Results 1 to 12 of 26

Thread: ஓமானில் ஓவியனுக்கு அடித்த தண்ணீர் புயல்-1

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    ஓமானில் ஓவியனுக்கு அடித்த தண்ணீர் புயல்-1

    பன்னிரண்டு பேரைக் காவு கொண்டும் இருபதினாயிரத்திற்கு மேற்பட்டோரை அகதிகளாக்கியும், பல்லாயிரக் கணக்கான வாகனங்களை உருட்டிச் சென்றும், வீடுகள் பலவற்றை முட்டித் தள்ளியும், எண்ணிலடங்கா மரங்களை வேரோடு சாய்த்தும் அட்டகாசம் செய்த "Tropical Cyclone Gonu" என்ற வானிலைக் கோளாறு ஓமான் நாட்டிலேயும் இந்த ஓவியனின் மனதிலும் எண்ணற்ற வடுக்களையும் கலையா நினைவுகளையும் பதித்து விட்டுச் சென்று விட்டது.

    இந்த சுறாவளியும் அதனுடனிணைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஒரு தனி மனிதனாக நான் தண்ணீருக்காகப் போட்ட தாளத்தையே இங்கே இந்த திரியாக எழுதவிளைகிறேன்.

    அதற்கு முன்னர் நான் என்னைப் பற்றியும் ஓமானில் எனது சூழலைப் பற்றியும் கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன். பிழைப்பு நாடி மத்தியகிழக்கைத் தேடி வந்த நான் ஏதோ கடவுள் புண்ணியத்தால் படித்த படிப்பிற்கு ஏற்ப ஒரு கணிய அளவியலாளனாக (Quantity Surveyor) பணிபுரிந்து வருகிறேன். இங்கே இதே நிறுவனத்திலே என்னுடன் இன்னமும் ஐந்து கணிய அளவியலாளர்கள் (அவர்களும் இலங்கையைச் சார்ந்தவர்களே..) பணி புரிகின்றனர். அவர்களனைவரும் என் வயதை ஒத்தவர்களாகவும், ஏற்கனவே இலங்கையிலேயே அறிமுகமானவர்களாயும் இருப்பதனால் எம்மிடை நல்ல புரிந்துணர்வும் நட்பும் நிலவி வருகின்றது. நாங்கள் ஆறு பேரும் ஓமானில் அல்குவைர் என்ற இடத்திலே அமைந்துள்ள ஒரு வீட்டினை எமது தங்ககமாகப் பாவித்து வருகின்றோம். இந்த அல்குவைர் பகுதி மக்கள் வசிப்பிட்த்துக்கெனவே ஒதுக்கப்பட்ட அயலிலே மலைக் குன்றுகளைக் கொண்ட ஒரு மேட்டு நிலப் பகுதி.

    கடந்த 5ம் திகதி காலை வழமை போல அலுவலகம் சென்ற நான் அங்கே கண்ணில் பட்ட அன்றைய நாளேட்டிலே ஓமான் தேசத்தைச் சூழவிருந்த புயல் அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கையைக் கூட பெரிதாக நினைக்கவில்லை. வழமை போல் அலுவலகத்திலே இயங்கிக் கொண்டிருக்கையில் அலுவலகத்தில் எங்களுடனிணைந்து தொழில் புரியும் ஓமான் தேசத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த புயல் பற்றிய எச்சரிக்கைச் செய்திகளால் அலுவலகம் விட்டு நீங்கி வீடு திரும்பிய போதும் கூட நாங்கள் ஆறு பேரும் வழமை போல் கல்லுளி மங்கர்களாக அலுவலகத்திலியங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அரசாங்க வானொலிகள் மற்றும் தொலைக் காட்சிகள் தங்கள் எச்சரிக்கைகளைத் தீவிரமாக்கி இரண்டு நாள் அவசரகால விடுமுறையை அறிவித்து மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கின.
    மூன்று நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருடகளைச் சேமித்தல், தாழ்வான பகுதி வாழ் மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு நீங்கி மேட்டு நிலங்களை நாடுதல் என்பன அவற்றில் சில.

    இப்போது வரப் போகும் புயலின் விளைவு மெலிதாக எங்கள் மனதில் அச்சமூட்டத் தொடங்கியது, ஏனென்றால் என்னைப் பொறுத்த வகையில் பல் வேறு போர்ச்சூழல்களை எதிர்கொண்டிருந்தாலும் இவ்வாறான ஒரு இயற்கையின் கோபாவேசத் தாக்குதலை எதிர் கொள்ள போவதென்பது முதல் அனுபவம். வெளியே சாளரமூடு தெரிந்த வானம் வேறு கரு நிறம் கொண்டு பயமுறுத்தியது. வீட்டிலே மூன்று நாட்களைச் சமாளிப்பதற்கான உணவுப் பொருட்கள் வேறு இல்லை என்பது அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. எனவே வேக வேகமாக தமிழ் மன்றில் புயல் பற்றிய செய்திகளைப் பதித்துவிட்டு நானும் நண்பர்களுடனிணைந்து அலுவலகம் விட்டு வெளியேறினேன். அந்த நேரத்திலேயே வரப் போகும் இயற்கை அனர்த்தத்தை வரவேற்க ஆட்களின்றி வீதிகள் வெறிச்சோடிப் போயிருந்தன. அவசரம் அவசரமாக அருகில் தென்பட்ட ஒரு சூப்பர் மார்கெட்டிற்குச் சென்று தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வீடு திரும்பினோம்.

    ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எங்களுக்கு வேண்டிய குடி நீரை (மத்திய கிழக்கு நாடுகளில் குடி நீரை போத்தல்களில் வாங்கியே பாவிப்பது வழமை) அந்த பகுதிக்கு ஓமான் ஓசிசிஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஒரு விற்பனைப் பிரதிநிதி எங்கள் வீட்டு வாசலில் வைப்பது வழமை, அதனை எதிர் பார்த்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வெறுமையான நீர்க் கொள்கலன்களையும்(ஒவ்வொன்றும் பதினெட்டு லீட்டர் நீரைக் கொள்ளும் திறன் மிக்கது) வீட்டு வாசலில் வைத்து விட்டே அலுவலகம் செல்வது எங்கள் வழமை, அந்த வெற்றுக் கொள்கலங்கள் ஆறையும் எடுக்கும் அந்த விற்பனைப் பிரதிநிதி புதிதாக ஆறு நீர் நிறைந்த கொள்கலன்களை வைத்து விட்டுச் செல்வார். அவ்வாறே புதிய நீர் நிறைந்த கொள்கன்களை எதிர்பார்த்து வீடு திரும்பிய எங்களை வெறுமையாக நீரின்றிக் கிடந்த கொள்கன்கள் வரவேற்று எங்கள் நம்பிக்கைகளைத் தவிடுப் பொடியாக்கின.

    இப்போது எப்படியாவது குடி நீரை வாங்கிச் சேமிக்க வேண்டிய நெருக்கடி நிலை, வீட்டிலேயோ மருந்துக்குக் கூட குடி தண்ணீர் இல்லையென்ற நிலை. ஆதலால் நாங்கள் ஆறுபேரும் இரண்டு இரண்டு பேர் கொண்ட குழுக்களாகி குடி தண்ணீரை எங்கேயாவாது வாங்கி வருவதென்று கங்கணம் கட்டிப் புறப்பட்டோம். நானும் சிறியும் (ஆறு பேரில் ஒருவன்) அல்குவாரின் சந்தைப் பகுதியை நோக்கித் தண்ணீர் வேட்டைக்காகச் சென்றோம். நாம் சென்ற கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் எங்கேயும் தண்ணீர் போத்தல்கள் முடிவடைந்த நிலை. எங்களால் ஒரு போத்தலைக் கூட வாங்க முடியவில்லையென்ற போது அழுகை அழுகையாக வந்தது. ஈழத்தில் வீட்டு முற்றத்தில் சமூத்திரம் போன்று நீர் நிறைந்த கிணற்றினை வைத்துக் கொண்டு ராஜா மாதிரி இருந்த காலங்கள் மனதிலே நிழலாடத் தவறவில்லை.அத்துடன் தண்ணீர் தேடிச் சென்ற மற்றைய நண்பர்களும் தங்களுக்கும் தண்ணீர் கிட்டவில்லையென்ற செய்தியை கையடக்கத் தொலை பேசியூடு அறிவிக்கையில் இந்த இயற்கை அனர்த்தத்தை எப்படி எதிர்கொள்வதென்ற கேள்வி என் மனதிலே பூதாகரமானது.

    வேறு வழியின்றி வீடு திரும்புவோமென்று எண்ணுகையில் கடவுள் தன் கருணைக் கண்ணை மெல்லெனத் திறந்தார். ஆம் நாம் நின்ற இடத்திற்கு அருகே இருந்த ஒரு கடைக்கு பெப்சி நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பார ஊர்தி (லொறி) வந்து நின்றது. அந்த வண்டி நிறைய ஒன்றரை லீட்டர் கொள்ளவு உடைய அகுவாஃபினா (Aquafina) தண்ணீர் போத்தல்களடங்கிய பெட்டிகள். ஓடிச்சென்று அந்த போத்தல்களை வாங்க எத்தனிக்கையில் கடையில் திடீரெனக் கூடியது பெருங்கும்பல் எல்லோரது கண்களும் அந்த பெட்டிகளையே ஆவலுடன் பார்த்தன. ஒருவாறாக நீண்ட வரிசையில் நின்று பத்து பெட்டிகள் அகுவாஃபினா தண்ணீர்ப் போத்தல்களை (மொத்தமாக நூற்றி எண்பது லீட்டர் கொள்ளவு) வாங்கிக் கொண்டு இனிப் வரப் போகும் புயலை இலகுவாக எதிர்கொள்ளலாமென்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.

    ஆனால் அப்போது விதி எங்களைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தது எங்களுக்கே தெரியவில்லை தெரிந்திருந்தால் நான் இந்த பதிவை அடுத்த பாகமாக நீட்ட வேண்டிய அவசியமும் வந்திருக்காது.


    இன்னமும் இந்த தண்ணீர்ப் புயல் அடிக்குமென வானிலை நிலையம் எச்சரிக்கிறது..
    Last edited by ஓவியன்; 12-06-2007 at 03:34 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •