காதல் எல்லாம் கனவுதான் என்றவனை
உன் அடாவடி சிரிப்பால் அசைத்துவிட்டு
உன் விடாப்பிடி அழகால் உசிப்பிவிட்டு
இதயத்தில் இடிமழை பொழிந்து எழுப்பிவிட்டவள் நீ!
தூறலுக்கே தும்முபவன் நான்!
தென்றலுக்கே தேம்புபவன் நான்!
சூறாவளி சுற்றும் சுறா விழி கொண்டு என்னை
சுற்றி வளைத்தால் என்ன செய்வேன்?
என்னை கண்டிக்க இடிமழையும்
என்னை தண்டிக்க மௌன மழையும்
என்னை வசந்தப்படுத்த வானவில் மழையும்
என்னை உன் வசப்படுத்த சந்தோஷ சாரல் மழையும்
இப்படி அடை பொழியும் மேகமாக நீயானதால்
உன்னால் நனையும் நதியாக நான் ஆனேனோ?
உன் ஈரப்பசை முத்தத்துக்கும்
உன் கொலுசொலி சத்தத்துக்கும்
உன் கலப்படமற்ற காதல் சுத்ததிற்கும்
உன்னால் என்னுள் மூளும் யுத்ததிற்கும்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
நித்தம் ஊறும் புத்தம் புது ரத்தத்திற்கும் - காரணம் நீ என்பதால்
என் காயமெல்லாம் காதல் காயமாக ஆனதோ?
குறைகளின் மாற்று உருவமாக நான் இருந்தாலும்
என் நிறைகளாலேயே அந்த குறைகளை நிரப்பி...
பட்ட கிளை கொண்டதால் மட்ட மரமாய் என்னை எல்லோரும் பார்க்க
என் பிற கிளைகளில் பூத்த பூக்களோடு என்னை
மற்ற மரங்களிலிருந்து ஒரு மாறுபட்டதாய் பார்த்தவள் நீ என்பதால்
உன் கிட்டபார்வை பட்டதால், என் பட்ட கிளை கூட பச்சையானதோ?
என்னை பாதித்த பெண்களை எல்லாம் நான் காதலிக்க நினைத்ததில்லை!
உன்னை காதலிக்கும் முன்வரை நான் சாதித்ததாய் நினைத்ததில்லை!
உன்னை காதலிக்கும் பெருமை எனக்கே!
என்னை உன்னுள் மூழ்கடிக்கும் உரிமை உனக்கே!
உன் கரம் பற்றும் பெருமை எனக்கே!
என் கரம் பற்றும் உரிமை உனக்கே!
Bookmarks