காந்தாரியின்
கருவில்லா வயிற்றின்
கந்தகத் தவிப்பை
என்னுள்ளும் உணர்கிறேன்...
அவள் பெற்ற வரம் நான் பெற
அவள் வாழ்ந்த
யுகமல்லவே இது!
பிஞ்சுக்கால்களின்
கொஞ்சல் உதைகளை
கதைகளில் மட்டுமே கேட்டு
கண்களோடு என்
கருவறையும் கலங்குகிறது!
வற்றிய வயிற்றின் மீது
தலையணை வைத்து
தாயாகிப்பார்க்கிறேன்..!
என் வீட்டிலும் மாங்கன்று...
புளிப்பாய் மாம்பிஞ்சு...
உமிழ்நீர் சுரக்கவில்லையே....!
காய்க்கின்ற மரம்தான்
கல்லடிபடும்...
காய்க்கா மரமெனக்கு
ஏனித்தனை சொல்லடிகள்...?
இரணமான மனதை
உணவாக்கிக் கொள்வதே
குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!
கருப்பை மறந்தது
தன் பொறுப்பை
கடவுளும் கேட்கவில்லை
என் விருப்பை....!
கறுப்போ..சிவப்போ
அழகோ...அவலட்சனமோ,
ஆணோ..பெண்ணோ
அடிவயிறு வளர
ஆண்டவன் அருள வேண்டும்
அம்மா என்றென்னை
அழைக்க வேண்டும்...!
Bookmarks