விமான இறக்கையின் மீது அமர்ந்து 1,300 கி.மீ. பயணம் செய்த சிறுவன்
மாஸ்கோ, செப்.26: விமான இறக்கையின் மீது மைனஸ்-50 டிகிரி வெப்ப நிலையில் ஒரு சிறுவன் அமர்ந்து 1,300 கி.மீ. தூரம் பயணம் செய்த அதிசயம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
அந்த 15 வயது சிறுவனின் பெயர் ஆண்டிரி. இவனது தந்தை குடிபழக்கம் உடையவர். தாயார் தந்தைக்கு ஆதரவாக இருந்தார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஆண்ட்ரி அருகில் உள்ள தனது தாத்தா ஊருக்கு சென்றான். அங்கு இருந்து ஒரு வாகனத்தில் ஏறி 220 கி.மீ. தூரத்தில் இருந்த பெர்ம் நகருக்குச் சென்றான்.
அங்குள்ள விமான நிலையத்துக்குச் சென்றான். அங்கு மாஸ்கோ புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை மீது யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த போயிங்-737 விமானம் மாஸ்கோ புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் கடுமையான குளிர் வாட்டி எடுத்தது. தண்ணீர் பனிக் கட்டியாக உறையும் வெப்ப நிலை. மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
காற்றின் வேகத்தையும் குளிரின் கடுமையையும் ஆண்டரி தாங்கிக் கொண்டு விமானத்தின் இறக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் 1,300 கி.மீ. தூரம் பறந்த பிறகு அந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. 2 மணி நேர பயணத்தில் விமானத்தின் இறக்கையோடு ஆண்ட்ரி ஒட்டிக் கொண்டான்.
விமானம் நின்ற பிறகுதான் அதன் இறக்கை மீது சிறுவன் சுருண்டு கிடப்பதை விமான நிலைய ஊழியர்கள் கவனித்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்து இருந்தான். அவனை கீழே இறக்கினர். அவன் உடல் ஐஸ் கட்டியாக உறைந்து போய் இருந்தது. அவனது சட்டை, ஷக்களை கூட உடலில் இருந்து பிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒட்டி இருந்தது.
உடலில் பனிக்கடி காயங்கள் இருந்தன. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 2 மணி நேரம் தாக்குப் பிடித்து உயிரோடு இருப்பது மருத்துவ உலகில் அதிசயம் என்றார்.
அவனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மாஸ்கோ வந்தனர். சிறுவன் ஆண்டரி யாருக்கும் தெரியாமல் எப்படி விமானத்தின் இறக்கை மீது ஏறி அமர்ந்தான், மைனஸ்-50 டிகிரி குளிர் நிலையை எப்படி தாங்கினான் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
− தினகரன்
Bookmarks