13. குளியலறை சலதரங்கம்!
(அளவியல் நேரிசை வெண்பா)
குளித்து முடித்துக் குளியல் அறையில்
துளித்துளிநீர் சல்லடையில் சொட்டி - அளிக்கும்
சலதரங்க ஓசையின் சன்னம் ஒலிக்க
நலிவில் விளையும் நலம்.
--ரமணி, 14/10/2015
*****
Printable View
13. குளியலறை சலதரங்கம்!
(அளவியல் நேரிசை வெண்பா)
குளித்து முடித்துக் குளியல் அறையில்
துளித்துளிநீர் சல்லடையில் சொட்டி - அளிக்கும்
சலதரங்க ஓசையின் சன்னம் ஒலிக்க
நலிவில் விளையும் நலம்.
--ரமணி, 14/10/2015
*****
14. தென்னை மரம்
(அளவியல் நேரிசை வெண்பா)
ஓலைகள் ஒவ்வொன்றும் ஓர்பாளை தாங்கிட
கோலத்தில் பின்னலாய்க் கொள்பூக்கள் - காலத்தில்
சின்னப்பூ வொன்றே சிதறாது காயாகும்
தென்னையென வாழ்வதென்றோ தேர்ந்து?
--ரமணி, 14/10/2015
*****
15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)
இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்றன் பல்கூ சச்செய்யும்
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!
--ரமணி, 15/10/2015
*****
16. மூக்கில் வடையுடன் விமானம்!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)
காக்கை வடையொன்றைக் கவ்வியே வானில்நான்
பார்க்கச் சிறகிரண்டைப் பக்கம் விரித்தேதன்
போக்கிலே போவது போலோர் விமானம்தன்
மூக்கில் விளக்குடன்கண் முன்பு.
--ரமணி, 15/10/2015
*****
17. நித்யமல்லிப் பூநிரை
(அறுசீர் விருத்தம்: தேமா மா மா மா மா காய்)
சின்னச் சின்ன இதழாய் ஏழில்
. செல்லும் விழிகாண
என்னை மயங்கச் செய்யும் மணமே
. ஏறும் நாசியிலே
சன்னப் பூவாம் நித்ய மல்லி
. சேரும் அர்ச்சனையில்
பொன்னன் சடையன் பித்தன் பாதம்
. போற்றி மகிழ்ந்தேனே.
--ரமணி, 15/10/2015
*****
18. வாத்துகளின் கவாத்து!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)
சாலிக் கதிர்தலை சாய்க்கும்தென் காற்றினில்
மாலைப் பொழுதாக வாத்துகள் - கோலவெண்
தீற்றாய்ப் பயிலும் சிறுநடை; கோலுடன்சேய்
ஆற்றுப் படுத்தும் அழகு!
--ரமணி, 18/10/2015
*****
19. மழைத்துளி மழலைகள்!
(அளவியல் நேரிசை வெண்பா)
கருக்கொளும் வானம் கடிபொழு தில்தன்
உருவெதும் அற்ற உதரம் - பருக்க
மழைத்துளி வீழ்ந்தே மழலைக ளாகத்
தழைத்தே விரையும் தவழ்ந்து.
--ரமணி, 19/10/2015
*****
20. முழுவெண்ணிலவு!
(அறுசீர் விருத்தம்: புளிமா மா காய் . புளிமா மா காய்)
முழுவெண் நிலவைக் குளத்தினிலே
. முழுக வைத்தே சிற்றலைகள்
கழுத்தை நெரித்துத் துண்டாக்கிக்
. கடித்துத் தின்ன முயன்றதுவே!
முழுவெண் நிலவோ துண்டுகளில்
. முழுதாய் நின்று சிரித்ததுவே!
முழவாய் எண்ணம் அதிர்த்தாலும்
. முழுதாய் நிற்கும் என்மனதே!
--ரமணி, 19/10/2015
*****
21. பல்லாங்குழிப் பயிர்கள்
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)
பல்லாங் குழிபோன்ற பாத்திக் குழித்தட்டில்
மெல்லிய பைங்கூழ் விதைபல தென்னையின்
நார்கழிவில் மேலெழும் நாற்றுக்கைப் பிள்ளைக்கு
நீர்புகட்ட நெஞ்சில் நெகிழ்வு.
--ரமணி, 20/10/2015
*****
22. காகிதமும் கணினியும்
(எழுசீர் விருத்தம்: கூவிளம் விளம் மா விளம் . விளம் விளம் காய்)
ஏகமாய் அடித்ததைத் திருத்தி மறுபடி
. இன்னொரு வரைவென எழுதியுமே
காகித நாட்களில் கதையும் கவிதையும்
. கலகலப் பாகநான் எழுதினனே
வேகமாய்க் கணினியின் விசைகள் தட்டியே
. விழைவது திருத்துதல் எளிதாகக்
காகமாய்க் கணினியில் விரல்கள் கொத்தியும்
. கதைகளும் கவிதையும் வந்திலையே!
--ரமணி, 22/10/2015
*****
23. கண்ணிமைக்குள் ஒரு திரைப்படம்
(அளவியல் நேரிசை வெண்பா)
கண்ணிமை மூடநான் காண்நாவல் வண்ணத்தில்
எண்ண அணுக்கள் எழுதிடவே - வண்ணத்
திரைப்படம் என்னுள் திகில்நிறைவாய் ஓட
ஒருமித்துக் காணும் உளம்.
--ரமணி, 23/10/2015
*****
24. ஆட்டுக்கல் அறிவுரை!
(அளவியல் இன்னிசை வெண்பா)
இருக்கும் வரையில்தான் இன்பம் துயரம்
மரணமேற் பட்டால் மனிதன் சடலந்தான்
ஆட்டுக்கல் மாவரைத்தே அன்னை - குழந்தைநான்
கேட்க மனதில் கிலி.
--ரமணி, 24/10/2015
*****