கடற்கரையில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தான் செல்வம். முன்னிரவு நேரம்அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் தென்பட்டுக்கொண்டிருந்தன.
"வந்து ரொம்ப நேரமாச்சா..?"
பின்னாலிருந்து குரல் கேட்க,மெல்ல திரும்பினான். பதிலளிப்பது அவசியமில்லை வந்த காரியத்தைப் பார்ப்போம் என்பதைப்போல் வந்தவனின் முகம் நோக்கினான்.
'மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துவிட்டது. போட்டுவிடு! ஆனால் நீதான் போடப்போகிறாய் என்பது காரியம் முடியும்வரை யாருக்கும் தெரிய வேண்டாம்.உனக்கு சேரவேண்டியது வேலை முடிந்ததும் உன்னிடம் வந்து சேரும். விஷயத்தை முடித்துவிட்டு கொஞ்ச நாளைக்கு எங்காவது தலைமறைவாகிவிடு. எல்லாம் அடங்கிய பிறகு வந்தால் போதும். நாங்கள் எல்லா உதவிகளும் செய்கிறோம்!' சொல்லிவிட்டு அந்த காரியத்திற்காக முன்பணத்தையும் செல்வத்திடம் கொடுத்தான்.
'அவன் நடமாட்டங்களை கவனிக்க வேண்டும்,ஒரு வாரம் அவகாசம் கொடு சிக்காமலா போய்விடுவான்'
செல்வம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறவனாய் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.
மூன்று நாட்களாக அவனை பின் தொடர்ந்ததில் செல்வத்துக்கு அவனை அவ்வளவு சீக்கிரம் அனுகமுடியாது என்று தோன்றியது. அவனை மடக்குவது சற்று சிரமம் போல்தான் தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டம் செல்வம் பக்கம் இருந்தது. நான்காவது நாள் ஒரே ஒரு உதவியாளனுடன் அந்த ஆள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கேளிக்கை விடுதிக்கு வந்திருந்தான்.ரகசிய விருந்து போலிருக்கிறது. தன் புதிய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கியவன் பின்னாலேயே இரண்டு பெண்களும் இறங்கினார்கள். மெலிதான முகப்பு பலகையின் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்களை இவனால் அடையாளம் கான முடிந்தது.மேல்தட்டுமக்களின் விருந்துகளில் அவர்களுக்கு விருந்தாகும் விலைமாதர்கள்.
நிறுத்தியிருந்த கார்களுக்கு பின்னால் நின்றிருந்த செல்வம் கறுப்பு நிறத்திலிருந்த அந்த சக்திவாய்ந்த வஸ்துவை கையில்எடுத்துக்கொண்டு மெல்ல அவர்களை அனுகினான். தூரத்திலிருந்தே காரியத்தை முடிக்கும் அந்த பொருளை உயர்த்தினான். வாகான தொலைவில், இரண்டு பெண்களையும் இறுக கட்டிப்பிடித்தபடி இருந்த அந்த ஆசாமியின் போதைக் கண்கள் உட்பட அத்தனையும் இவனுக்கு தெளிவாக தெரிந்தது. சரியான சந்தர்ப்பம். சத்தமில்லாமல் அந்த காரியத்தை செய்து முடித்தான்.
அடுத்தநாள் தமிழ்நாட்டின் பரபரப்பான அந்த புலனாய்வு தினசரியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் அந்த செய்தி புகைப்படத்துடன் பிரசுரம் ஆகியிருந்தது.
" அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர் கனகரத்தினத்தின் காமக்களியாட்டம்!! தன்னை தாய்க்குலங்களின் தனித்தலைவனாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் கனகரத்தினத்தின் உண்மையான முகம் தமிழ்நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நமது நிருபர் தன் உயிரை பணயம் வைத்து எடுத்திருக்கும் இந்த புகைப்படங்களே அதற்கு சாட்சி. இனி அவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா..? கட்சிக்குள் குழப்பம்......."
தான் எடுத்த அந்த புகைப்படங்களையும் செய்தியையும் பார்த்துக்கொண்டிருந்த செல்வம் அதே கட்சிக்குள் கனகரத்தினத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் 'போட'ச்சொன்னபடி செய்தி போட்டதற்காக கிடைத்த பெரும்தொகையை எடுத்துக்கொண்டு,கூடவே அந்த கறுப்பு நிற சக்திவாய்ந்தகேமராவையும் பைக்குள் போட்டுக்கொண்டு, தலைமறைவுக்குத்தயாரானான்.
Bookmarks