அன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஆறாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு.
இந்த பதிவை எனது நட்பின் மடியிலே சமர்பிக்க நான் எடுத்த முடிவின் விளைவே இந்த வெள்ளிக் கிழமை விடியல்...............!
___________________________________________________________________________________________
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை...........!
-------- அறிவுமதி (நட்புக் காலம்)
நான் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப் பிரபல்யமான ஆனையிறவுக்கு அருகாமையில் இருந்த குமரபுரம் என்ற கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவன். இந்த ஆனையிறவு என்றழைக்கப்படும் பிரதேசம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தரைப்பாதையின் வாசலாக இருந்து கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டுவரை இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டில் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையின் வரை படத்தில் தலைபோலிருக்கும் யாழ்ப்பாணத்தின் கழுத்துப் பகுதியில் இருந்தது இந்த ஆனையிறவு. அந்த கழுத்திலே விழுந்த ஒரு சுருக்குக் கயிறாக இருந்தது ஆனையிறவில் இராணுவம் அமைத்த தடை முகாம். அந்த தடை முகாமைக் கைப்பற்ற போராளிகள் காலத்திற்கு காலம் நடாத்திய வலிந்த சமர்களாலும், அந்த தடை முகாமை மையமாக வைத்து இராணுவம் அடிக்கடி கிளிநொச்சி மாவட்டம் மீது நடாத்தி வந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அடிக்கடி இடம் பெயந்து கொண்டிருந்தது எங்கள் குடும்பம்.
அப்படி ஒரு இடப் பெயர்வால் நான் புதிதாக சென்று சேர்ந்த பாடசாலை கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயம் (தற்போது கிளி இந்துக் கல்லூரி).ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று இரண்டாம் ஆண்டின் துவக்க காலமது, நான் அதுவரை படித்த பாடசாலையிலிருந்து இந்து மகாவித்தியாலயத்திற்கு காலத்தின் கோலத்தால் அடியெடுத்து வைத்தேன். அப்போது நான் ஆண்டு 6 இல் கல்வி கற்ற ஒரு சின்னஞ் சிறியவன். கண்களிலே கனவுகளுடன் மனதைப் பட்டாம் பூச்சியாக சிறகடிக்க வைத்துக் கொண்டு வீடு, பாடசாலை, வீதிகள் என்று ஓடி திரிந்த ஒரு இளம் குருத்து. வாழ்க்கையின் நல்லது கெட்டது எதுவென்றே அலசிப் பார்க்க அறியாப் பருவம் அது.
நான் அந்த பாடசாலையின் எனது வகுப்பினுள் அடியெடுத்து வைத்த அந்த முதல் நாள் நான் அமர்வதற்கு ஒரு இடம் இருக்கவில்லை, அப்போது என்னைத் தன்னருகே அழைத்து தன் இருக்கையில் ஒரு பாதியை எனக்கு தந்து பின்னர் எனக்கென்றும் ஒரு தனி இருக்கையை ஒழுங்கமைத்து தந்தான் அந்த வகுப்பிலேயே வாட்டசாட்டமாக இருந்த ஒரு நண்பன். அன்று தானறிந்தேன் அவனது பெயர் துஸ்யந்தன் என்று, துஸ்யந்தன் என்னிடம் முதல் கேட்ட கேள்வி நன்றாக படிப்பாயா நீ என்று?, ஆம் பரவாயில்லை ஏன் என்றேன், இல்லை எங்கள் மக்கள் எல்லோருமே படிப்பை விட மற்றைய விடயங்கள் எல்லாவற்றிலும் நல்ல கெட்டி அதனால் புதிதாக வந்த நீயாவது படிப்பில் கெட்டியாக இருக்க வேண்டாமா என்றான் சிரித்துக் கொண்டே., நானும் சேர்ந்து சிரித்தேன்.
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன, துஷி என் மனதை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான். பாடாசாலை வளாகங்களில் அவனிருக்கும் இடமெங்கும் நானும் நானிருக்கும் இடங்களில் அவனும் என்ற வழமை வந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் காலங்களில் நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எதுவென்றாலும் துஷியும் நானும் ஒரே பக்கத்திலேயே இருப்போம், அவனது அபாரத் திறமையால் நான் சார்ந்த குழு வெற்றியை பறிக்க, ஏதோ நானே சாதித்த திருப்தி என்னுள்ளே எழும். அந்த பாடசாலைக் காலங்களில் எழும் வம்புச் சண்டைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்காக இருக்கவில்லை, அந்தக் காலங்களில் நான் அதிகமாக வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம், ஏனென்றால் துஷி தான் என்னுடன் இருக்கிறானே. யாராவது என்னை பயமுறுத்த வந்தால் அவர்கள் துஷியைப் பார்த்து ஓடி விடுவார்களே.......!.
அப்போது நாங்கள் ஒரு நாடகத்தை ஒரு நாடகப் போட்டிக்காகத் தயாரித்துப் பழகிக் கொண்டிருந்தோம், அந்த நாடகத்தின் பெயர் முயலார் முயலுகிறார் என்பது. சிங்கத்தை ஏமாற்றி கிணற்றில் தள்ளிய முயலின் கதையை நாம் நாடகமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் துஷி தான் சிங்கம், அவன் சிங்கம் போல நடந்து வரும் அழகே அழகுதான்.
அவன் அந்த நாடகத்திற்காக பாடி ஆடும் வரிகள் இன்றும் என் மனதினுள்........
தகிட தகிட தகிட தோம்...
இந்தக் காட்டிற்கு அரசன் நான்
தகிட தகிட தகிட தோம்..
நினைத்ததையெல்லாம் செய்குவேன்.........!
தகிட தகிட தகிட தோம்..
எந்த நாளும் அரசன் நான்
தகிட தகிட தகிட தோம்..
இறக்கும் வரை அரசன் நான்.........!
அவனது அபாரத்திறமையாலும் வழிகாட்டலாலும் நாங்களே அந்த நாடகப் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தோம், அந்த நம்பிக்கையைக் குலைக்கவெனவே வந்தது ஒரு வெள்ளிக் கிழமை விடியல்..........
அந்த வெள்ளிக் கிழமை விடியலுக்கு முதல் நாள் நானும் துஷியும் ஒன்றாக இருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவன் கேட்டான் ஒரு கேள்வி டேய் தப்பித் தவறி எனக்கு எதாவது நடந்தால் நீ என்னை மறந்திடுவியாடா என்று?. அப்போது எனக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புலப்படவில்லை, என்னடா லூசுத் தனமாகக் கதைக்கிறாய் என்று அவனை அதட்டி அதற்குப் பதில் சொல்லாமலேயே விட்டு விட்டேன்.
அந்தப் பொல்லா வெள்ளியும் மலர்ந்தது வழமை போலவே, நானும் வழமை போல் பாடசாலைக்குப் சென்று என் வகுப்பறைச் சுவரில் ஏதோ ஒரு படத்தை மாட்டுவதற்காக கதிரை மேல் ஏறி நின்று சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன், அப்போது நேரம் காலை 8.05 இருக்கும். இன்னமும் ஐந்து நிமிடங்கள் பாடசாலை தொடங்குவதற்கு இருந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவராக பாடசாலைக்குள் வந்து கொண்டிருந்த நேரமது. வானத்திலே போர் விமானங்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன, எங்களுக்கு அது பழகிப் போன ஒரு விடயமாக இருந்தமையால் நான் அதனைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளமால் என் வேலையில் கருத்தாக இருந்தேன்.
திடீரென ஒரு அவலக் குரல் எல்லோரும் ஓடுங்கோ என்று...........
என்ன எதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே நான் கதிரையிலிருந்து தூக்கி வீசப் பட்டிருந்தேன்..........
எழுந்து பார்த்தால், எங்கும் அவலக் குரல்கள்........
நாசியை நெடிக்கும் கந்தக வாசம்...........
கரும்புகையும் புழுதியும் கலந்த கலவை எங்கும் வியாபித்து........
அப்போது தான் புரிந்தது இராணுவ போர் விமானத்தின் மிலேச்சத் தனத்திற்கு எங்கள் பாடசாலை அன்று பாதிக்கப் பட்டு விட்டதென்று, வகுப்பறைவிட்டு வெளியே ஓடி ஏற்கனவே தயார் நிலையில் அமைக்கப் பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒன்றுள் என்னை நுளைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அரை மணி நேரம் வானில் வட்டமிட்டு இன்னமும் மூன்று வெடி குண்டுகளை எங்கள் பாடசாலைக்கு அருகே விதைத்து விட்டுச் சென்றன அந்த இரண்டு சியாமா செட்டி ரக போர் விமாங்களும். எல்லாம் அடங்கி வெளியே வந்தேன் பாடசாலை ரணகளப் பட்டிருந்தது, பாடசாலைக்கு உள்ளே குண்டு விழவில்லை என்றாலும் முதல் குண்டு பாடசாலையின் வாயிலை ஒட்டியும் மீதி மூன்றும் பாடசாலைக்கு பின்னே இருந்த வளவு ஒன்றினுலும் விழுந்து வெடித்திருந்தன.
அப்போது அவசர காலத் தொண்டர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளில் மும்முரமாயிருந்தனர். நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கையில் என் கையை வந்து பிடித்தார் எனது அண்ணா அவர் அதே பாடசாலையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தார் அப்போது. என்னை வீடு அழைத்துச் சென்ற அண்ணா கூறினார், தம்பி முதலாவதாக வெடித்த குண்டிலே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த உன் துஷியும் காயமடைந்து விட்டான் என்று. அதனைக் கேட்க என் மனதுக்குள் இன்னும் பல வெடி குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன, முதல் நாள் உணவருந்துகையில் எனதன்பு துஷி என்னிடம் கேட்ட கேள்வி பூதகரமாக என் நினைவுக் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது.
பின்னர் வந்த செய்திகள் மூலம் துஷியின் வலது கால் விமானக் குண்டு வெடிப்பால் துண்டிக்கப் பட்டதாகவும் அவனை மேலதிகச் சிகிச்சைக்காக யாழ்ப்பண மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாகவும் அறிந்தேன். பல நாட்கள் அவன் நினைவுடன் கழிந்த போது கிட்டத் தட்ட இரு மாதங்களின் பின் மீள வந்தான் என் துஸ்யந்தன். முதலில் அவன் கண்களை என்னால் நோக்கவே முடியவில்லை, அப்போது என் தோளிலே அவன் கரம் விழ, தோள் கொடுக்கத் தானே தோழன் என்று உறுதியாக அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றினேன். என் துஷி ஓடித் திரிந்த வீடு, பாடசாலை, வீதி எல்லாம் அவன் ஊன்று கோலால் தாண்டித் தாண்டி நடக்கையில் என் மனமும் விந்தி விந்தி நடந்தது. இதற்கிடையில் நாம் தயாரித்த அந்த நாடகமும் துஷி இல்லாமல் விந்தி விந்தி போட்டியிலே தோல்வியைத் தழுவியது.
இறைவன் கொடியவன் தானோ, என்ன தான் செய்தான் இந்த பிஞ்சு மனத்தான், ஏன் இவனைத் தண்டிக்க வேண்டும்? போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள்? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் என் மனதுள் அதே கேள்விகள் துஷி மனதினுள்ளும் எழுந்திருக்க வேண்டும் போல, அவனது நடத்தைகள் அத்னை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன் என் துஷி மாறி விட்டான், அவனை இந்த விபத்து முற்றாக மாற்றி விட்டதென்று.
தொடர்ந்து ஆண்டுகள் உருள, நான் என் பழைய பாடசாலைக்கு மீண்டும் மாறிப் போனேன், அப்போது ஒரு நாள் யாரோ ஒருவர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். எனது துஸ்யந்தன் தன்னை முற்று முழுதாக போராளிகளுடன் இணைத்துக் கொண்டு விட்டானென்று. என்னை அவனது முடிவு அதிர வைத்தாலும், அவனது செய்கையில் என்னால் தவறேதும் காண முடியவில்லை.
அதன் பிறகு இன்று வரை நான் என் துஸ்யந்தனை மீளச் சந்திக்கவில்லை, ஆனால் போராளிகளுக்குள் அவன் ஒரு உன்னதமான போராளியாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இமயமளவுக்குண்டு. ஏனென்றால் என் துஷி ஒரு அபூர்வப் பிறவி, எங்கிருந்தாலும் அவன் பிரகாசித்துக் கொண்டே இருப்பான். அவனது பிரகாசம் எங்கள் தாயக விடுதலைக்கும் வலுச்சேர்த்துக் கொண்டிருக்கும்.
இறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!
Bookmarks