நண்பனே...!
காற்று காற்று வாங்க
கடற்கரை போகையில்
கடலை வட்டமிடும்
பறவை பார்ப்பதில்லையா...?
இலை நறுக்கவென
கொல்லை ஏகுகையில்
அம்மியுடன் மல்லுக்கட்டும்
ஆடு அறிவதில்லையா....?
பனங்காய் பொறுக்கவென
வடலியை நாடுகையில்
காவோலையை வளைக்கும்
காளை காண்பதில்லையா...,
காலியாய் கிடந்த காணி
பாரமாகும் காரணி தேடுகையில்
சுடுமணல் கும்பியில் நடமிடும்
கோழி தெரிவதில்லையா....?
போகுமிடம் எங்கும்
போதி மரங்கள் இருந்தாலும்
உனக்கு மட்டுமேன்
கிட்டுவதில்லை புத்தர்நிலை...?
உருவத்தை அழித்து
நிழலையேன் தேடுகிறாய்
உச்சியில் சூரியன்
பார்த்துச் சிரிக்கையில்..?
எழுதிவிட்டு யோசித்தால்
அர்த்தம் மறையுமென்
கவிதைகள் போலல்ல
நமது வாழ்க்கை..!
எத்திசை நோக்கினும்
உனைபார்த்து புன்னகைக்கும்
மோனாலிசா ஓவியம்.....!
கலங்களுக்கு மட்டுமல்ல
காலங்களும் உள்ளதடா
காலாவதி திகதி...!
காலத்தை பத்திரப்படுத்தும்
களமமைக்க புறப்படு
காலத்தை பதப்படுத்தி
கவிதை வடித்திடு....!
Bookmarks