ஒரு மகாபெரிய குழப்பம்..இன்னும் அது தீர்ந்தபாடில்லை...
அது என் பிறந்தநாள் எது என்பதுதான். பிறந்த வருடம் தெரியும்..பிறந்தநாள்..அதாவது.வெள்ளிகிழமை என்பது தெரியும்
ஆனால் எந்த வெள்ளிக்கிழமை..என்ன தேதி..ஹீஹும்..தெரியாது.
இப்போது நான் உபயோகப்படுத்துவது(?) என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்தபோது ஏதோ ஒரு ஆசிரியர் எழுதி வைத்தது.
என் தாயார் எழுத்தறிவில்லாதவர்,ஆனால் தந்தையார் அந்த காலத்து அஞ்சாங்கிளாஸ். இருந்தாலும் ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்தவர். நான் வீட்டின் கட்டைக்குட்டி. நான் பிறந்ததும் வீட்டில்தான்.நாங்கள் சகோதர சகோதரிகள் யாருமே மருத்துவமனையில பிறக்கவில்லை. அதனால் முறையான பதிவு எதுவும் இல்லை..இருந்த ஒரே பதிவு என் தந்தையார் குறித்து வைத்திருந்த டைரி மட்டும்தான்.இப்போது அவரும் இல்லை.டைரியுமில்லை
இதில் சோகம் என்னவென்றால்,என் தந்தையாருக்கு விகடன்,குமுதம்போன்ற வாரப் பத்திரிக்கைக்களைப் படிக்கும் பழக்கம் இருந்ததால்,கண்ணில் கிடைப்பதையெல்லாம் வாங்கி வந்து விடுவார். அவையெல்லாம் அதிகமாக சேர்ந்துவிடும் போது அவற்றை பழையபேப்பர்காரனிடம் போட்டுவிடுவார் என்னுடைய தாயார். அந்தக்கூட்டத்தில் ஒருமுறை இந்த வரலாற்று செப்பேடும் சேர்ந்து போய்விட்டது. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களெல்லாம் இல்லாத காலமானதால்
அதைப் பற்றியெல்லாம் அப்போது நாங்கள் யாருமே சிந்திக்கவில்லை.
அதுவுமல்லாமல் என் தந்தையார் ஜோதிடம்,ஜாதகம் இதன் மேலெல்லாம்
நம்பிக்கை இல்லாதவர். அமாவாசையன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் அன்றுதான் ஆட்டுக்கறி வாங்கி வருவார். கேட்டால் இன்னைக்குத்தான் யாரும் சாப்பிடாததால் நல்ல கறி கிடைக்கும் என்பார்.அதனால் எங்கள் யாருக்குமே ஜாதகங்கள் எழுதப்படவில்லை. எனவே பிறந்தநாள் அறிந்துகொள்ள உதவும் அடுத்த ஆதாரமும் இல்லையென்றாகிவிட்டது.
என்னுடைய இருபதுகளில் அதற்கான அவசியம் ஏற்பட்டபோது தோண்ட ஆரம்பித்தேன். என் தாயாரின் கணக்கை பாருங்கள்....நாங்கள் வாடகை வீட்டில் இருந்ததால் எல்லா ஒன்றாம் தேதியும் வாடகை கொடுப்பது வழக்கம். நான் பிறந்த அன்று காலையில்தான் வாடகை கொடுத்தார்களாம்.
அதனால் ஒன்றாந்தேதி என்று வைத்துக்கொள்ளலாம் என்றால்..அடுத்து இன்னொன்று சொன்னார்கள்...ஆனி மாசம் 15−ஆம் தேதிதான் நீ பிறந்தாய் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்தார்கள். ஆனால் அந்த வருடம்(1963)
ஆனி பதினைந்து ஜூன் 29 ஆம் தேதியாக இருந்தது,அதுவும் வெள்ளிக்கிழமையாக இருந்ததால்... மூன்றுக்கு இரண்டு என்ற வாக்கு விகிதத்தில் 29−ஆம் தேதியே என் பிறந்தநாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் குழப்பம் தீரவில்லை.இந்த குழப்பத்தினால் விளைந்த நன்மை நிறைய....ஜாதகம் இல்லாததால் என் திருமணத்தில் அனாவசியமான அலசல்கள் தேவைப்படவில்லை.செவ்வாய்,புதன்,வியாழன் என்ற எந்த தோஷமும் எனக்கில்லை.ராசியோ...நட்சத்திரமோ நானறியேன்
அதனால் "இன்றைய உங்கள் ராசிபலன்..." என்று தொலைக்காட்சியில்...மிகு டெஸிபலில் பயமுறுத்தும்போது அது என்னை பாதிப்பதில்லை.தேமேயென்று பார்ப்பதோடு சரி.
என்ன என் பிள்ளைகள்தான் என்னை கிண்டலடித்துக்கொண்டே இர்ருக்கிறார்கள். அப்பா 29−ஆ...30−ஆ...என்று.
Bookmarks