மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)
அன்பு நண்பர்களே,
தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை குறித்த செய்தி எனக்கு சில தினங்களுக்கு முன்னரே கிடைத்தது. முன்பு மக்கள் தொலைக்காட்சியில் அவரது நேர்காணலை வாய்ப்பு அமையும் போதெல்லாம் பார்த்த எனக்கு, மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைபட்ட போது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இப்போது அவரது கட்டுரைகள் வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. அக்கட்டுரைகளை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.
மொழிப்பயிற்சி - 1:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...
அச்சுறுத்த வேண்டா:-
"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.
தமிழில்,
"எழுத்தெனப் படுவ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப...''*
என்றார் தொல்காப்பியர்.
ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.
கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?
ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.
அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.
என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.
தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.
தமிழ் இயற்கை மொழி:-
மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.
எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?'' என்போமன்றோ? வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ". சற்று அதிகம் திறந்தால் "ஆ" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.
ஒலிப்பு - உச்சரிப்பு:-
இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.
நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.
தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.
தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.
தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.
தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.
"தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.
"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.
நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.
இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?
நுண்ணொலி வேறுபாடுகள்:-
தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.
அதனால், "சார் இங்கே என்ன "ல"னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.
பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.
மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல"கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள"கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ"கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.
இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.
எடுத்துக்காட்டுகள்:-
தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);
தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);
வால் - தூய்மை (வெண்மை)
வாலறிவன், வாலெயிறு;
வாள் - வெட்டும் கருவி,
வாழ் - வாழ்வாயாக
இப்படிப்பல காட்டலாம்.
தமிழ் வளரும்.....
நன்றி : தினமணிக்கதிர்
சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்
அண்ணா, கவிக்கோ அவர்களின் உரையைக்கேட்கும் போது அருமையாக இருக்கும். இப்போதைக்கு கட்டுரையாவது கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைய வேண்டியதிருக்கிறது. நான் தேடியதில் பகுதி - 3 இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கும் போது அதை இங்கு இணைப்பேன்.
இப்போது பகுதி - 3 ஐ இங்கு பதிக்கிறேன். அருமை நண்பர் திரு.இராஜேஸ்வரன் அவர்கள் கவிக்கோவின் புத்தகத்தை வாங்கி பகுதி-3ஐ எனக்கு தட்டச்சி அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நன்றி. அவருடைய தமிழ்த்தொண்டிற்கு தலை வணங்குகிறேன்.(14.05.2013)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 3:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ.ஞானச்செல்வன்
6. சில்லரை :-
ஒரு ரூபாயில் சிறிய பகுதிகளோ, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனும் எந்தத் தொகையிலும் வரும் சிறிய பகுதிகளே அவை. சிலவாக அறுக்கப்பட்டவை (பிரிக்கப் பட்டவை) ஆதலின் சில்லறை என்றே எழுதுதல் வேண்டும். சில அரை எனில் அரை அரையாகத்தான் அளவிடல் முடியுமன்றி கால், அரைக்கால் என்னும் சிறியவற்றை அது குறிப்பிடல் இயலாது. 10 காசு 50 காசு முதலியவை ஒரு ரூபாயில் சில்லறை; 50 ரூபா 100 ரூபா ஆயிரத்துள் சில்லறை. இப்படியே அடுக்கிஸ் செல்லலாம். ஆதலின் சில்லறையே சரியான பொருள் கொண்ட சொல்.
7. கருப்பு :-
கருப்பினத்தலைவர், கருப்புப்பணம் என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கறுப்பினத்தலைவர், கறுப்புப்பணம் என்று வல்லினம் இட்டு எழுத வேண்டும். கருப்பு என் இடையினம் போட்டால், பஞ்சம் என்று பொருள். கரிய, கருமை என்னும் போது இடையின 'ர' வரினும் கறுப்பு என்று எழுதும் போது மட்டும் வல்லின 'று' தான் போட வேண்டும்.
தமிழ்ப் பேரகராதி, சிற்றகராதி எதிலும் சரிபார்த்துக் கொள்க. கருப்புப் பட்டியல் எனில், பஞ்சப்பட்டியல் என்றே பொருளாம்.
8. மேனாள் :-
இப்போதெல்லாம் முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டு வந்த இடங்களில், மேனாள் அமைச்சர், மேனாள் தலைவர் என்று எழுதுகிறார்கள். புற நானூற்றில் வந்துள்ள மேனாள் என்னும் சொல்லுக்கு நேற்றைக்கு முந்திய நாள் (மேல்+நாள்) எனும் பொருளே காண்கிறோம். 'நெருநல் உற்ற செருவிற்கு.....' என்ற வரியின் முன் 'மேனாள் உற்ற செருவிற்கு.....' எனும் வரி இடம் பெற்றுள்ளது.
முன்னாள் எனில் அது நேற்றாகவும், பல நாள் முன்னாகவும், பல திங்கள், பல ஆண்டு முன்னதாகவும் பொதுத் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பொருள் மேனாளில் இல்லை. இதனை எழுதத் தெரியாதவர் மேநாள் என்று எழுதிவிட்டால், அது மே தினத்தைக் (மே-1) குறிக்கும். பழைய நாளில் பதவியில் இருந்தோரை முன்னாள் என்றே குறிப்போமாக.
9. இயக்குனர் :-
இயக்குநர், நடத்துநர், ஓட்டுநர் போன்ற சொற்களை இப்போதும் இயக்குனர், நடத்துனர், ஓட்டுனர் என்று பிழையாக எழுதுகிறார்கள். இச்சொற்களைப் பிரித்து (இயக்கு + அன் + அர்) பின் சேர்த்தால் இயக்கனர், நடத்தனர் என்றுதான் வரும் ('கு' வில் உள்ள உகரம் கெட்டு 'க' ஆகிவிடும்). மாறாக இயக்கு, நடத்து, ஓட்டு எனும் சொற்களோடு 'நர்' எனும் சிறப்பு விகுதியைச் சேர்த்தால், எந்த மாற்றமும் வராது. 'கேட்குந போலவும், கிளத்துந போலவும்' என்று தொல்காப்பியம் தொடங்கி, உப்புவிலை பகருநர், மீன்விலை பகருநர், நெடுந்தேர் ஊருநர், செம்பு செய்நர், மணி குயிற்றுநர் என்று சிலப்பதிகாரத்திலும் கண்டு கொள்க.
10. உளமாற :-
நீடுழிவாழ உளமாற வாழ்த்துகிறேன் என்று சிலர் எழுதுகிறார்கள். உள்ளம் மாறிவிட வாழ்த்துகிறேன் என்பது இதன் பொருளாகும். (உளம் + மாற) ஆனால், நினைத்த பொருள் இதுவா? மனம் நிரம்ப வாழ்த்துகிறேன் என்பதுதானே நம் கருத்து. ஆதலின் மனம் + ஆர (ஆர = நிரம்ப, பொருந்த) எனும் பொருளில் 'மனமார வாழ்த்துகிறேன்' என் எழுதுதல் வேண்டும்.
11. அளப்பறியன :-
அவர் ஆற்றிய பணிகள் அளப்பறியனவாகும் என்றும் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஆற்றிய பணிகள் அளப்பதற்கு முடியாத (நிறைந்த) பணிகள் என்பதுதானே நாம் கருதும் பொருள். அப்படியாயின் அளப்பரியன என்றுதானே எழுதிட வேண்டும். இதை விட்டு அளப்பறியன என்றால் ஒரு பொருளும் இன்றிக் குழப்பம் தோன்றும். எதை அறிய.....? எதை அளக்க....?
அளப்ப + அரிய = அளப்பரிய என்பதுதான் சரியான சொல்.
12. அன்னாளைய தலைவர் :-
முன் ஒரு சமயம் தலைவராய் இருந்தவரைக் குறிக்க ஒரு சிலர் அன்னாளைய தலைவர் என்று ஏடுகளில் எழுதி வருகிறார்கள். அ+நாள்=அந்நாள் என்பது சரியான சொல். அந்தநாள் தலைவர் என்னும் பொருளை மனதில் எண்ணி, அன்னாள் என்று எழுதுவது பிழையன்றோ? இது ஏதோ ஒரு பெண்ணின் பெயரைப் போல் தோன்றுகிறதே! இவ்வாறே இப்போது தலைவராய் இருப்பவர் இந்நாள் தலைவர் ஆவார். இவரை இன்னாள் ஆக்கிவிட்டால், இல்லாதநாள் தலைவர் ஆகிவிடுவார். கவனம் வேண்டும்.
======================================================
மொழிப்பயிற்சி - 4:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ.ஞானச்செல்வன்
13.பண்டகசாலை:-
பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம்.
பின் ஏன் சாலை என்று ஒரு சொல்? உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.
14.பதட்டம்:-
நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.
15.கண்றாவி:-
இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)
ஊர்ப் பெயர்த் திரிபுகள்:-
பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.
அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம்.
அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?
செய்ய நீர் (சிவந்தநீர் - புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?
தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை" என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது? ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன.
காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?
வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன.
(பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்" போடாமல் எழுத வேண்டும். (கோடுதல் - வளைதல்; கோட்டம் - வளைவு) ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை.
"ட" எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.
தமிழ் வளரும் ...
நன்றி:- தினமணி கதிர்
வல்லெழுத்து மிகும் இடங்கள்
ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு நன்றி நிவாஸ், அண்ணா.
====================================================
மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ.ஞானச்செல்வன்
அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.
அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்:- சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.
சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.
தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?
கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?
கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும் சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.
வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?
2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை
3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்
4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்
5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்
6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,
7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.
8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.
9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்
10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.
தமிழ் வளரும்....
நன்றி:- தினமணி கதிர்