டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
சண்டிகர்,செப்.15-
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா குரூப்-1 பிளை ஆப் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
சண்டிகாரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபண்ணா ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இன்றி, இந்தியா இளம் வீரர்களுடன் இந்த போட்டியில் களம் கண்டுள்ளது.
நேற்று நடந்த முதல் ஒற்றையர் ஆட்டத்தில் தர வரிசையில் 179-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, 382-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் டேனியல் கிங் டர்ன்டருடன் மோதினார்.
3 மணி 15 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 3-6, 0-6, 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் டர்னரை வீழ்த்தினார்.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் 262-ம் நிலை வீரர் விஷ்ணுவர்தன் (இந்தியா), 317-ம் நிலை வீரர் ஜோஸ் ஸ்டாதமை (நியூசிலாந்து) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விஷ்ணுவர்தன் 6-2, 6-7, 6-4 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது. அப்போது சிறப்பாக ஆடிய விஷ்ணுவர்தன் அடுத்தடுத்து 6-4, 6-2 என இரண்டு செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
அதன்பின்னர் நடந்த இரட்டையர் போட்டியில் விஷ்ணுவர்தன்-ஜோடி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்-டேனியல் கிங் டர்னர் ஜோடியை சந்தித்தது. சுமார் 4 மணி நேரம் வரை நீடித்த இப்போட்டியில், 7-6 (3), 4-6, 6-3, 6-7 (4), 6-3 என்ற செட்கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
இதனால் 3-0 என இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி குரூப்-1ல் நீடிக்கிறது. நாளை நடைபெறும் மாற்று ஒற்றையர் போட்டியில் யூகி பாம்ப்ரி, ஸ்டாதமை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விஷ்ணுவர்தன், கிங் டர்னரை சந்திக்க உள்ளார்.
நன்றி : மாலை மலர்
மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்திய டென்னிஸ் சங்கம் விளக்கம்
சண்டிகர், செப். 17-
டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா மீது தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
சண்டிகாரில் நடந்த சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் மகேஷ்பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் ஜூன் 2014 வரை இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் கொரியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு வீரர்கள் இருவருக்கு தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொது செயலாளர் பரத்ஓசா கூறியதாவது:-
டென்னிஸ் வீரர்களின் மீது குறிப்பிட்ட கால அளவிற்கு தடை விதிக்கும் நடத்தை விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இப்போது தான் அவற்றை வகுத்து வருகிறோம். 2 அல்லது 3 மாதத்தில் அவை அமலுக்கு வரும். எனினும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை விதிகளின்படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைதான் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்தியாவுக்காக விளையாட விரும்பும் டென்னிஸ் வீரர்களுக்கு, ஒழுங்கு மீறல்களை நாங்கள் சகித்துக் கொள்ளமுடியாது என்பதை தெளிவுபடுத்தும் நடவடிக்கையைதான் நாங்கள் எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : மாலை மலர்
மகேஷ்பூபதி குற்றச்சாட்டுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் மறுப்பு
புதுடெல்லி, செப்.20-
http://mmimages.maalaimalar.com/Arti...f_S_secvpf.gif
கடந்த மாதம் லண்டனில் முடிந்த ஒலிம்பிக் போட்டியில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயசுடன் ஜோடி சேர்ந்து விளையாட சக வீரர்கள் மகேஷ் பூபதியும், ரோகன் போபண்ணாவும் மறுத்தனர். இதனால் வேறு வழியின்றி ஒலிம்பிக்குக்கு இரண்டு ஜோடிகளை இந்திய டென்னிஸ் சங்கம் அனுப்பியது.
அணித்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஒலிம்பிக் டென்னிசில் இந்திய வீரர்கள் யாரும் கால்இறுதியை கூட தாண்டவில்லை. இதைத் தொடர்ந்து பெயசுடன் இணைந்து விளையாட மறுத்த மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் மீது அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அவர்கள் இருவரும் சேர்க்கப்படவில்லை. அத்துடன் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணிக்காக டேவிஸ் கோப்பை டென்னிசில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
டென்னிஸ் சங்கத்தின் முடிவுக்கு மகேஷ் பூபதி கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்திய வீரர் மகேஷ்பூபதி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் நிர்வாகமும் அதன் சர்வாதிகார போக்கும் எதிர்கால இந்திய டென்னிசுக்கு தீங்கானவை. அகில இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கன்னா, லியாண்டர் பெயசை பயன்படுத்தி என்னை பல முறை அவர் பழிவாங்கியுள்ளார்.
வீரர்களை பிரித்தாளும் அனில் கன்னா, இந்திய டென்னிஸ் சங்கத்தின் நிர்வாகத்தை ஒரு நபராக நடத்தி வருகிறார். செயற்குழு உறுப்பினர்கள் எல்லாம் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள். என் மீதான தடையை எதிர்த்து வழக்கு தொடர ஆலோசனை செய்து வருகிறேன் என்றார். மகேஷ்பூபதியின் குற்றச்சாட்டுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய டென்னிஸ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள் என்று மகேஷ்பூபதி கூறியிருப்பது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். செயற்குழு உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும் செயற்குழுவில் விவாதித்து தான் முடிவு எடுக்கப்படுகிறது.
இது தான் உண்மையில் நடப்பதாகும். அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம் தொழில் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 6 கமிட்டிகளின் சேர்மன்களும் மிகுந்த தகுதியும், திறமையும் அனுபவமும் படைத்தவர்கள். அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம் ஜனநாயக ரீதியாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : மாலை மலர்