போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் * ரயில்வே - அஞ்சல் துறை ஒப்பந்தம்
இனி அஞ்சலகங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அமைச்சகங்களுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.
ரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடும் கூட்டத்தை குறைப்பதற்காகவும், பயணிகளின் வசதி கருதியும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரயில் டிக்கெட் முன் பதிவு வசதியை, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜா முன்னிலையில் நேற்று டில்லியில் கையெழுத்தானது. இதையடுத்து, இம்மாதம் 15ம் தேதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை பெற முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டு அமைச்சகங்களும் பகிர்ந்து கொள்ளும். முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 30 முக்கிய அஞ்சலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலமாக முன்பதிவு டிக்கெட்டுகளை பெற, ரூ. 15லிருந்து ரூ. 30 வரை சேவைக் கட்டணம் பெறப்படும். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் இருக்கை டிக்கெட்டுக்கு ரூ. 15ம், ஏசி 3 டயர் மற்றும் 'சேர் கார்' டிக்கெட்டுக்கு ரூ. 20ம், ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். பயணிகளின் வீட்டுக்கே சென்று டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவானது. அஞ்சலகங்களின் வளர்ச்சிக்கும், அவற்றுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் பணியாளர்களை நியமிப்பதற்காகவும் தான் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் கம்ப்யூட்டர் மூலமான பயணி முன்பதிவு முறை (பி.ஆர்.எஸ்.,) கவுன்டர்கள் மூலமாக அஞ்சல் துறை ரயில்வே டிக்கெட்டுகளை வழங்கும். இவை, 'இந்திய அஞ்சல் பி.ஆர்.எஸ்., மையங்கள்' என்ற பெயரில் செயல்படும். முதல் கட்டமாக நாடு முழுவதும் 30 அஞ்சலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஐகோர்ட் அஞ்சலகம், ஸ்ரீபெரும்புதூர் அஞ்சலகம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கு தேவையான 'ஹார்டுவேர்' மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ரயில்வே அமைச்சகம் வழங்கும். இட வசதி, பணியாளர்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை அஞ்சல் துறை கவனித்துக் கொள்ளும். எதிர்காலத்தில், இ-டிக்கெட்டுகளை வழங்கும் வசதியும் சில அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:நாட்டில் அனைத்து இடங்களிலும் அஞ்சலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது வசதியாக இருக்கும். குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்கள் இல்லாத இடங்களில் கூட அஞ்சலகங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். அஞ்சலகங்களை ரயில்வே துறை பயன்படுத்துவது போல நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அஞ்சல்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறையின் சேவையை அஞ்சல் துறையும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நண்பன் என்ற சமூக பொறுப்பை அஞ்சல் துறை நிறைவேற்றியுள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.
நன்றி தினமலர்
Bookmarks