என் 5000 பதிவு.
என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அனுபவ கட்டுரையாக இங்கு பதிக்கிறேன்...
இது என்ன உறவோ!!!
"அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, ச்சே தட்டிக் கேட்க ஆளில்லைனா இப்படிதானா?, சமயலறை பக்கமே போக மாட்டோமா, சரியா சமைக்கத் தெரியாம, கல்யாணம் முடிந்து வீட்டில் கஞ்சியா வைத்து குடிக்கபோகிறோம்? கடவுளே!! காப்பாற்று! என்னை அல்ல அவனை முதலில் காப்பாற்று!" மெல்ல மனம் சிரித்தது.
ஆமாம் ஒரு ஆளுக்கு என்னாத்த சமைக்க, அதுவும் சொந்த சமயல சாப்பிடுற கொடுமைய விட வேற என்ன இருக்கு உலகத்திலே? என்ன கொடுமை சரவணன் இது?
ஒரு மொட்டைக்கை குர்த்தாவும், ஜீன்சும் போட்டுக் கிட்டு, புத்தகப்பை தோளில் மாட்டிகிட்டு, காதில் வாக்மேனில் சநி சப நி பக 'நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா' , 'இளமாலை நேரம் வந்தாள்; இதழோடு ஏதோ சொன்னாள்' என்று என்னை விஸ்வனாதன் அங்கிளும் பாலாவும் மயக்க, பஸ் விட்டு இறங்கி காலேஜ் முடிந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன்,
மலேசியாவில் சில ஓட்டுக்கடைகள் கூறை மட்டும் வைத்து காற்றோட்டமாக இருக்கும், உடனுக்குடன் சமையல் செய்து கொடுப்பார்கள், கொஞ்சம் சுத்தமாகவும் இருக்கும். 'மாமாக் கடை' என்று சொல்லுவார்கள். மாமாக் என்றால் மலாய் அல்லாத முஸ்லீம் மக்கள் என்று அர்த்தம். 'மாமாக்'கடை என்றால், இந்திய முஸ்லீம் மக்களின் கடை, ஆனால் தற்பொழுது தமிழ் மக்களின் கைவசத்தில்தான் அதிக கடைகள் உள்ளன. சம்பளம் குறைச்சலுக்காக வேலையாட்கள் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகும். சைவ உணவுகளும் இருக்கும். அசைவத்தில் கோழி, ஆடு, மீன் மற்றும் முட்டை மட்டுமே சமைப்பார்கள். மற்ற இறைச்சிகள் சமைக்க மாட்டார்கள்.
சலித்து கொண்டே வீட்டிற்க்கு கீழே, (நான் தங்குவது மாடி கட்டிடம் வீடு) அனுதினமும் அமரும் அதே மாமாக்கடையில் இன்றும் வந்து 'அப்பாடா' என்று உட்கார, தமிழ் நாட்டு பசங்க பறந்து கட்டிகிட்டு வந்து, சுகமா?, சௌகியமா?, நலமா?னு விசாரிக்க கௌண்டரில் அமர்ந்திருந்த ரூபிணியக்கா கண்ணாலே சிரித்தாள். எல்லாம் வயசுக் கோளாறு என்று சமையல் அண்ணாவிடம் கை காட்டி விட்டு, சௌகியமா ஓவி?, என்ன சாப்பிடுறே? என்று கேட்டார். (என்னை நிஜத்திலும் ஓவி@ஓவியா என்று அழைபவர்களே இவ்வுலகில் அதிகம்)
"ஓவி ஆல்வேய்ஸ் குட்; இன்று பஜனைகிலாசில் கோவிந்தா போட போகணும், தோசையும் சட்டினியும் போதும். மாம்பழ ஜூஸ் பிலிஸ்" என்றேன். ருபிணியக்காவின் பையன் பிரபு, "சித்தி!" என்று உரிமையுடன் கட்டிக்கொண்டான். அவன் கொழு கொழு கன்னத்தைக் கிள்ளி விளையாடினேன்.
"பஜனையா?? அப்ப அந்த வங்காளிப் பையன் வருவானே! " குசும்பாக சிரித்தார் ரூபிணியக்கா,
எனக்கும் மனதில் அவனின் அழகிய முகம் வந்து போனது. பெருமூச்சுடன், "யப்பா என்ன அழகுடா அவன் " என்றேன் மனதினுள். ஒவ்வொரு முறையும் அவன் என்னையே ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது நான் வெடுக்கென்று திரும்பி அவன் முகம் காணுவேன். நாணிப்போவான் அந்த ஆணழகன். அனைவரிடமும் நன்றாக தமிழ் பேசுவான். (என்னிடம் பேசியதில்லை) அடக்கமானவன், மிகவும் நல்லவன். நல்ல பக்தியுள்ள சீமான்.
அவன் என்னை சைட் அடிப்பதை என் தோழிகளும் பல முறை கவனித்துள்ளனர். அப்பொழுதெல்லாம், "வங்காளி பார்ட்டி பார்க்குறான், பங்கரா ஆடு ஓவி!" என்று கிண்டலடித்திருக்கிறார்கள். நான் கண்டு கொள்ளமாட்டேன், ஏனோ ஆத்திரப்படவும் மாட்டேன்..... மௌனியாவேன்... எல்லா பெண்களிடமும் பேசுவான், என்னிடம் மட்டும் பேச மாட்டான்.
ஒரு வேலை வெட்கமோ!! ஆண்களுக்கு வெட்கமா!! ச்சே ச்சே நான் கூந்தலில்தான் பூ சுத்துவேன் காதில் அல்ல.
" இருந்தாலும் நம்ப பொண்ணு இன்றுவரை சிங்கிடம் 'ஹை'னு ஒரு வார்த்தை கூட பேசினதில்லையாம் ", ரூபினியக்காவின் கணவர் ராம் அண்ணா ஜால்ரா போட்டார். ராம் அண்ணாதான் கடையின் முதலாளி, சமயலண்ணாவும் ஜாடையில் அப்படியா, இப்படியா என்று கலாய்க்க, சிரித்துகொண்டே ரசித்தேன், தோசையையும் ருசித்தேன்.
எதிர் மேசையில் ராமண்ணாவின் தோழர் ரகு, வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவரைக்கண்டதும், தோசையின் ருசி மறந்தே போனது. சாப்பிட்டு விட்டு அவசரமாக கிளம்பினேன். கடையின் வழிதான் கோவிலுக்கும் போக வேண்டும். வீட்டிற்க்குச் சென்று குளித்து, புடவையை கட்டிக்கொண்டு, கழுத்துவரை கூந்தல் காற்றில் அலைபாய காட்டன் சாரியில் ஒய்யாரமாக வந்தேன். (எல்ல பெண்களும் பிலிம் காட்டும் பொழுது செய்யும் ஒரு செயல் இது, ஓவியா ஒரு சாதாரண பெண், கொஞ்சமாவது இருக்காத பின்னே?)
அப்பொழுதும் ரகு வாடிய முகத்துடன்தான் புன்னகைத்தார். என்னை கண்டதும் கடையில் பசங்க...... ஆ ஆஹ ஓ ஓஹொ என்று கிண்டலடிக்க, ரூபினியக்கவோ, " ஓவி! இப்படி போனா, அவன் சைட் அடிக்காம என்ன செய்வான். பாவம் அந்த வங்காளிப்பையன் அவனைக்கொடுமை பண்ணதே!" என்றார், புன்னகைத்தவாறே நடையைக் கட்டினேன்.........மனதில் ஒன்றுமில்லா விட்டாலும், வேண்டுமென்றே தழைய தழைய சாரிய கட்டிகிட்டு, 1/2 மீட்டர் துணியில்......அதுக்கு கதவு வச்ச ஜாகிட்வேற, அவன் முன் குறுக்கும் நெடுக்கும் நடந்து அவன் உயிரை வாங்குவது எனக்கு ஒரு சாகச செயல். எல்லாம் வயசு கோளாறுதான். முகம் சுளிக்காதீங்க, உண்மையை உண்மையாகதான் சொல்லுறேன்.
தீடிரென்று முதலாளியின் தோழர் ரகு, "மேடம் எனக்கு ஒரு உதவி வேண்டும் கேட்கலாமா ? என்றார்,
நானும் யோசிக்காமலே, "ம்ம்ம் சொல்லுங்க சார் " என்றேன்.
"உங்களுக்கு யாராவது ரத்தானம் செய்யறவங்களைத் தெரியுமா?
"ஏன்"
"இல்ல, எனக்கு ஒரே தாய்மாமா அவருக்கு பய்பாஸ் ஆப்ரேசனாம்; பல வருசமா எங்களுக்குள்ள பேச்சு வார்த்தையில்லை, இன்னிக்கி காலையில என்னோட போனுக்கு கூப்பிட்டாங்க, சில ரத்தானர்கள் வேணுமாம். இது வரை 2 பேர்தான் இருக்காங்களாம். 5 பேர் முக்கியமாம், ரெண்டு பேரு ரிசர்வ்லே இருப்பாங்களாம். யாரையாவது தெரிந்தால் சொல்லுங்களேன், பணம் கேட்டாலும் கொடுக்கத் தயார்"
"ரத்தம் ரத்த வங்கியில் கிடைக்குமே"
"கிடைக்கும் ஆனால் இது இது தனியார் மருத்துவமனை, மற்றும் பாய்பாஸ், வைப்பு ரத்தம் நல்லதில்லையாம் . அதனால்
உடனுக்குடன் ரத்தம் கொடுப்பதுதான் சிறப்பாம் ".
"என்ன குருப் "
"(xY) "
"அட நானும் அந்த குருப்தான், எற்கனவே வங்கிக்கு பல முறை ரத்ததானம் பண்ணியிருக்கேன் , அதனால் என்னால் ரத்தம் தர முடியும்; ஆனால் தானம் கொடுத்து 80-85 நாட்கள்தான் ஆகுது; குறைஞ்சது 90 நாட்கள் இருக்க வேண்டுமே? " என்றேன்.
"அடுத்த வாரம்தானே, பிரச்சனை இல்லை" என்றார்.
உடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நாளை என் ரத்ததை பரிசோதிக்க அப்பயின்மெண்ட் வாங்கிக்கொண்டார். என்னைக் கேட்காமலே, நாளை 10 மணிக்குப் போக வேண்டுமாம். எனக்கோ டிகிரி ஆண்டு இறுதி பரீட்சைநேரம். கிளாசில் ஆட்டம் போட்டு பாஸ் பண்ணும் மாணவி. 'அடடா மாட்டிகிட்டேனே' என்று யோசித்து அரை மனதுடன் 'சரி' என்றேன். வங்காளியின் பிஎம்டபல்யூ கார் கடந்து செல்லவே, ரூபிணியக்கா ஜாடை காட்டினாள், கண்ணடித்தாள். நான் பஜனை பாடச் சென்று பாடினேன். சிங்கு(!?)
காலை 9 மணிக்கு கிழே கடையில் வந்து அமர்ந்தேன், ரத்தம் பரிசோதிக்கும் முன் உணவு உண்ணக்கூடாது, அதனால் ஒன்றும் சாப்பிடவில்லை. டாக்சி வந்தது. மருத்துவமனைக்குச் சென்றேன். வாசலில் ரகு காத்துக்கொண்டிருந்தார். பரிசோதனை முடிந்ததும், மருத்துவமனையின் தொலைப் பேசி எண்ணை எனது அலைபேசியில் சேமித்துக்கொண்டேன். வாசலில் ஒரு அழகிய பென்ஸு கார், சைவ பிரியாணி கட்டி கொடுத்து விட்டு ஜம்மென்று வீட்டில் விட்டு விட்டு சென்றார்கள். இரவு மருத்துமனையிலிருந்து தகவல் வந்தது. உங்களுடைய ரத்தம் பொருத்தமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கான தேதியும் நேரமும் சொல்லிவிட்டு வைத்தார்கள்.
ஒரு காலை நேரம், வகுப்பறையில் பாடம் நடந்துக்கொண்டிருந்தது, தொலைப்பேசி சிணுங்க, வாத்தியார் முறைத்தார். எடுத்தால் மருத்துவமனையின் எண் கண்ணடித்தது, கட் பண்ண முடியாதே; பேசினேன். "நாளை நீங்கள் ரத்தாணம் செய்ய வரவேண்டும். ஒரு முக்கிய விசயம் நீங்கள்தான் முதல் ஆள், முக்கியமான நபர், சரியான நேரத்திற்க்குள் வந்து விடுங்கள்." என்றனர். பேசி முடிக்கும் முன்பே, ஆசிரியர் என்னை 'கெட் லோஸ்ட்' என்று கூவி வெளியில் தள்ளி கதவடைத்தார். பின் வழியில் நுழைந்து வகுப்பில் நல்ல பிள்ளையாய் அமர்ந்துகொண்டேன். நான் ஆசிரியரின் செல்லம்; அதனால் முறைத்து விட்டு, விட்டு விட்டார். ஆனால் நான் வாயாடி என்று டீனுக்கு என்னைப் பிடிக்காது, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை ரொம்பவே பிடிக்கும்.
அடுத்தநாள், குளித்து சாமி கும்பிட்டு கீழே இறங்கினேன், இந்த முறை வீட்டின் முன் பீஜோட் கார் காத்திருந்தது. நேரே மருத்துவமனையடைந்து ரத்தானம் முடிந்து வெளியில் வந்தேன், திடீரென்று யாரோ முதுகில் மெல்ல தட்டினார்கள். ஒரு அம்மா அழுத முகத்துடன், என்னை கட்டிப்பிடித்து "நன்றி" என்றார், கையில் ஏதோ கொடுத்தார். பணம். நான் வாங்கவில்லை
(ஓவியாவை விலைக்கொடுத்து வாங்க முடியுமா என்ன!!) வேண்டாம் என்றுக்கூறி மெல்ல சிரித்து வீட்டு நகர்ந்தேன். யாருக்கு ஆப்ரேசன் என்று துளியும் கண்டுகொள்ளவில்லை. வேகமாக நடந்து கடந்துப்போனேன்.
பின் ரகு சொன்னார். அந்த அம்மாவின் கணவருக்குதான் ஆப்ரேஷனாம். வீட்டிற்க்குச் சென்று நன்கு உண்டு உறங்கினேன். எத்தனையோ முறை ரத்ததானம் செய்தாகி விட்டதால், இந்த விசயத்தை மறந்தும் போனேன்.
சில மாதங்கள் சென்று, ஒரு கடிதம் வந்தது, பிரித்தேன், ஒரு நன்றி அட்டை,
அன்பு
ஓவியாவிற்க்கு
'உங்களுடைய விலைமதிக்க முடியாத ரத்தத்தைக் கொடுத்து எனக்கு மறு வாழ்வளித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி'
இப்படிக்கு
பி.ஸ் மணியம்'
என்று எழுதியிருந்தது. பக்கத்தில் கைத்தொலைப்பேசி எண்ணும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. உடனே அழைத்தேன், எண் போக வில்லை. அட்டையை எங்கோ புத்தக அலமாரியில் போட்டு வைத்தேன், பின் மறந்தும் போனேன்.
ஒரு வருடம் கழித்து தற்செயலாக அட்டை கண்ணில் பட்டது, மீண்டும் தொலைப்பேசியில் அழைத்தேன், மறுமுனையில் "அலோ ஹூயிஸ் ஸ்பீக்கீங்க்" என்று ஒரு கம்பீரக்குரல், வணக்கம் என்றேன்.
அவரும் "வணக்கம் " என்றார்,
"நான் ஓவியா பேசுகிறேன், உங்கள் நன்றி அட்டைக்கு நன்றி. நீங்கள் நலமா " என்றேன்.
ஆச்சரியத்துடன், " ஓவியாவா. எனக்கு ரத்தம் கொடுத்த பெண்ணா" என்றார், நல்ல ஞாபக சக்தி அவருக்கு.., "சுகமா ஓவியா " என்றார்.
" நான் நலம் நீங்கள் சுகமா " என்றேன்.
சிரித்துகொண்டே, " உங்கள் ரத்தம் என் உடலில் ஓடுகிறதே அதனால் நானும் சுகம், மிகவும் தெம்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறேன் " என்றார்.
ரொம்ப உற்சாகமாக கலகலப்பாக பேசினார். மருத்துவமனையில் என் முகவரி வாங்கினாராம், பர்சனல் விசயமானதால், முதலில் அவர்கள் தர மறுத்து விட்டனராம். ரகுவும் வெளிநாடு சென்று விட்டாராம். அதனால் மிகவும் சிரமப்பட்டு, குடும்ப வக்கீல் வைத்து பேசி வாங்கினாராம், சில சமயம் அழைப்பார், அம்மா என்று கூப்பிடுவார். கனிவாகப் பேசுவார்.
பின் அவரை சந்திப்பதாக ஒரு நாள் முடிவு செய்து காத்திருந்தேன். சுமார் 68 வயதிலும் சிவந்த முகமும் நல்ல உடற்கட்டும் கும்முனு, சம்மி கபூர் போல அழகாக இருந்தார். முக்கியமாக ஒரு பெண்ணை காணப் போகிறோம் என்று ரொம்ப ஸ்மார்ட்டாக உடையணிந்து வந்திருந்தார், புன்னகையுடன் கையில் ஒரு பெரிய ரோஜாப்பூ கொத்துடன் தோன்றினார்.
"ஹாய் ஓவியம்மா " என்றார்.
"அங்கிள் நீங்க ரொம்ப ஹெண்ட்சம் அண்ட் ஸ்மார்ட்", என்றேன். அதுதான் நான் முதலில் அவரிடம் சொன்ன வார்த்தை, அதன் பின்தான் "கிலேட் டு மீட் யு" என்று சொன்னேன், ஆமாம் சாதாரண மனிதர்களுக்கு முதலில் இளமையும் புற அழகும் தானே தெரியும். அப்படியென்றால் அப்பொழுது நானும் ஒரு சாதாரணப் பெண்தானே?
முதல் வார்த்தையிலேயே "என் தாயே, எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா நீ , என் தெய்வம் நீ " என்றார்.
ஏனோ கண் கலங்கினார். எனக்குள் ஒரே குஷி, ஒரு வித மகிழ்ச்சி பொங்கியது. ஒருவேளே அம்மா என்றதினால் ஒரு சிறு துளியளவில் தாய்மையை உணர்ந்தேனோ?! தெரியவில்லை. பின்னர் அருமையான இரவு உணவு முடிந்து, செல்லமாக நெற்றியில் ஒரு முத்தமிட்டு பாய் மம்மி என்றும் கிண்டலடித்தும் சென்றார். முக்கியமாக வாயார வாழ்த்தி ஆசியும் வழங்கி சென்றார் பெரியவர்.
சில வாரங்கள் கழித்து, அவரின் இல்லத்தில் எனக்கு அசத்தலான இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். வேலைக்காரி அருமையாக சமைத்திருந்தார். அவரின் மனைவியும் மகளும் மிகவும் அன்பானவர்கள். மிகவும் வயது போன காலத்தில் (மருமணம்) புரிந்தார்களாம், அதனால் அவர்களுக்கு குழந்தையில்லையாம் ; சில வருடங்களுக்கு முன் தன் வீட்டு வேலைக்காரியின் மகளை தத்தெடுத்துக் கொண்டார்களாம், அவள் பெயர் பிருந்தா, ஏழ்மையினால் அவள் ஆரம்பக்கல்வி கற்கவில்லையாம், அதனால் அவளை கராத்தே கற்க்க வைத்து இன்று ஒரு கராத்தே ஆசிரியையாக்கியுள்ளார்கள். பிருந்தாவிற்க்கு 22 வயது ஆனால் நல்ல சுட்டி. அவள் என்னைவிட 2 வயது சின்னவள். அன்றே என்னுடன் நெருக்கமாகிவிட்டாள். மிகவும் நல்லப்பெண். கள்ளமற்ற அப்பாவிப்பெண். ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழ்வுதந்த பெருமை இவர்களைச்சாரும்,
பிருந்தா என்னைக் கட்டியணைத்து "யூ சேவ் மை டாடி" என்று கண்ணீருடன் சொன்னாள். பிருந்தா இன்று பல லட்சங்களுக்கு அதிபதி. ஆண்ட்டியோ "யூ சேவ் மை லைஃப்" என்றார். (அங்கிள்தான் அவர்களின் சந்தோஷமாம்) அன்பான குடும்பம். பிருந்தா அவர் மேல் உயிராக இருந்தாள். டாடி மம்மி என்று கொஞ்சி குலவினாள். அவர்களும் பாச மழை பொழிந்தார்கள். இதைக்கண்டு, தாய் தந்தையற்ற எனக்குள், எங்கோ நான் அழும் குரல் கேட்டது. இருப்பினும் நான் காட்டிகொள்ளவில்லை. சில வினாடிகள் ஊமையானேன். நானும் பெண்தானே? பெற்றோரின் பாசத்திற்க்கு ஏங்கும் சராசரி குழந்தைதானே?!
மாலைப்பொழுதில் அங்கிள் ஆர்கன் வாசித்து என்னை சந்தோஷப்படுத்தினார். அவருடைய தோட்டத்தில் அமர்ந்து நன்றாக கதையளந்தேன். பாடினேன். ஆண்ட்டியும் நன்றாக பாடினார். கச்சேரிதான். அவ்வபோது மாம்பழ ஜூசில் மிதந்தேன். நாங்கள் நால்வரும் சந்தோஷமாக பொழுதைக் களித்தோம்.
ஒரு நாள் தங்கி உறவாடி விடைபெற்றேன், விடைபெருமுன் ஆண்ட்டியே ஒரு காட்டன் புடவையும் தங்க சங்கிலியும் கொடுத்தார்கள். புடவையை மட்டும் பெற்றுகொண்டேன். தங்கச்சங்கிலியை தொடவுமில்லை. முற்றிலும் மறுத்து விட்டேன். எவ்வளோ கெஞ்சியும் கொஞ்சியும் ''ம்ம் ம்ம் அது வேண்டாம்'' என்று ஒதுக்கி விட்டேன். அது வேண்டவே வேண்டாம். எதையுமே எதிர்பார்த்து நான் ஒன்றும் செய்யவில்லையே!
லண்டன் வரும் முன் அவர்களைக் கண்டேன். மீண்டும் ஒருநாள் விருந்து உண்டு லூட்டியடித்தேன். இன்றும் எனக்கு வாழ்த்து அனுப்பி என் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதர் அவர்,
என் பிறந்தநாளை மறவாமல் நினைத்து வாழ்த்துபவர். இன்றும் அவர்கள் சந்தோஷமாக வாழுகின்றனர், என்றும் வாழ்வார்கள். அவர்களுக்காக என் பிராத்தனை எப்பொழுதும் உண்டு.
அங்கிளோ என்னை அம்மா என்று அழைத்தார், ஆண்ட்டியோ மகளே என்று அழைத்தார்கள். இது என்ன உறவோ!? ஒரு குடும்பத்தினுடைய தலைவரை, பலர் நேசிக்கும் நல்லவரை, ஒரு குழந்தையின் அப்பாவை, ஒரு நல்ல மனைவியின் கணவரை, அவரின் விலை மதிப்பற்ற உயிரைக் காக்க எனக்கு வாய்பளித்த, கடவுளுக்கும் தோழர் ரகுவுக்கும் இத்தருணத்தில் எனது கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
நன்றி.
அன்புடன்
ஓவியா.
Bookmarks