ஏனோ தெரியல. நாலு நாள் எழுதணும்னு தோணுச்சு. அதான் எழுதறேன். கோச்சுக்காதீங்க.
போன சனிக்கிழம எங்க ஆபிஸிலேர்ந்து ஒரு பேருந்தில் கோலார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு மருத்துவ முகாம் நடத்தறதுக்காக போயிருந்தோம். கிட்டத்தட்ட மூணரை மணி நேர பயணம். சீக்கிரமே வந்துடலாம்னு தான் புறப்பட்டோம். ஆனா எதிர்பாரத கூட்டம். சமாளிக்க முடியல. ஒரு வழியா சமாளிச்சு முகாம் நடத்தி அங்கிருந்து புறப்படறப்போ மணி ஆறரை ஆயிடுச்சு. நம்ம பெங்களூர் மன்ற கூட்டத்துல கலந்துக்க முடியாம போனதுக்கு அது தான் காரணம். வந்து சேரும் போது மணி பத்து. அதான் படத்துக்கும் (படிக்க: பிரதீப்பின் சிவப்பதிகார விமர்சனம்) போகாம தப்பிச்சேன்.
ச்சே. என்னவோ சொல்லணும்னு ஏதேதோ உளறிட்டிருக்கேன். திரும்பி வரும் போது பன்னர்கட்டா ரோட்டில் தான் அந்த சம்பவம் நடந்துச்சு. பெங்களூருக்குள்ளே நுழைஞ்சதுக்கப்புறம் அங்கங்கே வண்டியை நிறுத்தி அலுவலக நண்பர்களை இறக்கி விட்டுட்டு இருந்தோம். பன்னார்கட்டா ரோட்டிலே வந்துட்டு இருந்தப்போ என்னவோ திடீர்ன்னு லெஃப்ட்டில இண்டிகேட்டர போட்டு வண்டிய ஓரம் கட்டினார் ஓட்டுநர். சரி யாரோ இறங்கப்போறாங்கன்னு நெனச்சா எங்க வண்டிய தாண்டி ஒரு அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) போச்சு. அது போனதுக்கப்புறம் வண்டிய எடுத்தார் ஓட்டுநர். அங்கிருந்த எங்களுக்கு இனம் புரியாத இன்ப அதிர்ச்சி.
விதிகளை, குறிப்பாக சாலை விதிகளை மிதிக்க கூடாதென்ற எண்ணம் தான் நம்மகிட்ட இருக்குன்னு இது வரை நினைச்சிருந்தேன். அவசர ஊர்தி வரும் போது வண்டியை சாலையோரமா நிறுத்தனும்ங்கறது இங்க எத்தன பேருக்கு தெரியும்னே தெரியல. இதுல அந்த ஓட்டுநரோட செயலால ஆச்சர்யபட்டோம். அதைவிட ஆச்சர்யம் எங்களுக்கு முன்னாடி போய்ட்டு இருந்த வண்டியெல்லாம் ஓரமா ஒதுங்கி வழி விட்டது தான். நிமிஷத்துல அந்த ஆம்புலன்ஸ் கண்ண விட்டு மறைஞ்சிடுச்சு. சைரன் சத்தமும் கேக்கல.
இதுல என்னடா பெரிசா சொல்ல வந்துட்டன்னு நீங்க கேக்குறது புரியுது. எத்தனையோ தடவை ஊரு சரியில்ல, உலகம் சரியில்ல, எவனுமே விதிகளை மதிக்க மாட்டேன்றான், அப்படி இப்படின்னு குத்தம் கண்டுபுடிக்கறதில்லேயே நம்ம வாழ்நாள் முழுதா போகுது. அட ஒரு மனுஷன் நல்லது பண்ணினா அவனை பத்தி மட்டும் யாரும் பேசறதில்லை. நெனச்சுக்கூட பாக்குறதில்ல. சாலை பற்றிய அறிவு ரொம்பவே குறைஞ்சிகிட்டு வர்றதா புலம்பல்கள் ஒரு பக்கம் இருக்குற சமயத்துல இது மாதிரி சம்பவங்களும் நடக்குது.
என்னவோ சொல்லத்தோணுச்சு. சொல்லிப்புட்டேன். அம்புட்டுத் தான்.