இந்த தொடரின் முதல் பாகப் பதிவை இங்கே காணலாம்.
ஓமானில் ஓவியனுக்கு அடித்த தண்ணீர் புயல் - பாகம் 2.
வீட்டில் வந்து நல்லதொரு சமையலைச்(சிரிக்காதேங்கோ நாங்கள் நல்லாவே சமைப்போமுங்க - அட நம்புறாங்க இல்லையே ) செய்து சாப்பிட்டுவிட்டு புயலை எதிர்பர்த்துக் காத்திருந்தோம். வீட்டுச் சாளரங்கள் கதவுகளை நன்றாக மூடினோம் (புயல் கதவை மூடி விட்டால் உள்ளே வராது தானே ). புயல் இனி வீட்டுக்குள் வராது என்ற எதிர்பார்ப்புடன் புயலைச் சமாளிக்கத் தயாரகினோம் , கண்விழித்திருந்து கண்விழித்திருந்து களைத்துப் போய் நித்திரையாகவே போய்விட்டோம். இரவு வேளை ஒரு மணியளவில் ஏதோ தகரத்தை உருட்டும் ஒலி கேட்டுக் கண்வித்தால் புயலால் ஏற்பட்ட இரைச்சல் தெளிவாகவே கேட்டது. ஆனால் அது எங்கேயோ கடந்து செல்வது போன்றிருந்தது. அந்த சந்தமும் சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது, ஆனால் அதனைத் தொடர்ந்து மழை தூறத் தொடங்கியது. மழை இரவிரவாகப் பெய்து கொண்டிருக்க நாங்கள் மறுபடியும் உறங்கிவிட்டோம்.
யூன் 6 - புதன் கிழமை
மெல்லத் துயில் கலைந்து வெளியே வந்து பார்த்தேன் மழை விடாது தூறிக் கொண்டிருந்தது, அது எனக்குப் பெரிய விடயமாகத் தெரியவில்லை இல்ங்கையில் இதைவிடப் பெரிய மழையெல்லாம் சமாளித்து இருக்கிறோமே என்ற அசட்டுத்தனத்தால். வெளியே வந்து பார்த்தால் புயல் அடித்தமைக்கான எந்த வித அறிகுறிகளையும் காணவில்லை. எங்களுக்குள் சிரிப்பு அட இதுக்கா மூன்று நாள் விடுமுறைவிட்டார்கள் இந்த ஓமானிய அரசாங்கமென்று. மழைபெய்து வானம் கறுத்திருந்தமையால் வெளியே போவதில்லையெனத் தீர்மானிதோம் (ஒருவேளை வெளியே சென்றிருந்தால் புயலின் கோரத்தாண்டவம் தெரிந்திருக்கும் ). நாம் வீட்டை விட்டு வெளியேறவில்லை அதே வேளை வெளியே நடை பெற்ற சம்பவங்களும் எங்களுக்குத் தெரியவில்லை ஏனென்றால் தொலைக் காட்சி வேலைசெய்யவில்லை, வீட்டில் இணைய இணைப்பு வேறு கிடையாது. வெளியிலேயோ மழை விடுவதாகத் தெரியவில்லை எனவே அன்றைய நாளை சிவனே என்று கழித்தோம் (முக்கியமாக அன்று எல்லோரும் நன்றாகக் குளித்து , நாங்களாகவே சமைத்து உண்டோம்).
யூன் 7 - வியாழக் கிழமை
காலையில் எழுந்து வந்து நீர் வரும் திருகியைத் திருகிய ஒரு நண்பன் அதில் தண்ணீர் வருவது நின்று போய்விட்டது என்று எல்லோரையும் எச்சரித்தான். வீட்டின் மேலே மொட்டை மாடியிலிருந்த தண்ணீர் தாங்கியைச் சென்று பார்த்த நாங்கள் அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாத்தை கண்டு திகைத்தோம். இப்போது தான் எங்களுக்கு உண்மை நிலவரம் மெல்ல உறைத்தது. அதாவது அடித்த புயலினால் தண்ணீர் துண்டிக்கப் பட்டுவிட்டது, இது தெரியாத நாங்கள் மேலே தண்ணீர் தாங்கியிலிருந்த தண்ணீரை முதல் நாளே அனாவசியமாகச் செலவளித்த மடத்தனம் தெட்ட்த் தெளிவாகியது. வீட்டில் இருந்த மூன்று குளியலறைகளில் இரண்டில் இருந்த வாளிகளில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது, அதனை வைத்து அன்றைய பொழுதைச் சமாளிப்பதாக முடிவெடுத்துச் சமாளிக்கவும் செய்தோம். தண்ணீர் இல்லாததால் உண்வு சமைக்க முடியவில்லை, எனவே வெளியே சென்று உணவு வாங்க முற்பட்டோம். பெரும்பாலான உணவுக் கடைகள் மூடியே இருந்தன. விசாரித்துப் பார்த்ததில் நீர் தடையானதிலிருந்து அவர்கள் கடைகளை மூடிவிட்டனர் என்று தெரிந்தது. கடவுள் புண்ணியத்தில் ஒரு சைவ உணவுக் கடையில் ஒரு கறியுடன் கட்டபட்ட சோற்றுப் பார்சல் வாங்க கூடியதாக இருந்தது. இதாவது கிடைத்ததேயென்று அதை வாங்கிச் சென்று ஒருவாறாக அன்றைய மதிய உணவை முடித்தோம். இப்போது கை கழுவக் கூட வீட்டிலே நீர் இல்லாத நிலமை. கைகழுவக் கூட குடிப்பதற்கு வாங்கி வைத்த தண்ணீர்ப் போத்தல்களைப் பாவிக்க வேண்டிய நிலமை, வேறு வழியின்றி அகுவாஃபினா தண்ணீர்ப் போத்தல்களில் எங்கள் தண்ணீர்த் தேவைகளைச் சிக்கனமாக முடித்துக் கொண்டோம். அன்றைய இரவு உணவு பிஸ்கட்டுகளுடனேயே முடிந்ததது. நாளை எப்படியும் பழுதடைந்த தண்ணீர்க் குழாய்களைச் செப்பனிட்டு தண்ணீர் வழங்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனேயே உறங்கிப் போனோம்.
யூன் 8 - வெள்ளிக் கிழமை
காலையில் கட்டிலால் குதித்திறங்கி ஓடிச்சென்று தண்ணீர் வரும் திருகியைத் திறந்து பார்த்தேன் காற்றுத் தான் வந்த்து தண்ணீர் வருவதற்கான அறிகுறியையே காணவில்லை. காலைக் கடன்களைக் கூட தண்ணீர்ப் போத்தல்களுடன் முடிக்கவேண்டிய நிலமை , என்ன செய்வது வேறு வழி இல்லையே. வெளியே சென்று கடைகளை ஆராய்ந்தால் அங்கே குடிக்கக் கூடிய நிலமையில் இருந்த அனைத்தும் விற்றுத் தீர்ந்திருந்தன, சாப்பாட்டுக் கடைகள் கூட வேலை நிறுத்தம் செய்தன. சாப்பிடக் கூட ஒன்றுமே இல்லாத நிலமை! . ஒரு வாறாக சேமிப்பிலிருந்த பிஸ்கெட்டுகள் அன்றைய பசியைப் போக்க பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்டன. ஒரு வாறாக மிகக் கொடுமையான ஒரு நாளாக அந்த நாள் கழிந்தது. இன்னும் எந்தனை நாட்கள் தான் இது தொடரப் போகின்றது என்ற அச்சத்துடனும் கையிருப்பிலிருந்த குடிதண்ணீர்ப் போத்தல்கள் முடிவடைந்தால் என்ன செய்வது என்ற கேள்விக் குறியுடனும் அன்று தூக்கத்திலாழ்ந்தேன்.
பாகம் 3 வெகுவிரைவில்................
Bookmarks