அவர்களும் நானும்..
அவர்களுக்கும்
எனக்கும் நிறைய
ஒற்றுமைகள் உண்டு..
சில வேறுபாடுகளும்...
அவர்கள்
தோன்றிய போது
வால் நட்சத்திரம் தெரிந்தது..
எனக்கு எதுவும் தெரியவில்லை..
அவர்களுக்கு
தேவ தூதர்கள் சொன்னார்கள்..
அல்லது
அசிரீரி கேட்டது..
எனக்கு
எங்களூர் ஜோஸியன் சொன்னான்..
அவர்களில் ஒருவர்
மாடு மேய்த்துக் கொண்டே
கோபியர்களோடு ஆடித் திரிந்தார்
இன்னொருவர் தொழுவத்தில்..
நான் ஒரு பத்தி வீட்டில்..
ஒருவர் கோகுலம் முழுதும்
மற்றொருவர் இஸ்ரேல் முழுதும்..
நான்
என் தமிழ் வாசம் செய்யும் இடம் முழுதும்
அவர்கள் சொன்னது கீதையாகவும்
பைபிளாகவும்..
நான் சொன்னது
வெறும் கவிதைக் கிறுக்கல்களாக..
அவர் சிலுவையில் ஏற்றப்பட்டார்..
நான் மனசாட்சி சிலுவையில்..
மலை உச்சியில் விவிலியங்களும்
குருசேத்திரத்தில் கீதையும்..
நான் என் மன உச்சியில் கவிதைகளாக..
அவர்கள்
தேவகுமாரனாக இருந்த போதும்
சிலுவையில்..
நானும்தான்..
இப்படியாக
எந்தவிதத்திலும் நான்
குறைந்தவன் இல்லை..
ஒரே ஒரு மிகப்பெரிய வேறுபாடுதான்
எனக்கும் அவர்களுக்கும்..
மேல்தளத்தில் இருந்து
கீழ் தளத்தின் அவலங்களை பார்த்து
சொல்பவன் நான்..
அவர்கள்
கீழ் தளத்திற்கே இறங்கி வந்து
அனுபவித்து சொன்னார்கள்..
அவ்வளவே...
Bookmarks