கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்சர்)
வணக்கம் என் மன்ற உறவுகளே, :medium-smiley-065:
இன்று நமது தமிழ் மன்றத்தில் எனது ஒன்றாவது பிறந்தநாள்.
இது எனது முதல் சிறுகதை.
என்னை தமிழ்தாயுடன் இணைத்த தமிழ் மன்றதிற்க்கு இது சமர்ப்பணம்.
கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்சர்)
பூமியின் ஏக்கங்களைக் கண்டு வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி, மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல், சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்.
ஒரே ஓட்டமாகச் சென்று கொடிக்கம்பத்தில் உலர்த்திய துணிகளை எடுத்து கொண்டாள் மல்லிகா. ஒரு புறம் சந்தோஷம், இன்றைய இரவாவது உஷ்ணமில்லாமல் இதமாக உறங்கலாம் என்று எண்ணிக்கொண்டே துணிகளை கட்டிலின் மேல் வைத்து உலர்ந்த துணிகளை மடிக்கலானாள்.
வீட்டிலிருந்து 'மியாவ் மியாவ்' என்று ஒரு மெல்லிய குரல் மெல்ல விட்டு-விட்டு ஒலிக்க, ஜன்னலில் எட்டிப்பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. சில வினாடிகள் சென்று மீண்டும் 'மியாவ்' என்று சத்தம் வரவே, வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். சப்பாத்து பெட்டியின் அடியில், தூறலில் நனைந்து ஒல்லியான தேகத்தில் ஒரு சாம்பல் நிற பூனைக்குட்டி நின்றுகொண்டிருந்தது. மல்லிகாவைப் பார்த்ததும் அது பயந்து பேந்த பேந்த விழித்தது. சடாரென ஒரே பாய்ச்சலில் வெளியில் குதித்து ஓடியது. மல்லிகா, உணர்ச்சியே இல்லாமல் உள்ளே சென்று மீதி துணிகளையும் மடித்து வைத்தாள்.
" இந்த பூனைங்களோட தொந்தரவைத் தாங்க முடியல.. சிவா!! சிவா!! எங்கடா இருக்கே!!!?"
" என்னம்மா? "
" என்னடா பண்ணீட்டு இருக்கே?"
" மாடியில படிச்சுட்டு இருக்கேன்மா"
" கிச்சன்ல பால் இருக்கு. குடிச்சுக்கோடா... அப்பாவ இன்னமும் காணமே! எங்கடா போனார் அப்பா?
சிவா மல்லிகாவின் இளைய மகன். ராம் மூத்தவன். ஒரே மகள் மாலா.. மல்லிகாவின் கணவர் சுந்தரம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார். சின்ன குடும்பம். கலகலப்பான வீடு... எதிரெதிரே சில வீடுகள் இருந்தன. அமைதியான சுற்றுப்புறம்.. நிம்மதியான வாழ்க்கை.
சனிக்கிழமை மதியம், மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது. மல்லிகா மெல்ல கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். மறுபடியும் அதே குரல், பூனையின் அழகான ராகம். இம்முறை மிக அருகில் கேட்பது போல் தோணவே சன்னலில் எட்டிப்பார்த்தாள். அதே பூனை பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தது. பட்டென்று சன்னலை அடைத்து விட்டுச் சென்றாள். சிறிதுநேரத்தில் ஏதோ தோன்றவே மீண்டும் சென்று எட்டிப்பார்த்தாள். பூனையாரைக் காணவில்லை, ஹூம் ரொம்பத்தான் ரோசம் அதுக்கு, போய்விட்டதோ என்று எண்ணி பூப்பறிக்க வாசல் கதவைத் திறந்தாள். பூனையார் மீண்டும் அதே சப்பாத்து பெட்டியின் அருகில் இருக்க 'ஏய்' என்று விரட்டினாள். பூனையோ சிறிது தூரம் சென்று, பின் திரும்பி அவளையே உற்று நோக்கியது. மல்லிகாவிற்க்கு மனது சற்று நெருடவே, பூனைக்கு பசிக்கும் போல என்று எண்ணியவாறு இரு வாரேன் என்று சொல்லி உள்ளே சென்றாள். உள்ளே வராதே என்று விரலசைத்தும் சென்றாள். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சிறிது பால் உற்றி எடுத்து வந்து கொடிக்கம்பத்தின் அருகில் வைத்து விட்டு,
" ஏய் உனக்குதான், குடிச்சுட்டு கெளம்பு, இனி இங்க வந்த கொன்னு போடுவேன் ஆமா, " என்று சொல்லிட்டு நடந்தாள்..
செல்லும்போதே திரும்பிப் பார்த்தாள்; பூனையார் அங்கேயே அமர்ந்து வீட்டை சுற்றும் முற்றும் நன்கு நோட்டம் விட்டார். மல்லிகாவோ சரி குடிச்சா குடி இல்லாட்டி போ என்று பூ பறித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
இரவு சென்று பகலை அனுப்பியது. வாசல் கழுவ வந்தாள் பிலாஸ்டிக் டப்பா கண்ணில் பட்டது, பார்த்தால் பால் இல்லை.
" மாலா! "
" என்னங்கம்மா?"
"நேத்திக்கு இந்த டப்பாவில இருந்த பாலை நீ கீழ ஏதாச்சும் கொட்டிட்டியா?"
" இல்லம்மா. ஏன் கேக்கிறீங்க?"
" சரி சரி.. ஒன்னுமில்ல. கொஞ்சம் இரக்கப்பட்டு பூனைக்கு பால் ஊத்தினேன். அதான் கேட்டேன்.. "
சில நாட்கள் பிறந்து இறந்தன, ஒரு இரவு 8 மணியளவில் அதே குரல் அதே வசனம், மீண்டும் எட்டிப்பார்கிறாள். மீண்டும் பூனையாரே வாசலில்....
"அடடா ஒருநாள் பால் வச்சா உடனே மறுபடியும் வந்திட்டியா, போ " என்று விரட்டினாள்.
"யாரம்மா ?" சின்னவன் சிவா கேட்டான்.
"அட அதுவா ஒரு பூனைக்குட்டிடா, அன்னைக்கு வந்துச்சு பால் வச்சேன், இன்னைக்கும் வந்துருச்சு... பாலெல்லாம் தீந்துருச்சி "
பார்த்த சிவாவின் கண்களில் அழகு பூனையின் பிம்பம் பதிந்தது. மீண்டும் 'மியாவ்' என்ற சப்தம் வந்தது.
"அம்மா பாவம்மா அது, பாலில்லைனா பரவாயில்லை கொஞ்சம் சோறு வைக்கலாமே " சிவா சொன்னான்.
"வேணாம், நீ போய் பாடத்த படி" அதட்டினாள் மகனை.
" பூனைக்குதான் மீன் பிடிக்குமாமே, இன்னைக்குதான் மீன் கறியாச்சே, கொஞ்சூண்டு போடுவோமே! பாவம் அது " என்று கெஞ்சினான்.
"சிவா உனக்கு பூனை பிடிக்குமா ?"
" அதெல்லாம் ஒன்னுமில்லே சும்மா பாவப்பட்டேன் ".
பதில் பெறாமலே சிவா காட்டூன் பார்க்க சென்று விட்டான். சலித்துக்கொண்டே ஒரு சிவப்பு பிலாஸ்டிக் தட்டில் சோறு பிசைந்து, பூனையிடம் சென்று, 'வாங்க ராசா உங்களுக்குதான்' என்று இளித்து கொண்டே வாசல் பக்கம் வைத்தாள்.....
காலையில் சுந்தரம், " என்ன இது யார் செஞ்சா இத ?" என்று கேட்க ,மல்லிகா வாசலில் வந்து நின்றாள், பிலாஸ்டிக் தட்டில் வைத்த சோறு சிறிது சிதறிக் கிடந்தது. சின்னவன் ஓடி வந்து,
"அதுவாப்பா?, நேற்று ஒரு சாம்பல் பூனைக்குட்டி வந்துச்சு, அம்மா சோறு போட்டாங்க" என்று பழியை மல்லிகா மேல் சுமத்தி நல்ல பிள்ளையானான்.
" ஓ அவ வேலையா இது.. " என்று சொல்லிவிட்டு சுந்தரம் அகன்றார். சிவாஅந்த பிளாஸ்டிக் தட்டில் ஏதோ ஒன்றை உற்று நோக்கினான், தட்டில் இஞ்சி கொஞ்சம் கிடந்தது.
"அம்மா அதுக்கு இஞ்சி பிடிக்காதுபோல, அதுதான் துப்பிடிச்சுனு சொல்லிவிட்டு காரினுள் அமர்ந்துகொண்டான்.
"உலகத்திலே உன் சமையல் பிடிக்காத ஒரே ஆளு இந்த பூனைக்குட்டிதான் " வஞ்சனை இல்லாமல் மனைவியைப் பாராட்டி சிரித்து விடைப் பெற்றார் சுந்தரம்.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன, தினமும் இரவு 8 மணிக்கு அதே ராகம் அதே பல்லவி அதே வாசலில். இம்முறை எடுத்த எடுப்பிலே 5வது கட்டை சுருதியில் கம்பீரமாக " மியாவ் மியாவ் " பாடினார் பூனையார். சிவா ஓடி வந்து, " அம்மா ஜிஞ்சர் வந்து இருக்கு" என்றான்.
மல்லிகா, கொய்யாப்பழம் சீவிக்கொண்டே, " என்னடா அது ஜிஞ்சர் ? "என்றாள்.
"அதான்மா அந்த பூனைகுட்டி, அதுக்குத்தான் இஞ்சி பிடிக்காதே அதான் அதிரடியா டீச்சர்கிட்ட கேட்டு ஜிஞ்சர்னு ஃபேஷனா பேரு வெச்சுட்டேன், "இஞ்சி"னு தமிழில் வச்சா பூனைக்கு பிடிக்குமோ இல்லையோ! "மழழையாய் சிரிக்க மல்லிகாவும் சிரித்தாள்.
"என் அறிவாளி புள்ளடா நீ , சரி வா அதுக்கு சோறு வைக்கலாம்." என்று சொல்லிக் கொண்டே சாம்பார் கலந்துபிசைந்து வைத்தாள். காலையில் தட்டைக் கண்டால் சாம்பார் சாதம் சிறிது மீதம் வைத்துச் சென்றது ஜிஞ்சர். பாத்திரத்தைக் கழுவி ஒரு ஓரமாக வைத்தாள்.
மல்லிகாவைத் தவிர மற்றவர்கள் ரொம்பவே பாசமாக இருந்தார்கள் அந்த பூனைமீது. பூனையின் வருகைக்காக மாலாவும் சிவாவும் தினமும் எதிர்நோக்கி இருப்பார்கள். அன்று வீட்டில் விசேஷம். படபவென்று வேலைகளில் மூழ்கினாள் மல்லிகா. நேரம் போனதே தெரியவில்லை. 6 மணிக்கு பூஜை முடித்து உற்றார் உறவுகளுக்கு உணவு படைத்து அனுப்பி வைத்தாகிவிட்டது. அனைத்து பாத்திரங்களும் கழுவி வைத்தாகி விட்டது. சோர்வாக அமர்ந்தாள். ஜிஞ்சர் சரியா 9 மணிக்கு வந்துவிடும் (பூனைக்குட்டிதான்.. ). சிவா மெல்ல மல்லிகாவிடம் வந்து,
" அம்மா ஜிஞ்சரை நாமே வச்சுக்கலாமே ?" என்று அடம் பிடித்தான்,
"வேணாம் சிவா அண்ணாக்கு பூனைன்னா அலர்ஜி, அதுபாட்டுக்கு வரட்டும் போகட்டும்.. ஆனா நாமளே வெச்சுக்க வேண்டாம் " என்று சமாதானப்படுத்தினாள், சிவாவுக்கு ஜிஞ்சர் மேல் அளவுகடந்த பிரியம். சில சமயம் அதனுடன் விளையாடுவான். கொஞ்சுவான்...
இன்றும் வந்தது. தன் வழக்கமான பாடலை மெல்ல ஆரம்பித்தார் பூனையார் ஜிஞ்சர். மல்லிகாவிற்க்கு ஒரே கலக்கம் அடடா ஒன்னுமில்லையே என்று, அதற்க்குள் மகள் மாலா ஜிஞ்சருக்கு ஏதோ எடுத்துச்சென்றாள்,
"மாலா என்ன அது ?" மல்லிகா.
"ஜிஞ்சருக்கு சோறு " என்றாள்,
"கறி இல்லையே ?"
"இல்லமா; அண்ணா , கடையில் இருந்து நெத்திலித்தல வாங்கிட்டு வந்தான்"
" பணம்? "
ராம் வெளியே வந்து, " அவதான் உண்டியில் இருந்து காசு எடுத்து கொடுத்தா என்று சொன்னான்.
" ஆமா ஐடியா நாந்தான் கொடுத்தேன் "சிவா பூரித்தான் . தாய் ஆச்சரியமாகப் பார்த்தாள், தந்தை எதுவும் கேட்காதவர் போல் செய்தி கேட்டுக்கொண்டு இருந்தார்.
மறுநாள் காய்கறிகளுடன் 1 கிலோ நெத்திலித்தலையும் வாங்கிக்கொண்டு வந்தார் சுந்தரம். இவர்களோடு சுந்தரமும் கூட்டணி சேர்ந்து விட்டார். மல்லிகா மீன் குழம்பு வைக்க மீனை கழுவ, பின் கதவைத் திறந்து வெளியில் உள்ள குழாயில் அமர்ந்தாள், பக்கத்து வீட்டு பாத்திமாவின் மகள் 6 வயது ஜுபைடா குட்டி ஜட்டியுடன் பல் துலக்கிகொண்டு இருந்தாள், மல்லிகாவை உம்மா என்றுதான் அழைப்பாள். ஸ்கூலுக்கு போகலையா ஜுபி என்று கேட்க, வாயில் நுரையுடன் இல்லை என்று தலையசைத்தாள். பின் ஜுபைடா மெல்ல கண் ஜாடை காட்டினாள். என்ன என்று விளங்காத மல்லிகா, என்னடி ஜுபி என்று கேட்க, உணர்ச்சியின் உச்சியில் சென்ற ஜுபி அய்யோ உம்மா அங்க பாருங்க உங்க பெஸ்ட் ஃபிரண்டு வந்திருக்கார் என்று ஆவேசமாக சொன்னாள்.
பின்புறம் ஜிஞ்சர் அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் அமர்ந்திருந்தார்....ஓ இவரா!!
"வாங்க சார், என்ன இன்னைக்கு பகலியே வந்துடீங்க? போய்ட்டு இரவு வாங்க...ம்ம் என்ன சரியா..?" பேசிக்கொண்டே மீன்கழிவுகளைப் போட்டாள். ஜிஞ்சரும் மெல்ல சப்பு கொட்டி சாப்பிட்டது. வீட்டில் தொலைப்பேசி அடித்தது. மல்லிகா, மீன்கள் அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்து மூடி ஜன்னலின் அருகே மேசைமீது வைத்து விட்டு அவசரமாகச் சென்றாள்.
அதற்க்குள் ஜுபி " உம்மா உம்மா " என்று அலர, பின் பக்கம் ஓடி வந்தாள் மல்லிகா, அவள் வருவதற்குள் ஜிஞ்சரய்யா மூடியைத் தள்ளிவிட்டு ஒரு பெரிய மீனைக் கவ்வி மேசை மீதிருந்து குதித்தார்.
மல்லிகாவை கண்டதும் வேகமாகத் தாவி வெளியில் ஓடியது ஜிஞ்சர். மல்லிகாவும் விரட்ட அதுவும் ஓட பின் அதுவே நின்று நிதானமாக மல்லிகாவை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு அன்ன நடையில் ஃகேட் வாஃகீங்கைத் தொடர்ந்தது. "பாத்தியா! பாத்தியா! உன் புத்திய காட்டீட்ட... என்று மல்லிகா கையில் கிடைத்த பாத்திரத்தை விசிறி அடித்தாள். அது கண்டுக்கவே இல்லை. "ச்சே உன்ன போய் நான் கூட்டாளி பிடிச்சேன் பாரு என்னை சொல்லனும். உன் புத்தி மாறாது, இரு இரு ராத்திரி வருவேல்ல அப்ப வச்சுகிறேன். எனக்கு நல்ல வேணும்." முணகிக் கொண்டே மீன்களை மீண்டும் சுத்தம் செய்தாள். பிள்ளைகள் வந்ததும் புலம்பினாள்.
இரவு...
அது நானா என்பது போல அப்பாவியாய் 9 மணிக்கு ஆஜர் ஆகியது செல்லப் பூனை ஜிஞ்சர். மல்லிகாவின் கட்டளைப்படி யாரும் உணவு வைக்கச் செல்லவில்லை. சிவா உறங்கி இருந்தான். ராம்தான் "பாவம் விடும்மா" என்று வாதாடினான். மாலா கதை புத்தகத்தில் மூழ்கி ஜிஞ்சரை கண்டு கொள்ளவில்லை. "மியாவ் மியாவ்" என்று பாடி பாடி களைப்புற்றது. பின் சத்தம் இல்லை. அனைவரும் உறங்கியபின் மீண்டும் வந்தது தனக்கு தெரிந்த ஒரே ராகத்தை மீண்டும் ஆரம்பித்தது. சமயலறையில் ஏதோ சத்தம் கேட்க மல்லிகா சென்று கண்டாள். சுந்தரம் நெத்திலியுடன் சோறு பிசைந்துகொண்டு இருந்தார்.
"பாவம்டி அது, கல் நெஞ்சம்டீ உனக்கு, உண்மையிலே கல் நெஞ்சம்.. போயும் போயும் ஒரு பூனைகூடவா சண்டை போடனும்? குழந்தை போல் அடம் பண்ணாதே மல்லிகா !! "என்று ஜிஞ்சரை கவனிக்கச் சென்றார்.
காலையில் பாத்திரத்தில் சுந்தரம் வைத்த உணவில் பாதி அப்படியே இருந்தது. மல்லிகாவிற்க்கும் மனது ஒரு மாதிரி இருந்தாலும் அந்த நிகழ்ச்சியையே நினைத்துக் கொண்டிருந்தாள். பிறகு இரண்டு நாட்கல் ஜிஞ்சர் வரவில்லை. வீட்டில் அனைவரும் ஜின்சரைத் தேடினர். சிவா ஏங்கிப் போனான்.
மூன்றாம் நாள் ஜின்சர் வந்தது, மல்லிகாவே 2 முறை சாப்பாடு வைத்தாள். அருகில் இருந்து சாப்பிடுவதையும் கவனித்தாள். சிவாவுடன் நன்கு விளையாடியது.
சில நாட்கள் நகர்ந்தன.
டூட்டி ஆபீசர் போல் தினமும் 9 மணிக்கு ஆஜர் ஆகிவிடுவார். என்ன வைத்தாலும் சாப்பிட்டுவிட்டு சென்று விடுவார். ரசம், சாம்பார், கீரைக்கடையல் என்று தமிழ் பூனையாகவே மாறியது ஜின்சர்.
நேற்று வரவில்லை.
இன்றும் வரவில்லை.
மல்லிகா வீட்டிலே மீன் கழுவிக் கொண்டிருந்தாள் திடீரென தொலைப்பேசி அலறியது. பள்ளியிலிருந்து சிவாவின் ஆசிரியர் போன் செய்தார். என்ன விசயம் என்று கேட்க சிவாவிடம் போனைக் கொடுத்தார். சிவா அழுதுகொண்டே இருந்தான்
" சிவா ஏண்டா அழறே சொல்லுடா " பதட்டமானாள் மல்லிகா,
"அம்மா நான் ஜிஞ்சரப் பார்த்தேன்மா" என்றான்,
"இத வீட்டில் வந்து சொல்லாமே! சரி அழாதே ராத்திரி வரும்" என்றாள்.
"இல்லைமா அது வராது, நான் பார்த்தேன் அது ரோட்டுலே அடி பட்டு செத்துபோச்சு. நான் அத தூக்கிகிட்டு வீட்டுக்கு வரட்டா "என்று கேட்டான்,
"அதெல்லாம் ஒன்னும் வேனாம். நீ போய் பாடத்த படி " என்றாள்.
மீண்டும் மீன் கழுவச் சென்றவளுக்கு என்னமோ மனம் கனத்தது. சட்டென்று கண்ணீர்த் துளிகள் கழுவிய மீன்களின் மேல் விழுந்தது சுந்தரம் சொல்லிய கல் நெஞ்சமடி உனக்கு என்ற வார்த்தை மனதுக்குள் எதிரொலித்தது.....
மீண்டும் மீண்டும் விழுந்த கண்ணீர்த் துளிகள் கல் நெஞ்சமடி உனக்கு என்ற வசனத்தை பொய்யாக்கியது.