந்தேனோ....எல்லாமே இப்போது இல்லையென்றாகிவிட்டதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்.காயுவின் அப்பா என் அம்மாவின் ஆண் நன்பராம்..அப்படியென்றால் அவரும் எனக்கு ஒரு அப்பாவா..?கடவுளே ஏன் இப்படி....?அந்த நேரத்தில்தான் நான் மிருகமானேன்.இப்படி ஒரு அம்மா இனி இருக்கக்கூடாது.தாய் என்ற உறவு எப்படிப்பட்டது..? தெய்வத்துக்கும் மேலாக மதிக்கப்படும் தாய்மார்களுக்கிடையில் இப்படி ஒரு ஜென்மமா...என் கேள்விகளுக்கெல்லாம்...என் மனதிடம் கிடைத்த பதில்தான் 'அவளைக் கொன்றுவிடு' என்பது.
சரி காரணத்தை தெரிந்து கொண்டீர்களல்லவா....வீணாக உபதேசம் செய்யாமல் வழிவிடுங்கள்..கதவைத்திறந்து வெளியே போனதும் கொலை செய்யவேண்டும்.
கதவைத்திறந்து வெளியே வந்தவன் அதிர்ந்தேன்.அம்மா இறந்திருந்தாள்.பக்கத்தில் அப்பா கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன். அப்பாவைப் பார்த்தேன்...
"நீ கூட என் பிள்ளையில்லையாண்டா...."
Bookmarks