1980களில் ஆண்டு விடுமுறை என்றால் தாத்தா வீட்டிற்கு தான். மன்னார்குடியிலிருந்து திருமக்கோட்டை வரை உள்ளூர் பேருந்தில் சென்று பிறகு மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றால் புதுக்குடியை அடையலாம். இப்போது பஸ் வந்துவிட்டதாக கேள்வி.
ஒவ்வொருவரும் பம்பாய், தில்லி, அசாம், மற்றும் பல மாநிலங்களிலிருந்து எங்கள் உறவுகள் அனைவரும் வந்து சேர ஒரு பெரிய கூட்டமே சேர்ந்துவிடும்.
நான்கு வீடுகள் சேர்ந்த ஒரு தெரு. நான்கும் பெரிய வீடுகள். ஓட்டு வீடுகள். எதிரே வலப்புறம் சிறிய குளம். அதில் தான் பாத்திரம் கழுவுது மற்றம் வீட்டு வேலைக்கான நீர். இடது புறம் பெரிய தென்னந்தோப்பு. சில மாமரங்களும் கொய்யா மரங்களும்.
தெருவின் வலது கோடிக்கு சென்றால் ஒரு சிறிய பிள்ளையார் கோவில், இன்னொரு தென்னந்தோப்பு. ஒரு பெரிய குளம். அதில் தான் ஊர் மக்கள் குளிப்பது.
இப்படியாக பசுமையான ஊர். அருகில் வயல் வெளிகள்.
சில நேரம் பஸ் இரவில் திருமக்கோட்டை வந்து சேர்ந்தால் அவ்வளவுதான். ஏன்டாப்பா விடுமுறைக்கு வந்தோம் என்று ஆகிவிடும். காரணம் இரண்டு புறமும் வயல்வெளிகள். கும்மிருட்டு. மெல்லிய நிலவொளி. நான் சகோதர சகோதரிகள் மாமா வழிநடத்துதலில் ஒற்றையடியில் இரண்டு வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்பில் நடந்து செல்லவேண்டும். வழிதெரியாமல் தடுமாறி கால் வளுக்கு வயலில் கால் வைத்தால் மாமா மொடேர் என்று ஒரு அடி கொடுப்பார். ஆனால் அந்த கஷ்டம் எல்லாம் போய் சேரும் வரைக்கும் தான். அப்புறம் விடுமுறையில் புதுக்குடியில் கும்மாளமே கும்மாளம் தான்.
நான்கு வீடுகளில் கடைசி வீடு ஓட்டை வீடு. பலகாலம் பயன்படுத்தாமல் விட்டுபோனது. அதில் ஒரு பழைய மில்லுவண்டி இருக்கும். நாங்கள் விளையாடுவதற்காகவே விட்டுப்போனது போல. அதற்கு வலதுபக்கம் இருக்கும் வீடு அமைச்சார் வீடு என்பார்கள். இந்த வீட்டில் தான் தாத்தாவை ஊர் மக்கள் பார்க்க வந்தாலோ அல்லது பெரிய மனிதர்கள் வந்தாலோ சந்திப்புகள் நடக்கும். அதுமட்டும் அல்ல, எங்கள் தாத்தா வீட்டு அனைத்து விசேஷங்களும் கனஜோராக நடக்கும். வெளியே பெரிய பெரிய திண்ணைகள். அதில் தான் மேளக்கச்சேரியே நடக்கும்.
அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தாத்தா, பாட்டி, சித்தி, மாமாக்கள் வசித்தனர். எங்கள் பெரிய பாட்டியும் இருந்தார். அப்போதே அவருக்கு வயது 95 தாண்டி இருக்கும்.
அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தங்கையன் குடும்பத்தினர். எங்கள் தாத்தாவின் பணியாள், மற்றும் எல்லாமே என்று சொல்லலாம்.
வீட்டில் விசேஷம் என்றால் தெரு முழுவதும் கீற்றுப்பந்தல் இடவேண்டும் என்று உத்தரவிடுவார் தாத்தா. உடனே தங்கையன் உள்ளூர் இரண்டு மூன்று ஆட்களை ஏற்பாடு செய்வார். பல வேலைகளை தனியாகவே அவர் செய்வார். ஆறடிக்கு மேல் உயரம். ஆஜானபாகுவான உடல். கடுமையான உழைப்பாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது இருவருமே சிங்கப்பூரில் இருப்பதாக கேள்வி.
முதலி் ஏதிரே இருக்கும் தோப்பில் இருக்கும் தென்னை மரங்களில் ஏறி பச்சை கீற்றுகளை வெட்டி சாய்பபார். பிறகு அதனை ஏதிரே இருந்த குளத்தில் சில நாட்கள் ஊற வைப்பார். அவை பழுத்த நிறம் ஆகும் வரையில். பிறகு பாளைகளை வெட்டி அதனை தண்ணியில் ஊற வைப்பார். அது சிறிது நாட்களில் காப்பி கலரில் ஆகும். அதனை எடுத்து நீள நீளமாக வெட்டுவார். அவை கயிறு போல தயாராகிவிடும்.
சில நாட்களில் மூங்கில் கழிகளும் வர சுமார் 2-3 பேர் சேர்ந்தே தெரு முழுவதும் பந்தலிடும் காட்சி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். கடப்பாறை கொண்டு குழிகள் தோண்டி, கழிகளை நட்டு பிறகு பாளை கயிறுகளால் கீற்றுகளை முடித்து, சாதாரண கயிறுகளால் மூங்கிலுடம் கட்டி, மின்சாரம் மிகவும் குறைவாக அந்த கிராமமும் ஒரு ஏஸி திருமண ஹால் போல ஆக்கிவிடுவார்கள்.
தொடரும்..
Bookmarks