"என்னென்னவோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்"
என்பதைப்போல எத்தனையோ ஆசைகள் என் மனதில் இருந்த காலம் என் இளமைக்காலம்.கலை என்பது என் மனதில் மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர்கொண்டிருக்கிறது இப்போதும்.ஆனால்...எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் சிறிதளவாவது நிறைவேறியது நான் சொந்தமாய் சம்பாதிக்கத் தொடங்கியதும்தான்.
பள்ளிப்பருவத்தில் படிப்பை முடிக்கவே உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது.நல்ல ஒரு வேலை கிடைத்து நான் மும்பைக்கு வந்த பிறகு என் முன்னால் ஒரு பரந்து விரிந்த ஒரு உலகம் தெரிந்தது.எனக்குத்தேவைப்பட்ட எல்லாமும் ஒரே கூரைக்குள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.நான் வசித்த அணுசக்திநகர் என்ற அந்த குடியிருப்பு பிரதேசம் அத்தனை கலைகளையும் கற்றுத்தருகிறேன் வா என்று என்னை இருகரம் நீட்டி அழைத்தது.
அங்கிருந்த எங்கள் தமிழ் கலைமன்றமெனும் அமைப்பு இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழையும் கற்றுத்தர எல்லா உதவிகளையும் செய்து வந்தது.முதலாவதாக எனக்கு மிக விருப்பமான நடனம் கற்றுக்கொள்ள ஆர்வமாயிருந்தேன்.அந்த மன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட நாட்டிய வகுப்பின் நடன ஆசிரியராய் இருந்தது வேறு யாருமல்ல...நடிகர் கமலஹாசனின் மூத்த சகோதரி திருமதி.நளினிரகுதான். அவரிடம் சேர்ந்து 6 மாதங்கள் பரத நாட்டியம் பயின்றேன்.இதனிடையில் கராத்தே வகுப்பும் என்னைக் கவர...அதிலும் சேர்ந்தேன். பரத நாட்டியத்தின் அடவுகளும்,முத்திரைகளும் வேறு ரூபமாக எனக்கு கராத்தேயில் தெரிந்தது.அதனால் என்னால் மிகச்சுலபமாக அதில் திறமையை வளர்த்துக்கொள்ள முடிந்தது.அதனால் எனக்குக் கிடைத்த சிறப்புப் பாராட்டு..அதில் முழுமையாக ஈடுபடவைத்ததால்,பரத நாட்டிய வகுப்புக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன்.
படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக..வெள்ளை,மஞ்சள்.நீலம்,கருஞ்சிவப்பு என்று பட்டைகள் வாங்கி மூன்றரை வருட உழைப்பில் சீனியர் ப்ரவுன் என்ற தகுதியை அடைந்து,அடுத்த முக்கிய கட்டமான கறுப்புப் பட்டைக்கு தயார் செய்து கொண்டிருந்த போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.நானும் என் நன்பனும் பயணித்துக் கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம்,ஒரு சரக்குந்தால் மோதப்பட்டு என் முழங்கால் சேதமடைந்தது.இன்னும் ஒரு மாதத்தில் அந்த தேர்வுக்காக சென்னை செல்ல எல்லா ஏற்பாடும் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து அனைத்தையும் அடைத்துவிட்டது.சென்னையிலிருந்த எங்களின் சீப் சென்ஸாய் திரு.மோஸஸ் திலக் அவர்களும் எனக்குத் தைரியம் கொடுத்தார்.கவலைவேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழித்து நன்றாகத் தேறியதும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று சொன்னாலும் அது முடியாமல் போயிற்று.இன்றளவும் எனக்குள் மிகுந்த வலியுணர்த்தும் இயலாமை இது.
இதே காலக்கட்டத்தில் இசையார்வமும் வந்து கிதார் வகுப்பில் சேர்ந்தேன்.ஒருமாதமாக கைவிரல்களில் ரத்தம் வர கம்பிகளை அழுத்தி முடிந்த அளவு கற்றுக்கொளள முயன்றேன்...ஆனால் வகுப்பைத் தொடர முடியாமல் வேறு சில வேலைகளில் பளு அதிகமாகி விட்டது.தமிழ்கலை மன்றத்தின் நாடக குழுவில் என்ன இணைத்துக்கொண்டு நிறைய நாடகங்கள் அரங்கேற்ற இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ்மன்றங்களின் அழைப்பின் பேரில் போய் வந்து கொண்டிருந்ததாலும்,இளைஞர்களாக சேர்ந்து அணுயுவா என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் சேரிப் பகுதி மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்ததாலும், தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.அதனால் கிதார் கற்றுக்கொள்ளும் முயற்சியும் முற்றுபெறவில்லை.
எங்கள் நாடகத்தின் இயக்குநர் திரு.வெங்கட் அவர்களின் எதிர்பாராத மரணத்தால் நாடக்ககுழுவும் கலைந்துவிட்டது.அதன் பிறகு திருமணம் ஆனது,பொருளாதாரப் பிரச்சனைகள் கூடியது..அதற்கான பொருள்தேடலில் என்னுடைய கலைத்தேடல் கலைந்துபோனது.
பூபாளம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்து மிக வெற்றிகரமாக பத்திரிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த என் நன்பன் பாலாஜி,மற்றும் நாராயனன் இருவரும் வேறு நல்ல வேலை கிடத்து போய்விட்டதால்..அதையும் தொடரமுடியாமல் நின்று விட்டது.
பொருளாதாரத் தேவைகளுக்காக அந்த நாட்களின் சின்னத்திரையில் பல வேலைகளை செய்து வந்தேன். இந்தியில் எடுக்கப்படும் விளம்பரப்படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தபோது,சில பாத்திரங்களுக்கு பின்னனி குரல் கொடுத்து வந்தேன்.மற்றும் சில மேடையலங்கார வேலைகளிலும் ஈடுபட்டிருந்தேன்.அந்த துறையில் மெள்ள வளர்ந்து கொண்டிருந்தபோது ஒரு வாய்ப்பு வளைகுடா நாடு செல்லக் கிடைத்தது.அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதுதால் இந்த துறையிலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு என்னால் பங்காற்ற முடியவில்லை. அதன் பிறகு வெறும் பணம் தேடும் இயந்திரமாகிவிட்டேன்.
இப்படி என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுபெறாமல் பாதியிலேயே பழுதடைந்து நின்றுவிட்டது.எனவே இப்போதும் என் பிள்ளைகளிடம் நான் சொல்வதெல்லாம்...எதைக் கற்றுக்கொள்ள முயன்றாலும் அதை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.எனக்கு இது தெரியும் என்று சொல்லும்போது அதில் சிறப்பானவராக இருத்தல் மிக அவசியம் என்பதைத்தான்.
நான் இதை இங்கே சொல்லவந்ததன் சாராம்சம்.....அரைகிணறு தாண்டுவது எப்போதுமே சரியல்ல...எந்தத் துறையாக இருந்தாலும்..அதன் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.குப்பை அள்ளுவதாக இருந்தாலும்,இவரைப்போல இவ்வளவு சுத்தமாக யாராலும் குப்பை அள்ள முடியாது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.இது என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்டதால் இதை மன்ற உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
Bookmarks