தேவகுமாரன் தானம் கேட்டதால்
தேகமறுத்து கவச குண்டலமீந்தான்
அன்றைய கர்ணன்.....
தேவனே விரும்பி
எடுத்துக்கொண்டான்
தேக பாகங்களை
நான் இன்றைய கர்ணன்...
ஊறும் எறும்பையும்
உபத்திரவிக்க கால்களில்லை
ஆண்டவனுக்கு நன்றி..!
கடிக்கும் கொசுவையும்
அடிக்க கைகளில்லை
ஆண்டவனுக்கு நன்றி...!
பசித்தால் சோறூட்ட
பாசமுள்ள கைகளுண்டு
கழிவுக் கழுவிட
கருணையுள்ள கரங்களுண்டு!
எத்தனை வளர்ந்தாலும்(?)
எப்பவும் குழந்தைதான்,
அங்கம் சிறிது
குறைந்த குழந்தைதான்!
அய்யோபாவமும்,
பரிதாபப் பார்வையும்
தேவையில்லை எனக்கு...
உங்களோடு ஒருவனாய்
என்னையும் சேர்த்துக்கொள்ளும்
தோழமை கிடைக்குமா....?
Bookmarks