மோட்டார் வண்டியில் காற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு வீதியில் பறந்தேன். நடைபயணி கடவையில் இருந்த விளக்கு சிவப்பைக் காட்டியதும் நான் வேகத்தைகுறைக்க பக்கத்தில் வந்த பேரூந்தால் முடியவில்லை. அம்மா என்ற அலறல். கூடியவர்கள் ஓட்டுநரை திட்ட ஓரமாக இருந்தார் ஒருவர். முச்சக்கர வண்டியில் வந்த ஒரேஒரு மனிதரின் உதவியுடன் மருத்துவசாலையில் செர்த்த பின்னரே அவரின் முகத்தை பார்த்தேன். என்னை பார்ப்பது போல இருந்தது. யார் இவர்? எனக்கும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை. பாக்கட்டில் காசுக்காகிதங்களே இருந்தன.
எனது வீட்டில் தகவல் சொன்னேன். அப்பாவே அவரை மருத்துவமனையில் வைத்து கவனித்தார். ஒருவாரம் கழித்து அவரை வீட்டுக்கு போகலாம் என்றார்கள். எங்கே போவது? அவர்தான் யாழ்ப்பாணப் பிரஜையாமே? நம் வீட்டுக்கே வந்தார். அப்பாவின் முகத்திலும் அம்மாவின் முகத்திலும் கவலை ரேகைகள். இன்னொருவருக்கு வலிக்கும்போது இவர்களுக்கும் வலிக்கிறதே? புனிதர்கள்தான் நினைத்த எனக்கு வலித்தது அவர்கள் பேசியபோது. "தம்பி இவர்தான் உன் அப்பா. கதிர்காமத்திற்கு வந்தபோது உன்னை தொலைத்து விட்டார்கள். நாங்கள் உன்னை எடுத்து வந்தோம். மருத்துவமனையில் பார்த்தபோது உன்னை மாதிரியே இருந்தார் விசாரித்ததில் தெரிந்து கொண்டோம்" நிறையச் சொன்னார்கள் இதுதான் ஆணி அடித்ததுப்போல் நிலைத்து நிற்கிறது.அப்புறம் என்ன? விமானத்தில் அனுப்பினார்கள் விரும்பினால் திரும்பி வா என்ற அன்பான நிபந்தனையுடன்.
நாற்பது பேரையும் அவர்களின் பொருட்சுமைகளுடன் மனச்சுமைகளையும் சுமந்துகொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்டது விமானம்.
எனக்குப் பக்கத்தில் என் முதுமை உருவம். என் அப்பாவாம். யாருக்கு யாரென ஆண்டவன் எப்போதோ எழுதிவைத்தாலும் சடங்குகளின் மூலம்தானே அவை நிச்சயிக்கப்படுகின்றன. அப்படிப்பார்க்கும்போது இவர்தான் எனது அப்பாவென்று இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் நிச்சயம் செய்தனர் இவர்கள்தான் என் பெற்றோர் என்று நான் நிச்சயம் செய்த இருவர். விபத்தில் அறிமுகமானவர் அப்பா என்ற பட்டத்துடன் இருக்க 20 வருடம் அப்பாவாக இருந்தவர் யாரோ ஆகிறார். ஐந்து வருட ஆட்சியாளருக்கும் அம்மா அப்பாவுக்கும் வித்தியாசமில்லாத ஒரு வாழ்க்கை. வேடிக்கை வாழ்க்கை.
45 நிமிடங்கள் வானத்தில் பறந்த அலுமினிய பறவை மடிமீது சுமந்த தாயை முத்தட்டது. "யாழ்ப்பாணத்தை அடைந்து விட்டோம்" வாழ்க்கை பயணத்தின் அறிமுகமான பயணி சொன்னார். மௌனத்தை பதிலாக்கிவிட்டு சப்பாத்து கால்கலால் பலமாக மண்ணை மிதித்தேன். என் கோபம் தெரியவேண்டாமா? அடுத்த 30 நிமிடத்தில் பலரின் அறிமுகத்திய அன்னையை காணப்போகின்றேன். பிள்ளைகளில்லாதோருக்கு இவ்வளவு காலம் பிள்ளையாக இருந்தவனுக்கு பெற்ற தாயை பார்க்க போகின்றேன் என்பது களிப்பை ஏற்படுத்துகிறதே? இதை என்ன வென்று சொல்வது?புரியவில்லை...புரியாமலேயே பழைய கோயிலை அடைந்தேன்....
சுமந்தவள் கண்களில் பிரகாசம். இருண்டிருந்தனவோ..இத்தனை நாட்கள். கண்ணை சுருக்கிப் பார்கிறாளே? புரிந்தது...இருட்டில்தான் வாழ்ந்திருகிறாள். கட்டி அணைத்துகொண்டாள் கூடவே நானும்...என் உயரத்தில் ஒருத்தியை காட்டி உன் தங்கை என்ற அந்த நொடியில் என் தனிமை விலகியது போல் இருந்தது. காட்சிப்பொருளாக நினைத்து ஊர் மக்கள் வந்து பார்த்தனர். . என் அண்ணா என்று அறிமுகபடுத்தும் குயிலிசை, விஷேட உணவுகளை சாப்பிடும்போது அண்ணாவுக்கு கொடுத்தாயா எனக்கேட்பதும் அதற்கு முன்னே எனக்கு தந்துவிட்ட அம்மாவின் தலை அசைப்பும்...இதுதான் சொர்க்கமோ என் நினைக்கவைத்தன..புதிய வகையான ஒரு பாச உலகம் இது. பத்து நாட்கள் அவ்வுலகத்தில் வாழ்ந்துவிட்டேன்.இந்த நாட்களில் வேளியே போகவே இல்லை. பதினோராம் நாள். இரவுக் காட்சிக்கு போக புறப்பட்டேன். கூட வந்த தங்கையை தடுத்து நிறுத்தினாள் அன்னை. ஏதேதோ சொல்லி தடுத்து விட்டாள். கனவானது அன்றைய சினிமா மட்டுமா?
வெளியே காத்தாட நடந்த என்னை தடுத்து நிறுத்தியது அப்பாவின் குரல். "ஏம்மா அவன் எவ்வளவு ஆசையாகக் கூப்பிட்டான். அவளும் சந்தோசமாக போனாளே. ஏன் தடுத்தாய்". காதுகள் தானாகவே கூர்மையாகின. "எனக்கு தெரியும் அவன் என்மகன்... ஊருக்கு தேவை அவன் என் மகன் என்பதற்கு ஆதாரம்.இருக்கா நம்மிடம்? இருவரும் தனியாக படத்திற்குப் போவதை தப்பாக பேச சிலர் இருப்பார்கள். அவர்களால் அவள் வாழ்க்கை பாதிக்கபடாதா? அவளுக்கும் நான் அம்மாங்க" அவள் சொன்னதும் எனக்கு ஏதோ புரிந்தது. அம்மாவுக்கு அவள் மகள் மட்டுமல்ல எனக்கு தங்கையும்தானே...இதோ இப்போது கொழும்பை நோக்கிச் செல்லும் விமானத்தில் நான். பக்கத்தில் இப்போ வேறொருவர்.
நண்பர்களே..இது எனது ஐந்தாயிரமாவது பதிப்பு. ஏதோ தோன்றியதை எழுதி உங்கள் பார்வைக்கு வைத்து விட்டு தலைகுனிந்து நிற்கின்றேன். குட்டுபவர்கள் குட்டுங்கள். தட்டுபவர்கள் தட்டுங்கள். இரண்டுமே ஆசிர்வாதமே...
Bookmarks