சிலை வடிக்கும் உளிகள்..!
எனக்கு ஏற்படும் சந்தோஷமான, துக்கமான விஷயங்களை என் மேல் அன்பும், அக்கறையும் கொண்டவர்களிடத்தில் அப்படியே பகிர்ந்து கொள்வது என் வழக்கம். அந்த வகையில் இவை இரண்டையும் என் மீது அளவில்லாத அன்பை பொழியும் என் தாய், மனைவி இருவரிடம் பகிர்ந்து கொள்வேன். இதன் மூலம் என் மனதுக்கு ஆத்ம திருப்தியும், நிம்மதியும் கிடைப்பதாக உணர்கிறேன். அப்படி அவர்களிடம் சொல்லும் போது நடந்தவற்றில் கூட்டி குறைத்து சொல்வது கிடையாது. காரணம், அவர்களை என் இன்னொரு இதயமாக தான் பார்ப்பதால் என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. அதே போல் மனதை மிகவும் குதூகலப்படுத்திய சந்தோஷம் அல்லது குத்திக்கிழித்த வேதனை ஆகியவற்றை தந்த சம்பவங்களை சந்திக்கும் போது அவற்றை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்களை தேடுவதுண்டு. அந்த வகையில் எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒன்றை நல்ல நண்பர்கள் நிறைந்திருக்கும் தமிழ் மன்றத்தில் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன்.
சவுதி அரேபியாவில் உள்ள யான்பு என்பது அமைதியான, அழகான நகரம். அது சிறிய நகரம் தான் என்றாலும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் பெட்ரோலிய எரிபொருள், இரசாயன தொழிற்சாலைகளும், துறைமுகமும் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற சவுதி நகரங்களைப்போல் அல்லாமல் யான்பு நகருக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா.? கடும் வெயில் அல்லது கடும் குளிரை கொண்டிருக்கும் சவுதியின் தட்பவெப்ப சூழ்நிலையில் கோடையானாலும் சரி.. குளிர் காலமானாலும் சரி.. அதன் அதிக தாக்கத்தை வெளிப்படுத்தாத ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை கொண்ட நகரம் தான் யான்பு..!
சவுதியில் உள்ள ஜுபைல் மற்றும் யான்பு என்ற இரு Royal Commission நகரங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி செய்து கொடுக்கும், அரச குடும்பத்தினர் பங்குதாரர்களாய் இருந்து நடத்தப்பட்டு வரும் பெரிய நிறுவனம் தான் MARAFIQ (Power & Water Utilitiy Company for Jubail & Yanbu) என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் Customer Service Department-ல் Billing section பிரிவில் Data Analyst-ஆக நான் பணியில் சேர்ந்த நேரம் அது. SAP Program கொண்டு அந்த நிறுவனத்தின் மொத்த பணிகளும் செய்யப்படுவதால் என் திறமையை வளர்த்துக்கொள்ள அந்த வேலை நல்ல தளம் அமைத்து கொடுத்தது. கொடுத்த பணியை மற்றவர்களை விட சிறப்பாகவும், விரைவாகவும் செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டிருந்தேன். எங்கள் பில்லிங் பிரிவில் 4 இந்தியர்கள், 2 ஃபிலிப்பினோக்கள், 5 சவுதி நாட்டவர்கள் வேலை பார்த்தார்கள். என்னுடைய உழைப்பும், உண்மையும் வெகு விரைவில் 12 பேர் வேலை பார்த்த Billing section-ல் என்னை Section Team leader ஆக்கியது. திறமைக்கும், உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருந்ததால் என் வேலையை இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் மேலும் எனக்கு கிடைத்தது. வேலையின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் குடும்பத்தை பிரிந்திருக்கும் கஷ்டம் கூட குறைந்தது போல் உணர்வு எனக்கு.
எனக்கு மேற்பார்வையாளராக இருந்தவர் சவுதியைச்சேர்ந்தவர் என்பதால் வேலை விஷயத்தில் அவரிடம் நான் கற்றுக்கொள்வதை விட, அவருக்கு நான் வேலை குறித்து கற்றுக்கொடுக்கும் நிலையே இருந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் வேலையில் ஏற்பட்ட சவால்களும், சிக்கலான சூழ்நிலைகளும் எனக்கு பல நல்ல அனுபவங்களை கொடுத்து என் திறமையை வளர்க்க வழி செய்ததால் முழு மன விருப்பத்துடன் என் வேலையை செவ்வனே செய்து வந்தேன். இது மேலாளருக்கு என் மீது மிகவும் மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. இதனால் வேலையில் ஏற்படும் சிக்கல்களை எப்போதும் என்னிடம் கொடுத்து செய்யச்சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். இப்படி அடிக்கடி செய்ய வேண்டி வந்ததால் அந்த வேலைகளை செய்ய அமைதியான சூழ்நிலை எனக்கு தேவைப்பட்டது. எனவே அவற்றை என் வீட்டில் வைத்து செய்ய அனுமதி கேட்டவுடன் மறுக்காமல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வேலைகளை செய்ய ஆகும் நேரத்தை ஓவர்டைமாக எழுதிக்கொடுக்கவும் சொல்வார். இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் எனக்கு பயன் ஏற்பட்டது. இது போன்ற வேலைகளை செய்ய என்றே ஒரு மடிக்கணினி வாங்கியிருந்ததால் அவர் கொடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் கஷ்டம் எதுவும் இருக்கவில்லை.
என்னுடைய இந்த வளர்ச்சி என் கூட வேலை பார்த்த இந்தியர்களில் இருவருக்கும், ஃபிலிப்பினோக்களுக்கும் பொறாமை தீயை வளர்த்தது. கூட வேலை பார்த்த சவுதிக்காரர்கள் யாரும் இதை மோசமான அல்லது பிடிக்காத விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், என் உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைக்கும் பரிசாகவே அதை எண்ணி அடிக்கடி என்னை பாராட்டுவார்கள். ஆனால், மற்றவர்களோ என் வளர்ச்சியை பிடிக்காமல் தவறாக பேச ஆரம்பித்தார்கள். காக்கா பிடிக்கிறான், ஜால்ரா அடிக்கிறான், சோப் போடுறான் என்றார்கள். அதனால் தான் இந்த வளர்ச்சி, சலுகைகள் என்று புறம்பேசினார்கள். அவர்களின் நோக்கம் அறிந்து நான் அவர்களிடமிருந்து விலகி அமைதியாக என் வேலையை செய்து வந்தேன். ஆனால், அவர்களோ என்னை கவிழ்க்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்..!!
(உளிச்சத்தம் இன்னும் கேட்கும்)
Bookmarks