என் குறிப்பேட்டிலிருந்து −
அன்னையே தெய்வம்
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றான்
அன்னை தந்தையே அன்பின்எல்லை என்றான்
நேரில் நின்று பேசும்தெய்வம் என்றான்
தாயைப் போலொரு தெய்வமுமில்லை என்றான்
தாயைப் போற்ற முயன்ற வார்த்தையெலாம்
ஆழக் கடலிலோர் குவளைமட்டுமே தந்தனவாம்
எத்தனை கவிஞர்கள் எழுந்து வந்தாலும்
அன்னையின் பெருமையை பாடிட முடியுமோ
பாரிலுள்ள அன்பெலாம் ஒன்றுசேர்த்து வைத்தாலும்
பெற்ற தாயின்முன் அவையெலாம் துச்சமாம்
யானை மிதித்தாலும் தன்வலி பொறுத்திடுவாள்
எறும்பு வலியாயினும் மகன்வலி பொறுத்திடாள்
மனதிற் உருவேற்றி உடலிற் உருத்தாங்கி
அன்பின் அமுதூட்டி இன்பத் தமிழூட்டி
வலிய தோள்தந்து நெடிய இடைதந்து
அன்புக் கைகோர்த்து மகிழ்வூட்டி வளர்த்தாளே.
எல்லையற்ற பாசமும் பற்றுதலும் கொண்டனள்
கண்ணின் இமையென தன்மகவு காத்து
பசியாற்றிப் பின்பாட பேசநடக்க படிக்க
கற்றுக் கொடுத்து முதற் குருவானவள்
வாழ்க்கை முழுதும் ஊன்றுகோலாய் நின்று
சரியான வழிகாட்டி ஊக்கமும் அளித்தனள்
அறிவுரை வழங்கினள் தவறும்போது சுட்டினள்
துணுக்குற்றபோது கலங்கினள் வென்றபோது மகிழ்ந்தனள்
வாசற்தெளித்து கோலமிட்டு பாத்திரங்கழுவி சமையற்செய்து
துணிதுவைத்து அலுவலகம் நடந்து ஏவல்கொண்ட
பணிமுடித்து வீடுதிரும்பி காப்பி போட்டு
சமையற்செய்து பாடஞ்சொல்லி நோய்கண்டு மருத்துவஞ்செய்து
மீண்டும் வாசற்தெளித்து கோலமிட்டு பாத்திரங்கழுவி....
மீண்டும்.. மீண்டும்...
நாழிகையல்ல முகூர்த்தமல்ல ஜாமமுமல்ல பக்க்ஷமுமல்ல
ருதுவுமல்ல ஆயனமுமல்ல இடைவிடாத ஓய்வற்ற
தூய்மையான உழைப்பினையை எப்போதுமே ஈந்தனள்
இதில் சொன்னதுபத்து சொல்லாதது கோடி
அன்னையின் செயலுக்கு இலக்கண மேற்றமுடியுமோ
நம்வாழ்வில் வெற்றிபெறுவதே அவளின் இலட்சியம்
நம்மகிழ்ச்சி ஒருநொடி வேண்டின் ஆயிரம்நாட்கள்
தன் துன்பத்தை ஏகமகிழ்வோடு ஏற்பனள்
அவளுக்கு நான்என்ன கைம்மாறு செய்வேன்
இறைவனே அன்னையின் உருவெடுத்து வருகிறான்
என் ஆதியந்தம் அனைத்தும் என்தாயின்
புனித பொற் பாதங்களுக்கு சமர்ப்பணம்.
அவள் நினைத்ததை முடிப்பதே எம்பணி.
அவள் கனவை நனவாக்குவதே எம்கடமை
அவளை மகிழ்வோடு காப்பதே எம்பாக்கியம்
அவளை போற்றி புகழ்வதே எம்மகிழ்ச்சி
ஆம். அன்னையே தெய்வம்.
Bookmarks