சிட்டி செண்டரில் ஓவியன்.........!.
இன்று வியாழக் கிழமை அலுவலகத்தில் கொஞ்ச நாளாகவே அதிகரித்திருந்த அலுவலகப் பணிகளிடை இரண்டு நாளாவது சந்தோசமாக நித்திரை கொள்ளலாமே என்ற நம்பிக்கையுடன் எனது தங்ககத்தை நாடி வந்து கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் கேட்டார் டேய் இண்டைக்கு சிட்டி செண்டருக்குப் போவமே எண்டு.........?
துபாயிலுள்ள உறவுகளுக்கு துபாயின் தெஹிரா மற்றும் சார்ஜா சிட்டி செண்டர்களைத் தெரியாமல் இருந்திருக்காது அவ்வாறான ஒரு கடைத்தொகுதி இங்கு ஓமானிலும் உண்டு. இருந்தாலும் எங்கள் தங்ககத்திலிருந்து வெகுதொலைவிலே இருந்தமையால் நாம் இது வரை அங்கே விஜயம் செய்யவில்லை. எல்லோரும் நாளைக்குப் போவோம், நாளை மறுநாள் போவோமென நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். இன்று என்னவோ தலை போனாலும் பரவாயில்லை போயே ஆவதென முடிவெடுத்துவிட்டோம்.
உடனே வீட்டிலிருந்து நண்பர்கள் ஐவர் புறப்பட்டு ஒரு மினி வேனை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு (நம்மிடம் தானே சொந்த வாகனங்கள் இல்லையே...! ). சிட்டிசெண்டரை அடைந்தே விட்டோம். போய் அங்கு இறங்கியதும் இது தானா சிட்டி செண்டர் என்று சந்தேகமாக இருந்தது. அங்கே மும்மூரமாக ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. பிறகு ஒருவாறாக சிட்டி செண்டர் விஸ்தீரிக்கப் படுவதாகவும், மற்றைய பக்கத்தில் பழைய சிட்டி செண்டர் பகுதிக்கு போகலாம் என்று அறிந்து அங்கே ஒரு வாறாக நுளைந்தும் விட்டோம்.
நானும் ஆதவனைப் போலவே மிக நல்ல பையன் என்பதால் என் கண்கள் அங்கே கடைகளில் வியாபாரத்துக்காகவே அழகழகாக அடிக்கி வைத்திருந்த பொருட்களைத் தவிர வியாபாரத்திற்காக நின்றவர்களையோ இல்லை அங்கே வந்து அன்ன நடை பயிலும் அழகிகளையோ பார்க்கவேயில்லை. (அட நம்புறாங்க இல்லையே.....! ). துபாயில் இருந்து ஓமானுக்கு வந்த பின்னர் கிட்டத் தட்ட துபாயில் இருப்பது போன்ற(அட எல்லா விடயத்திலும் தாங்க...! ) ஒரு கடைத்தொகுதியைப் பார்த்த திருப்தி மனமெங்கும்.......
ஒரு வாறாக சுற்றிப் பார்த்தலை முடித்த பின்னர் நம் நண்பர்கள் மொத்தமாக வாங்கியது இரண்டு டீசேர்ட்டுகளும் ஒரு ஜீன்ஷூமுமே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நேரத்தைப் பார்த்தால் இரவு ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. பசி வேற வயிற்றைக் கிள்ளவே எங்காவது சாப்பிடலாமா என்று பார்த்தோம், அப்போது சிட்டிசெண்டரின் துரித உணவுக் கடைகள் கண்ணில் படவே அங்கே சென்றோம். அங்கே பல்வேறு துரித உணவுக் கடைகள் ஒரே இடத்தில் அணிவகுத்திருக்க, சாப்பிடுவோமென முடிவெடுத்தோம்.(வீட்டிலே நாங்களாகவே சமைத்துச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்து, இன்றாவது நல்லதாகச் சாப்பிடுவோமே என்ற நப்பாசை வேற...... ). ஆனால் அந்தோ பரிதாபம் வியாழக் கிழமை என்பதாலோ என்னவோ உணவுகளை வாங்கி வந்து இருந்து சாப்பிடும் அந்தப் பகுதியில் ஒரு மேசையாவது வெறுமையாக இருக்கவில்லை. முதலில் ஒரு மேசையை பிடித்து இருந்து கொண்டு பின்னர் உணவுகளை வாங்குவோமெனத் திட்டம் வேறு.
அதன் படி ஒரு மேசை இருப்பதை அதி புத்திசாலியான அடியேன் கண்டு பிடித்து மற்றவர்களுக்குச் சொல்ல, எல்லோரும் அங்கு சென்று அந்த மேசையைக் கையகப் படுத்திக் கொண்டு இருவரை அவ்விடத்திலே இருக்க வைத்துவிட்டுத் தேடித் தேடி ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த உணவு வகைகளைத் தேடி வாங்கினோம். வியாழக் கிழமைகளில் அடியேன் மாமிசம் உண்ணுவதில்லையென்பதனால் எங்கே தேடி சைவ உணவு வாங்கி வந்தேன். நான் நாம் கையகப் படுத்திய மேசையின் அருகே வந்தபோது நண்பர்கள் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து சாப்பிட ஆரம்பித்தேன் ஆனால் சாப்பாட்டில் மனம் போக பக்கத்து மேசைகளிலிருந்த இருந்த பிரமன் செய்த பிழைகள் அனுமதிக்கவில்லை(சாப்பிடவே இல்லைங்க......). அப்போது நண்பன் ஒருத்தன் சொன்னான் டேய் இது நல்லா இருக்கில்லே, அடிக்கடி வருவோமென்று.......!
அப்போது என் முதுகை யாரோ தட்டிய மாதிரி ஒரு உணர்வு........
இங்கே யார் என்னைத் தட்டப் போகிறார்களென பக்கத்து மேசைக்கு மீண்டும் கண்ணை அலை பாய விட மீண்டும் தட்டல்.........!
இதென்னடா வம்பா இருக்கு என்று திரும்பிப் பார்த்தேன், காவலாளிக்குரிய சீருடையுடன் ஒருவர் சிரித்துக் கொண்டு நின்றார், நானும் சிரித்தேன். அப்போது அவர் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்.
வந்தவர் : ஹாய் எப்படி இருக்கீங்க
நான் : ஓ நல்லா இருக்கம், நீங்கள்?
வந்தவர் : நான் நலம், இங்கே உங்களுக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா?
நான் : அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று மனதில் நினைத்துக் கொண்டு, ஆம் எல்லாம் நன்றாகவே உள்ளது நன்றிங்க என்றேன்.
வந்தவர் : ஓ நல்லது அப்படியே கொஞ்சம் மேலே பார்க்கலாமே? என்றார்.!
நிமிர்ந்து பார்த்த நான் அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து போனேன், இது குடும்பத்துடன் வருவோருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டிருக்கும் பகுதி என்ற வாசகத்தைப் பார்த்து.........!. பாத்தீங்களா தயவு செய்து இந்த இடத்தைவிட்டு எழுந்து வேறு இடம் சென்றால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என்று அவர் சொல்ல, நானும் இன்னொரு நண்பனும் எழுந்து சென்று வேறு எங்கேயாவது வெறுமையான இருக்கைகள் இருக்கிறதா என்று தேடினோம். எங்கள் கெட்ட காலத்தின் பயன் எங்களுக்கு அதிஸ்டமளிக்காமற் போக, நாம் அங்கேயே விட்டு வந்த மற்ற மூன்று நண்பர்களிடம் இன்னொரு காவலாளி போய் முன்பு பேசியவரிலும் கடுமையாகப் பேச அவர்கள் சாப்பிட்ட குறையுடன் வேறு இடமும் கிடைக்காமல் வாங்கிய உணவுகளை ஒரு ஏக்க பெருமூச்சுடன் பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்தனர். வேறு என்ன செய்வது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கத்துடன் மீள ஒரு வாகனத்தைப் பிடித்து வீடு வந்தோம். பசியோ வயிற்றைக் கிள்ள சமைத்துச் சாப்பிட மனதிலும் உடலிலும் வலுவில்லாததால் எப்பதோ வாங்கி வைத்த நூடில்சை சுடுதண்ணீரில் போட்டுச் சாப்பிட்டு விட்டு இங்கே மன்றத்தில் வந்து பதிப்புக்களைப் பதித்துக் கொண்டிருக்கிறேன், என் முதல் முறை சிட்டி செண்டர் நோக்கிய பயணம் இப்படியா முடிய வேண்டுமென்ற அங்கலாய்ப்புடன்..........!
பி.கு - இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
அது தான் வெகுவிரைவில் குடும்பஸ்தனாக ஆவதென்று.......................................!
Bookmarks