அன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஏழாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு, இந்த பதிவும் எனது ஆறாயிரமாவது பதிவைப் போலவே உணர்ச்சி மயமானது. உண்மையாகக் கூறின் அதனை விட கடுமையான துன்பியல் சம்பவத்தைத் தாங்கியது. அதனாலேயே இதனைப் பண்பட்டவர் பகுதியில் பதிக்கின்றேன். வழமை போல என்னிடமிருந்து ஜாலியான ஒரு பதிவை எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து இந்த பதிவினைத் தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.
இந்த பதிப்பினை வாசிக்க விரும்புவோர் இதுவரை எனது 6000 வது பதிப்பான ஒரு வெள்ளிக் கிழமை விடியலை படிக்கவில்லையெனின் அதனை ஒரு முறை படித்து விட்டு இதனைத் தொடர்ந்தால் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
________________________________________________________________________________________________________________________
அதே காலப் பகுதி, நான் தொடர்ந்து அதே பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். முன்பு நிகழ்ந்த அந்த மோசமான வெள்ளிக் கிழமை விடியலில் தழும்புகள கிட்டத்தட்ட மறைந்து கொண்டிருந்தன என்றே கூறலாம். ஆனால் அதே காலப் பகுதியில் ஆனையிறவு இராணுவத் தளம் மீதான போராளிகளின் வலிந்த தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. போர் அரங்கிற்கும் அப்போது நாம் இருந்த ஜெயந்தி நகர் (இந்த ஜெயந்தி நகரிலேயே நான் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம் என்ற பாடசாலை அமைந்திருந்தது) பகுதிக்கும் கணிசமான தூரம் இருந்தமையால் ஓரளவு போர் அச்சம் இன்றியே நாம் இருந்தோம்.
ஆனாலும் அவ்வப்போது போர் முனை இழப்புக்களால் மக்கள் குடியிருப்புக்கள் மீதான எறிகணை (Artillery attacks) மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களை மிலேச்சத்தனமாக அரச படைகள் நடாத்துவதுண்டு. ஆனால் எறிகணைத் தாக்குதல் எங்களுக்கு ஓரளவு பழகி விட்டிருந்தமையால் அதனை இலகுவாக பாதுகாப்பாக எதிர் கொள்ளும் வழி அறிந்திருந்தோம். எறிகணை தாக்குதல் எங்கள் பகுதிக்கு மீது நடாத்தப் படுவதென்றால் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து நடாத்தப் பட வேண்டும். ஒரு எறிகணை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்டால் அது புறப்படும் வெடி ஓசை முதலிலே கேட்கும் பின்னர் அந்த எறிகணை எங்கள் பகுதியை நோக்கி வந்தால் அது வரும் இரைச்சல் ஓசை கேட்கும் (இதனை ஷெல் கூவுது என்று நாம் சொல்லுவோம்) பின்னர் அது விழுந்து வெடிக்கும் ஓசை கேட்கும். இந்த இரைச்சல் ஓசையை வைத்து அந்த எறிகணை எந்த திசையை நோக்கி நடாத்தப் படுகிறதென்று கூறக் கூடிய வல்லமை எங்களுக்கு காலத்தின் கட்டாயத்தால் தானே கூடி வந்திருந்தது. அதனால் இராணுவத் தளத்தில் இருந்து வந்த எறிகணை எங்கள் பகுதியைத் தாக்க முன்னர் எங்களால் பதுங்கு குழிக்குள் ஓடிச் சென்று பாதுகாப்பாக நிலையெடுக்க கூடியதாக இருந்தது. ஆனால் விமானத் தாக்குதல் கொஞ்சம் பிரச்சினையாக இருந்ததுண்டு, அதாவது நாம் பொது இடங்கள், வீதிகள் போன்ற இடங்களில் நிற்கும் போது இந்த விமானங்கள் வந்து மாட்டிக் கொண்டால் கொஞ்சம் பிரச்சினை தான். போர் விமானங்கள் குண்டு வீச்சுடன் நிறுத்தாமல் மக்களைத் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடுகளை நடாத்திய சம்பவங்களும் ஏராளம் உண்டு.
இப்படியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன முதல் நான் விபரித்த வெள்ளிக் கிழமை விடியல் நடந்து ஒரு நான்கு மாதம் இருக்கும் இன்னும் ஒரு வெள்ளிக் கிழமை அன்று நடக்க இருக்கும் கோரத் தாண்டவம் தெரியாமல் விடிந்து தொலைத்தது. வழமை போல பாடசாலைக்குப் புறப்பட்டுப் போனேன், அன்று வெள்ளிக் கிழமை என்பதால் மனதில் ஏராளம் ஏராளமான சந்தோச அலைகள். ஏனென்றால் வெள்ளியை அடுத்துத் தானே வார விடுமுறை நாட்களான சனி கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் வருமே, அதனால் சிறியவனாக இருந்த என் மனதினுள்ளும் அந்த வார விடுமுறை பற்றி ஏராளம் கனவுகள் சிறகடிக்க நானும் ஒரு சிறு பறவையாகவே சிறகடித்துப் பாடசாலைக்கு போனேன்.
அன்று எங்கள் பாடசாலையில் ஒரு சிரமதான நாள், அதானால் அன்று பல குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து பாடசாலை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தோம். சிறியவர்களான எங்களை பெரிய மாணவர்களும் மாணவர் தலைவர்களும் (Prefects) வழி நடாத்திக் கொண்டிருந்தனர். அப்போது நான் எங்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியைத் துப்புரவு செய்யும் வேலையில் இருந்தேன். எங்களை சில மாணவர்த் தலைவர்கள் நெறிப் படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது நேரம் காலை 9.30 இருக்கும் திடீரென வானிலே ஒரே இரைச்சல், பயத்துடன் நிமிர்ந்து பார்த்தால் இரு சியாமசெட்டி ரக தாக்குதல் விமானங்கள் எங்கள் பாடசாலை இருந்த பகுதியை நோக்கி வட்டமிடத் தொடங்கின. நாம் பாடசாலை வளாகம் எங்கும் சிதறி ஓடினோம், அப்போது நான் எடுத்த ஒரு முடிவு பாடசாலை மைதானப் பக்கமாக ஓடுவதென்று, ஏனென்றால் பாடசாலையில் மைதான வெளியிலே கட்டடங்கள் இல்லாமையால் குண்டு வீச்சினால் கட்டடங்களுள் மாட்டிக் கொள்ளும் அவலம் இருக்காது. அதானல் அது பாதுகாப்பு என்று நினைத்தேன். உடனே அதைச் செயற்படுத்த முனைந்து மைதானத்தை நோக்கி ஓடினேன்....
நான் மைதானத்தினுள் பிரவேசிக்க முற்பட்ட போது ஒரு மாணவத் தலைவர் என்னை மைதானப் பகுதிக்குப் போக விடாமல் தடுத்து என்னை எதிர்த் திசை நோக்கி ஓடுமாறு செய்தார். அவர் என்னை மறித்தது ஒரு வேப்ப மரத்தடியில் வைத்து, அப்போது விமானங்களில் ஒன்று குண்டை வீசுவதற்காக வேகமாக தரையை நோக்கிப் பேய் இரைச்சலோடு வர நான் என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க என்னை அந்த வேப்ப மரத்துக்கு அருகே இருந்த வேலியைக் கடந்து பாடசாலை வளாகத்தை விட்டு விரைவாக ஓடுமாறு கத்தினார் அந்த அண்ணா. நானும் வேலி தாண்டி ஓடினேன், ஓடினேன் ஓடிய வேகத்தில் கால் இடறி ஒரு பள்ளத்தில் விழுந்தேன். எழுந்து பார்த்தால் அந்த பள்ளம் ஒரு பாது காப்புக்காக வெட்டப்பட்ட ஒரு திறந்த வகைப் பதுங்கு குழி. அங்கே ஏற்கனவே இன்னும் சிலர், அதில் ஒரு ஆசிரியரும் இருந்தால் என் கையைப் பிடித்த அவர் பயப் படவேண்டாம் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அப்போது முதலாவது குண்டு வெடித்துச் சிதறும் ஓசை கேட்டது, தொடர்ந்து இன்னமும் மூன்று குண்டுகள் எல்லாமே எங்கள் பாடசாலைகளைச் சூழவே வீழ்ந்து வெடித்தன.
முதல் குண்டு எங்கள் பாடசாலை மைதானத்திம் மத்தியில் விழுந்துள்ளது உணரப் பட என் இதயம் பதை பதைத்தது. அந்த அண்ணா மட்டும் என்னை மறிக்காது விட்டிருந்தால் இன்னேரம் என்னிலை.......?, என்ற கேள்வி மனதில் எழ முதுகுத் தண்டு சில்லிட்டது. ஒரு வாறாக பதுங்கு குழியை விட்டு வெளியேற வெளியே ஒரே புகையும் கந்தக வாசமும் வரவேற்றது. எங்கும் ஒரே ஓலங்கள், இந்த முறை எங்கள் பாடசாலையில் பலர் காயமுற்றிருந்தனர். முதலாவது குண்டு வீச்சு பாடசாலையைச் சுற்றியே நடந்திருக்க இந்த தடவை பாடசாலை வளாகத்தினுள்ளேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்திருந்தன.
அப்போது யாரோ சொன்னார்கள் என்னை மைதானத்துள் போக விடாமல் தடுத்த அந்த அண்ணா (அவரது பெயர் சத்தியமூர்த்தி) முதலாவது குண்டு வீச்சிலே படுகாயமடைந்து விட்டாரென, தலையிலே மோசமாகக் குண்டடிபட்ட சத்தியமூர்த்தி அண்ணாவை அவர் என்னை வைத்து மறித்து திசை மாற்றி அனுப்பிய அதே வெப்பமரத்தடியில் இருந்து கண்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அறிந்தேன். என்னுயிரைக் காப்பாற்றிய அந்த தெய்வத்தின் உயிரைக் காப்பாற்று கடவுளே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
ஆனால், ஆனால் கொஞ்ச நேரத்திலே ஒரு செய்தி எங்களை இன்னும் ஒரு குண்டுவீச்சாக வீடு வந்து தாக்கியது, தெய்வங்களும் என்னைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கைவிட்டு விட்டனவென்று.......
நெஞ்சம் கனக்க, கண்கள் பனிக்க என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.....
ஏன், ஏன் இப்படி?
என்ன செய்தார் அந்த அண்ணா?
காலையில் புறப்பட்டு பாடசாலை வந்தது தான் அவர் தப்பா?
இல்லை படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்தது தான் அவர் தப்பா......?
என்று ஆயிரம் ஆயிரம் விடை கிட்டா கேள்விகளுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.....
காலங்கள் உருண்டன அந்த அண்ணனுக்கு கூட பிறந்த இரு தம்பிகள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்த இரட்டைப் பிறவிகள், ஒரு நாள் ஒன்றாகவே சேர்ந்து இருவரும் தங்களை தாங்களாகவே விடுதலைப் போராளிகளுடன் இணைத்துக் கொண்டனர்.......
இந்த இரண்டாவது வெள்ளிக் கிழமை விடியலும் மீள முதலாவது வெள்ளிக் கிழமை விடியலில் நான் எடுத்த முடிவை மேலும் வலுவாக்கின........
போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!
Bookmarks