-
இருத்தலும் இல்லாமையும்
தேவையின் நிமித்தம் தேடப்படும்போதுதான்
தெரியவருகிறது இருத்தலும் இல்லாமையும்.
ஏனெனில்….
கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
கவனங்களை ஈர்ப்பதில்லை
காணாமற்போகும் தருணங்கள்!
இன்னவிடத்தில் இன்ன நேரத்தில்
இன்னாரால் இன்னவாறாக
காணாமற்போய்விட்டதென்பதை
கண்டிப்பாய் வரையறுக்கவியலாநிலையில்
அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது இயலாமை.
கவனிப்பாரின்றி நலிந்து மெலிந்து நாளடைவில்
காலாவதியாகிப்போயிருக்கலாம்.
அதன் சொல்லொணாத் துயர்மிகு சோகக்கூவல்
உடையவரைச் சேரமுடியாமல் ஓய்ந்துபோயிருக்கலாம்.
உள்ளேகும் புத்துருப்படிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு
புறவாசல் வழியே போக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய் அடையாளங்காட்டத் தவறிப்போகலாம்.
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
உணரப்படுவதான வலி சாதாரணமானதல்ல.
வரிகளை வாசித்துக் களைத்தோர்
காணாமற்போனதெதுவென்று அறியவிரும்புவீராயின்
கிலேசத்துக்காளாக வேண்டாம்.
உயிராகவோ…. உறவாகவோ…. உடமைப் பொருளாகவோ
ஊகித்தலும் உருவகப்படுத்தலும் உங்கள் உரிமையே!
-
இரைந்து கிடந்தக் குவியலுக்குள்ளிலிருந்தும் இதுநாள்வரை
மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை தப்பாமல் எடுத்தேன்..
வரிசையாய் அடுக்கி வையேன் என்று மனைவி சொன்னதை
சரியென்று சொல்லி அடுக்கி அழகாய் வைத்த பிறகு, தினம்
தேடி எடுக்கும் சிரமத்தை பட்டுத் தெரிந்த பிறகு
வாடியினியும் வதங்க வேண்டாமென மீண்டும் இரைத்தேன் புத்தகங்களை....
-
இருத்தலும் இல்லாமையும் என்ற தலைப்பில் நல்ல
கருத்துக்களை சொல்லி எண்ணங்களை வாரியிறைத்து
பொருத்தமாய் நல்ல சொற்களை கூட்டி சொன்னது நன்றாக
இருந்தது இதை நானும் கவிதையில் வாழ்த்தினேன்
-
நன்றி மனோ60 கவிதை நெம்புகோலால் இதை மேலெழுப்பியமைக்கு.
கௌதமனின் புதுப்பார்வை - கலைதலே ஒழுங்கு !! சபாஷ், சரியே நம்மில் பலருக்கு..
கீதம், என்ன சொல்ல... தொலைத்தல் passive.. தேடுதல் active.
பட்டபின்னராவது உறைக்காதா நமக்கு.. இதைப் படித்தாவாது உரைக்காதா மரத்த செவிக்கு.
பாராட்டுக்கள் கீதம்.