என்னுடைய பெங்களூர் அலுவலகத்திற்க்கு என்னுடைய பழைய அமெரிக்க மேலாளர் சென்ற வருடம் விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் எங்களுக்கெல்லாம் உரையாற்றும் வாய்ப்பு வந்த போது, அதை தொடங்குவதற்க்கு முன் அவர் முதலில் அமர்ந்திருந்த ஊழியரை அழைத்தார். சுமார் அறுபது பேர் கூடியிருந்த கூட்டம் அது. முதலில் இருந்தவரைத் தனியே அழைத்து கிசுகிசு என்று ஏதோ சொன்னார். பின்னர் எங்களிடம் -இந்த அறையின் மூலையில் இருவர் மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பர், அதைக் கண்டு கொள்ளாதீர்கள்- என்று கூறித் தனது பேச்சு உரையை ஆரம்பித்தார். முதலில் சென்றவர் இரண்டாமவரை அழைத்து தனியே சென்று ஏதோ சொன்னார். அடுத்து இரண்டாமவர் மூன்றாமவரை அழைத்து கிசுகிசுத்தார். இப்படியே தொடர்ந்து செயின்போல் 60 பேரும் கிசுகிசுத்து முடித்தனர். எனது முறை வந்த போது தான் எனக்குப் புரிந்தது என்னவென்று. என்னிடம் எனக்கு முந்தையவர் ஒரு ஆங்கில வாக்கியம் கூறினார். நான் அதை அப்படியே எனக்கு அடுத்தவரிடம் கூற வேண்டும். இதை தனியாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கூற வேண்டும், அவ்வளவுதான். 60 பேரும் செயினாக சொல்லி முடித்த விட்ட அந்த நேரத்தில் அவரும் தன் பேச்சு உரையை எங்களுக்கு அளித்து முடித்திருந்தார்.
இப்போது அவர் எங்களிடம் கூறினார். இங்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். அதாவது அவர் ஒரு ஆங்கில வாக்கியத்தை முதலில் ஒருவரிடம் கூறி.. அது ஒருவர் வழியாக மற்றொருவரிடம் சென்ற பின் எப்படி இருக்கிறது என்பது தான் இந்த பரீட்சை. அவர் முதலாமவரிடம் கூறியது-
If I am in a meeting, and if I am waiting for some specific call, I should attend only that call and reject all the other calls.
60வது ஆள் எங்கள் மேலாளரிடம் கூறிய வாக்கியம் -
Don' make phone calls when you are in meeting.
வெறும் அரை மணி நேரத்தில் ஒருவர் கூறிய விசயம் மற்றொருவருக்குச் செல்லும் போது எப்படி சிதைகிறது என்பதை எடுத்துக்காட்டவே அவர் இதை சுவையாக செய்தார். அதுவும் அமெரிக்கர்கள் இந்தியர்களிடம் உரையாடும் போதும் செய்தி பரிமாற்றம் செய்யும் போதும் எப்படியெல்லாம் சிதைவுகளும் பிரச்சனைகளும் வரலாம் என்பதை மேலும் எடுத்துரைத்தார்.
Bookmarks