பகர்தல் முறையோ
வீணன வதந்திகளை...!
பகிர்தல் முறையோ
தீயான மதவெறியை...!
நுகர்தல் முறையோ
கேடான போதைப்பொருளை...!
பணித்தல் முறையோ
தொண்டர்களை வன்முறைக்கு...!
ஜனித்தல் முறையோ
பயமாய் வாழ்வதற்கு...!
மரணித்தல் முறையோ
அர்த்தமில்லா காதலுக்கு...!
மௌனித்தல் முறையோ
அநீதிகளைக் கண்டு...!
'கவனித்தல்' முறையோ
அதிகாரிகளை லஞ்சம் கொண்டு...!
பயணித்தல் முறையோ
இலக்கில்லா பயணத்தில் இன்று....!
முறையற்ற செயல்களுக்கு
முடிவு கட்ட....
திரும்பி வா... இளைஞனே...
திருந்தி வா... இளைஞனே...
எதிர்மறை வாதமெல்லாம் -இனி
கதிர்கண்ட பனியாய் மறையும்...!
(நம் மன்றத்து கவிச்சமரில் கலந்துகொள்வதில் அலாதி ஆர்வம் எனக்கு. சில நேரங்களில் ஒரு கவிதை படித்துமுடித்து அதன் முடிவைக்கொண்டு அடுத்த கவிதையை ஆரம்பித்து, யோசித்து எழுதி அதை நான் பதிப்பிப்பதற்குள் நம் மன்றக்கவிகள் மின்னல் வேகத்தில் பல கவிதையைப் படைத்துவிடுகிறார்கள். அவர்களோடு போட்டியிடமுடியாமல் எழுதிய என் கவிதைகள் என் கணிணியிலே தூங்கிவிடுகிறது. இந்த கவிதைகூட அப்படித்தான்.
பூமகளின் கவிதைக்கு சமராட நினைத்து எழுதிய கவிதை. இதை அப்படியே விடாமல் பதிப்பித்தால் நலமோயென தோன்றியதால்தான் இந்த தனிதிரி.)
Bookmarks