நம் நாடுகளில் போர் என்றால் அக்காலத்தில் சில சட்டதிட்டங்களும் நியாய தர்மங்களும் இருந்தன. சில சமயங்களில் சிலர் அதை மீறியிருந்தாலும் பெரும்பாலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன. எதிரி என்றாலும் நேருக்கு நேர் மோதுவதையே வீரம் என்று
கருதினர். உன் வித்தையெல்லாம் வீரத்தையெல்லாம் முகத்தின் முன்னே காட்டுவதே வீரமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது, தூங்கும் போது போர் புரிவதோ, இல்லை எதிரி தூங்கும் போது கல்லைப் போட்டு கொல்வதோ வீரமாக கருதப்படவில்லை.
அதே போல் இரவில் போர் புரிவது, அதாவது ஆதவன் மறைந்தபின் போர் புரிவது வீரமாக கருதப்படவில்லை. வீரப்புண் என்பது முன்னால் நெஞ்சிலே வாங்கியிருக்க வேண்டும். குருதி வழிந்தாலும் முன் மார்பிலிருந்து வழிய வேண்டும். புறமுதுகு காட்டுவது கேவலமாக கருதப்பட்டது. நெஞ்சில் துணிவிருந்தால் அது நேருக்கு நேராய் வரட்டும் என்றிருந்தது.
ஆனால் அதே கால கட்டங்களில் புவியின் பிற பகுதிகளில் போர் வேறு முறையில் புரியப்பட்டது. எந்த முறை கையாள்கிறோம் என்பதில் அவர்களிடம் ஒரு வரைமுறையில்லை. ஆனால் வெற்றி தோல்வி மட்டுமே குறியாக இருந்தது. அதனால் போர் என்றால் இரவு 2 மணிக்கு எல்லோரும் தூங்கிய பின்னரே ஆரம்பிப்பார்கள். இருளில்
எதிரியின் கண்ணில் படாது சென்று தாக்குவது ஒரு முறையாக இருந்தது. நம் மண்ணில் அவையெல்லாம் கோழைத்தனமாக கருதப்பட்டது.
வேறு வழியின்றி நாமும் இன்று அம்முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. சீனாவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் மன்னன் ஒரே நாடாக இணைத்து விட்டான். முக்கியமாக பின்னால் வந்த மன்னர்களும் அதே ராஜ்ஜியத்தை பின்பற்றி ஆண்டார்கள். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லாததால் பற்பல குறுநில
மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. ஆனால் அப்படி ஒரு ஒற்றுமைக்கான தேவையும் இல்லாதிருந்தது. ஏனெனில் இந்தியாவே ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர் பற்பல தாக்குதல்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.
சரி. நம் காட்சிக்கு வருவோம். அந்த கடுமையான போர்க்களத்தில் ஆண் யானையானது எதிரிகளால் தன் உடல் முழுக்க அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தும், மிகுந்த மன வலிமையோடும் ஊக்கத்தோடும் தன் இறுதி மூச்சு வரை பகைவர்களை எதிர்த்து போராடும். அதன் வலிமைக்கும் ஊக்கத்திற்க்கும் ஈடு இணையே இல்லை.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.
இது வீரம் வலிமை ஊக்கம் ஆகிய மூன்றும் இணைந்த உச்சத்தின் மாபெரும் சான்று.
இக்குறள் என் மனதைக் கொள்ளை கொண்டு பசுமரத்தாணி போல் பதிந்த குறள்.
Bookmarks