இருக்கும் நிலையிலிருந்து
இன்னும் உயர....
தனக்கு கிட்டாதது
தன் பிள்ளைக்குக் கிட்ட
நீ உழைக்கச் சென்றாய் எட்ட..!
பாசமாய் நீயனுப்பிய
பகட்டுச் சேலையுடித்தினால்
சகட்டுமேனிக்கு சுற்றம்
சாடை பேசுகிறது,
பார்ப்பதெல்லாம் தானமாகக் கேட்டு
கேட்டது தராவிடில்
ஈனமாக ஏசுகிறது..!
வேலையாய் வெளிவாசல் போனால்
வேசிப்பட்டம் சூட்டும்
வேண்டியதைக் கொடுத்துவிட்டால்
வெட்கமின்றி வாலையாட்டும்!
ருசியுணர்ந்தவள்
பசியோடிருப்பாளென
கேவலப்பிறவிகள்
விரசப் பார்வையோடு
உரசிப் பார்க்கின்றன..!
வில்லம்புகள் ஆயிரம் துளைத்தும்
விடாமல் உயிர்பிடித்த
வீரன் பீஷ்மனைப்போல்
சொல்லம்புகள் அனைத்தும்
உள்ளத்தில் தாங்கி
உயிர்வாழ்வதே..
உன் மீள்வருகைக்குத்தான்!
Bookmarks