பயணங்கள்...
உலகம் தோன்றிய நாள்முதல், மனிதன் வாழுமிடம் தேடி அலையத் தொடங்கிவிட்டான். ஆனாலும், வடிவங்கள் மாறினவே தவிர, பயணங்கள் முடியவில்லை...
அப்படியான ஒரு பயணத்தின் நிகழ்வுகளை, காலம் என்னிடமிருந்து மறக்கடிக்கமுன் பதிவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருவூலத்தில் சேமிக்க விளைகின்றேன்...
அந்தரத்தில் சுழன்று அழகாய் பவனிவரும் உலகில், எனக்கும் உலா வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் ஏது தவறு..?
எனது ஐரோப்பிய நாடு நோக்கிய நகர்வு, நான் விரும்பியிருந்தபோதிலும், தாயகத்தின் இயல்பில்லாநிலை, என்னை நானே, விரும்பியோ விரும்பாமலோ நாடு கடத்த வைத்தது.
பெற்றோர், உறவுகள், நண்பர்கள் என்று அனைவரையும் விட்டுவிட்டு நானும் ஒரு நாள் அலுமினியப் பறவையின் வயிற்றுக்குள் தற்காலிகமான உணவாக உள்நுழைந்தேன்...
அதற்குமுன்னான நிகழ்வுகள், பயண முகவர்களோடான கால இழுத்தடிப்புக்கள், மற்றும் தலைநகரத்தின் காவலரின் இறுக்கமான கெடுபிடிகள் என்பவற்றை வெற்றிகரமாக வெற்றிகொண்டு, வானில் மிதக்க ஆரம்பித்த அந்த கணம், எனது வாழ்வில் பல்வேறு அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் தருவதற்கான ஆரம்பக் கணம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...
ஒரு அதிகாலையில், தலைநகரத்தின் தலைக்குமேலே, மானசீகமாக விடைபெற்றுக்கொண்டு, ஆரம்பித்த பயணம், முதல் விமானப் பயணம் என்பதால் பயத்தோடு சேர்ந்த குதூகலம்.
இடையில் விமானம் தரித்த இடங்கள், ஓரளவு நினைவில் இருந்தாலும் அந்த இடங்களைக் குறிப்பிடாமலே போகின்றேன். ஒரு நாள் பயணத்தில், மத்திய கிழக்கிலுள்ள 4 விமான நிலையங்கள் ஊடாகப் பயணித்து, ஐந்தாவதாக ஒரு விமான நிலையத்தை அடைந்தோம். என்னுடன் என்னைப் போலவே சிலரும் பயணித்திருந்தார்கள்.
மத்தியகிழக்கில் ஒரு முக்கியமான விமானநிலையத்தில், இறங்கி அதன் காத்திருக்குமிடத்திற்கு அனுப்பப்பட்டோம். பணம் விளையாடும் தொழில் என்பதால், எமக்குக் கெடுபிடிகள் இருக்கவில்லை. அங்கே காத்திருக்கும் இடத்தில் எமக்கு முன்னர் வந்த சிலரும் காத்திருந்தார்கள் பல நாட்களாக. நாமும் அவர்களோடு இணைந்து காத்திருந்தோம் 14 நாட்கள்.
நேரத்திற்கு உண்ண அழைப்பார்கள். போய் உண்போம். வசதியான விசாலமான இருக்கைகளில் தொலைக்காட்சி பார்த்தபடியும், வருவோர் போவோரைப் பார்த்தபடியும் காலம் கழிந்தது. 11 நாட்கள் முடிவில் காத்திருந்தவர்களில் எமக்கு முன் வந்தவர்களை விமானமேற்றி, அனுப்பிவைத்தார்கள். மூன்று நாட்களில் (மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானம் உண்டு) எம்மையும் அனுப்பிவைப்பதாகச் சொன்னார்கள்.
எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...
தொடர்ச்சி...
Bookmarks