6
ரிதுபவனின் மூன்று மைல்கல் தொலைவில் இருந்த அந்த கிராமத்தின் தபால் நிலையத்தை சென்று அடைந்தனர் கோபால்-ராணி தம்பதியர்.
வழியில் துளுவில் பேசிக் கொள்ள முயன்றனர். அடிக்கடி ஒருவர் சொன்னதை இன்னொருவர் புரிந்துக் கொள்ளாததால் தமிழ் படுத்தி பேச வேண்டியிருந்தது.
எடுத்துக் கொண்ட காரியம் கடினம் என்பதைவிட இந்த மொழி பிரச்சனை அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.
ஆசனவாயில் கல்வைத்து எடுக்க முயன்ற அவன் பின்புறம் ரணமாகியிருந்தது. உட்கார முடியாமல் தவித்தான்.
வருவதற்கு முன்பு ஒரு சர்ஜரி வேறு. இரண்டு பேருடைய இடது மணிக்கட்டில் ஒரு சிறிய ஜிபிஸ் சிப் வைத்து தைத்தனர்.
இது நீங்கள் எங்கே போகறீங்கன்னு சாட்டிலைட்டில் நாங்க கண்டுபிடிக்கறதுக்கு. இது மெடல் டிடெக்டரில் கண்டுபிடிக்க முடியாது.
சார் இந்த ஆபேரேஷனோட தழும்பு இருக்குமா என்று கேட்டாள் ஜெயா.
இருக்காது. கவலை படாதீங்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டுமானாலும் ஒரு காஸ்மெடிக் சர்ஜரி பண்ணிடலாம்.
மொரிஷியஸில் கடைசியாக நடந்த உரையாடல்கள் அவர்களுடைய மனதில் வந்து சென்றன.
மிகவும் எளிமையான துணிமணிகளாக பார்த்து சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியிருந்தார்கள். கால்களில் ஹவாய் செருப்புகள். மொரிஷியஸில் இன்னொரு பயிற்சி உடல் கறுப்பதற்கு. தினமும் வெயிலில் பல மணி நேரம் ஒரு மருந்து தடவிக் கொண்டு படுத்திருக்க வேண்டும். ரமேஷூம், ஜெயாவும் நிறைய கருத்திருந்தனர். ரமேஷ் தபால்காரனின் உடைகள் தைத்துக் கொண்டான்.
நேராக தபால் நிலையத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டான் கோபால். பிறகு போஸ்மாஸ்டரிடம் இங்கே ஏதாவது வீடு கிடைக்குமா என்று கேட்டான்.
கவலைப்படாதீங்க கோபால் நம்ம க்ளாஸ்போர் ஜெயபால் எல்லா ஏற்பாடும் செய்வார் என்றார்.
இவருக்கு மிஷன் பற்றி தெரியுமா இல்லை இவரை பொருத்த வரையில் தான் நிஜமான தபால்காரனா என்று தெரியவில்லை. பாஸிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அந்த சந்தடி மிக்க சிறிய ஊரின் முக்கிய வீதியில் பல வீடுகளை காட்டினான் ஜெயபால். அதில் தேனீர் கடையின் அருகில் இருந்த அதிக சந்தடி மிக்க அந்த வீட்டை தேர்ந்தெடுத்தனர் தம்பதியர்.
1000 ரூபாய் அட்வான்ஸ் 200 வாடகை என்று சுருக்க பேசினார் அந்த வீட்டின் உரிமையாளர். புதியவர்கள் வருவதை அந்த ஊரில் யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் அவர்களுடைய சுருக்கமான பேச்சுகளால் இருவருக்கும் புரிந்தது. ஆனால் அனைவரும் பரிவாக இருந்தார்கள்.
ஜெயபால் சென்றதும் இருவரும் கடைத் தெருவிற்கு சென்று அலுமினிய பாத்திரங்கள் மற்றும் சமையல் அடுப்பு இதர வீட்டு சாமான்களை வாங்கி வந்து வீட்டை அமைத்துவிட்டு, கொண்டு வந்த நவீன மின்-அணு கருவிகளை வீட்டில் அங்கங்கு பதுக்கி வைத்தனர்.
பிறகு அருகிலிருந்து சிறிய உணவகத்தில் உண்டுவிட்டு பேசாமல் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலையில் ராணி ஒரு நல்ல நடுத்தர குடும்ப மனைவியை போல காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு சாணி தெளித்து காலை சிற்றுண்டியை செய்தாள்.
கோபாலும் நடுத்தர குடும்பத்து உழைப்பாளி போல குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு நேராக தபால் நிலையம் சென்றான்.
கோபால், இன்னிக்கு உங்களுக்கு சிதம்பரம் துணையா வருவார். ரிதுபவன் இருக்கறதால இங்க நிறைய தபால்கள் வர ஆரம்பிச்சிடுச்சு, அதனால் இரண்டு தபால்காரங்க வேண்டும்னு கேட்டிருந்தோம். அதனால பீட் பார்த்து இரண்டு பேரும் வேலை செய்யனும்.
சைக்கிள் இருக்கா
இல்லை சார். இப்பதான் வந்திருக்கேன். அடுத்த மாசம் சம்பளம் கிடைச்சதும் வாங்கிடறேன்.
பரவாயில்லை. போஸ்டாபீஸ்ல ஸ்பேர் வண்டி இருக்கு.
சரி சார்.
ரிதுபவனுக்கு தபால் போட போகும்போது ஜாக்கிரதையா இருக்கனும். அதிகம் பேசக்கூடாது. தபால் வெளியில் இருக்கற பெட்டியில் போட்டுட்டு வந்திடனும். யாராவது உள்ளே கூப்பிட்டா போயிடாதீங்க. எது கொடுத்தாலும் வாங்கிக்காதீங்க. சில பிரச்சனைகள் இருக்கு இந்த ஊர்ல. அது தான் தமிழ் நாட்டிலேர்ந்து யாரையும் எடுக்காம தமிழ் பேசத் தெரிஞ்ச ஆனா வெளி மாநிலத்து ஆளா உங்களை மங்களூர்லேர்ந்து வரவழைச்சிருக்கோம். போக போக தெரிஞ்சிப்பீங்க என்று பீடிகையுடன் பேசினார்.
ஆஹா. இவருக்கு நம்மை பத்தி எதுவும் தெரியாது என்று முடிவு செய்துக் கொண்டான்.
வேலை முடித்து வீட்டுக்கு போகும் முன் தேனீர் கடைக்கு சென்று அண்ணே இங்கே அது கிடைக்குமா என்றான்.
எது
அதான்னே பாக்கெட்டு
பால் பாக்கெட்டா
இல்லைண்ணே சரக்கு
சரக்கா
ஆமா
அட நீ சாராயக் கடையை கேட்கறீயா. உனக்கு அந்த பழக்கம் எல்லாம் இருக்கா
ஐயோ போஸ்ட் மாஸ்டர் கிட்டே சொல்லிடாதீங்க. வெறும் ராவுக்கு மட்டும்தான் என்றான் கோபால் நெளிந்தபடியே.
அட இதுக்கு போயி. இந்த தெருக்கோடியில் வலது பக்கம் ஒரு சந்து இருக்கு. அதுல போனின்னா ஒரு தென்னந்தோப்பு வரும். அதுக்கு நடுவில இருக்கு. 7 மணிக்கு தான் தொறக்கும். இப்பவே போயிடாதே என்றார் அந்த டீக்கடைக்காரர்.
சரி என்று மண்டையாட்டிவிட்டு அங்கே உட்கார்ந்தான்.
என்னப்பா வீட்டுக்கு போயேன் என்றார்.
என்ன வீடு அண்ணே. வீட்டுக்கு போனா ஒரு சண்டை தான்.
அப்படியா என்னப்பா பிரச்சனை.
அட போங்கண்ணே. முதல் நாளே சோக கதை சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு.
அட சொல்லுப்பா. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கலாம்ல
அண்ணே, எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் கொழந்தையே பொறக்கலை. தினம் சாயந்திரமானா அழுவ ஆரம்பிச்சிடும். நானும் சமாதானம் பண்ணுவேன். அப்புறம் சண்டையாயிடும். அது அதோட தங்கச்சிய கட்டிக்கோன்னு சொல்றா அண்ணே. எப்படி முடியும் என்றான் கோபால் அப்பாவியாக.
சரிதாம்பா நீ சொல்றது. அத்தோட கஷ்டமும் பார்த்தா பாவமா தான் இருக்கு. இந்தா டீ சாப்புடு
அவர் பரிவாக கொடுத்த டீயை வாங்கி குடித்தான்.
பிறகு ஏழு மணி ஆனதும் சாராயக் கடையை நோக்கி நடந்தான்.
Bookmarks