ஓவியங்கள் - மெசொபொடாமியா - முன்னுரை
மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையிலும் ஓவியங்கள் பல பரிமாணங்களைத் தொட்டு வருகிறது. இதன் நீட்சி நாளை எப்படி இருக்கும் என்று நாம் அறியோம். ஆனால் கடந்த கால வளர்ச்சியின் படித்துறை எப்படியெல்லாம் இருந்தது என்றும் அதன் போக்கினை மாற்றியவர்கள் யாவர் என்றும் இன்றைய ஊடகங்களின் வழி நாம் அறிந்து கொள்ளலாம்.
அப்படி நான் அறிந்து கொண்டதை இங்கே பகிர்ந்துகொள்வதற்கு முன்னர் எனக்கு தகவல் அளித்து உதவி செய்த இணையத்திற்கும், புத்தகங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்னபிற அனைத்து காரணிகளுக்கும் நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.
தொல்லோவியங்கள்
மனிதன் என்று தோன்றினானோ அன்றே தோன்றிய கலைகளில் ஓவியக்கலையும் ஒன்று. சுமாராக கி.மு இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓவியக் கலைக்கான விதை விதைக்க ஆரம்பித்தாகிவிட்டது. ஆதி காலத்தில் ஓவியங்கள் குகைகளிலும் பாறைகளிலும் கற்கால மனிதர்களால் வரையப்பட்டது. அக்காலத்தில் உடலோவியங்களும் பிரசித்தி. தத்தம் சடங்களின் நிமித்தம் உடலோவியங்களை ஆதிகால மனிதர்கள் வரைந்துகொண்டார்கள் அல்லது பூசிக் கொண்டார்கள். தமிழில் தொய்யில் என்று பழங்காலத்தே குறிப்பிடப்படுவதைக் காணலாம். ஆதி ஓவியங்கள் பிரான்சின் Lascaux குகைகள், தென்னாப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளில் உள்ள ப்லம்பாஸ் (Blombos) குகைகள் மற்றும் ஸ்பெயின் போன்ற மிகச்சில இடங்களில் காணலாம். ஆதிமனிதன் தூரிகையின்றி கைகளினாலோ அல்லது நயமான தூரிகை போன்ற பொருட்களினாலோ வரைந்திருக்கலாம். பெரும்பாலும் சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ண பொடிகளை உபயோகித்திருக்கிறான். சில ஓவியங்கள் கரிக்கட்டைகளை மிருகங்களின் கொழுப்புடன் குழைத்து வரைந்திருக்கிறான். இன்று வரையிலும் அழியாத ஓவியங்கள் வரைய எவ்வித ஓவியம் தக்கவைக்கும் காரணிகள் அல்லாமல் வரைந்திருக்கிறான் என்பது எத்தனை ஆச்சரியமான விசயம்?
பெரும்பான்மை ஓவியங்கள் விலங்கினங்களைக் குறிப்பதாக இருக்கிறது. காட்டெருமைகள், குதிரைகள், ஏன் பறவைகளைக் கூட விட்டுவைக்காமல் அதி தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள் ஆதி மனிதர்கள். குகைகளில் காணப்படும் பெரும்பான்மை ஓவியங்கள் விலங்குகளாக இருப்பதற்கு அன்றைய வாழ்நிலை சூழல், மிருகங்களின் மேலுள்ள அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது அக்காலத்திய சடங்குகள் அல்லது இயற்கை நிமித்தம் காரணமாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர்கள் குகைகளின் உட்புறம் ஆழமாக சென்று வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
http://farm4.static.flickr.com/3048/...bfedf8f3_o.jpg
மேற்காணும் ஓவியம் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லாஸ்காக்ஸ் குகை ஓவியம். இது கி.மு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையிலான காலகட்டத்தில் வரையப்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகின் முதல் முழுமை ஓவியமாக இது இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுவே முதல் அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. பழைய காலத்தை ஆராயும் அறிவியல் சிலசமயம் உத்தேச முடிவுகளை மட்டுமே எடுக்கமுடிகிறது. ஆய்வாளர்கள் சொல்லுவது என்னவெனில் லாஸ்காக்ஸ் ஓவியங்களுக்கு முந்திய ஓவியங்கள் இயற்கையாலோ அல்லது காலம் தக்கவைக்கும்படியான நிரந்தர வர்ணங்களை உபயோகிக்காமலோ ஓவியங்கள் அழிந்துபட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆயினும் வீனஸ் என்ற ஓவியம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். அந்த ஓவியம் ஆறு மீட்டர் உயரத்துடன் முகமில்லா ஓவியமாக விளங்குகிறது. இதுவும் சிவப்பு நிறப் பொடியால் வரையப்பட்டது. இதே போன்றொரு இன்னொரு ஓவியமும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
லாஸ்காக்ஸ் போன்ற குகை ஓவியங்களை பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிய மனிதன் வரைந்திருக்கலாம். மேலும் விலங்குசார் ஓவியங்களோடு அக்காலத்திய ஆயுதங்களையும் நாம் காணலாம். இவ்வகையான குகை ஓவியங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்படுவதால் தொன்மை உலகம் இன்னும் விரியும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இயற்கை சார் பிக்மெண்ட் வர்ணங்களை ஆதி மனிதன் உபயோகித்திருப்பது நினைவு கூறத் தக்கது. தொல்லோவியங்கள் பலவித வர்ணங்களில் வரையப்படவில்லை. இயற்கையிடமிருந்து எடுக்கப்பட்ட அடர் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களே பிரதான வர்ணங்களாக இருக்கின்றன. இத்தனை வருடங்களிலும் இவை அழியாமல் இருப்பதைக் காணும் பொழுது அவன் உபயோகித்த வர்ணங்களின் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. இது சிற்சில ஆராய்வுகளுக்குப் பின் அம்மனிதன் இவ்வகை வர்ணக் கலவைகளை உபயோகப்படுத்தியிருக்கக் கூடும்.
ஓவியத்துடன் சிற்பக் கலையும் இக்காலத்தில் (கி.மு. 30000 ) வளர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓவியத்தோடு நாம் செல்லுகிறோமாகையால் சிற்பக் கலை பற்றி பிறிதொருநாள் பார்க்கலாம்.
இத்தொல்லோவியங்கள் குறித்து வரும் கட்டுரைகளில் மேலும் விரிவாகக் காணலாம்.
தொடரும்...