-
அவலம்!!!?...
சிக்னலில் சிக்கலான
வாகனக்கூட்டமிடையில்
சிறகு விரிக்கும் சின்னச்சிட்டு...
ஆளாய்ப் பறக்கிறது
அரைவயிற்றுக்கு
அரைஞான் கயிறறுந்த
அஞ்சு வயசு பிஞ்சு..
நேருவின் ரோஜா -இதழ்களை
உதிர்த்துக் கொண்டு!!..
***
அவலம் மறந்து
அவள் பயணம்..
மானத்தை விற்று
கல்வியை வாங்க
மார்புகாட்டும் படலம்...
மகளின் எதிர்காலம்
கல்வியறையில் கழிய..
நிகழ்காலத்தை பள்ளியறையில்..
பரிதாப பேதை...
காந்தி கண்ட கனவு- இவள்
இரவில்தான் நடக்கிறாள்!!!
***
களரி கற்ற கல்லூரியில்..
களவிப்பாடம்..
புத்தக பெட்டகமிடையில்..
கஞ்சா பொட்டலம்..
பேனா பிடித்த விரல்களில்..
மென்த்தால் மணம்..
நீராருங்கடலொடுத்த..
வாயில் குடலு மேல உடலு..
மாவீரன் வரலாறு படிக்கும்
நாளைய தூண்கள்..
சாய்ந்த நிலையில்..
நெப்போலியன் துணையோடு!!..
***
எதிர்கால இந்தியாவை
வளமாக்க தேடுதல் வேட்டை..
இன்றைய இந்தியாவை தொலைத்தபடி!!!!...
-
வா தம்பீ
இதைத்தான் அண்ணன் எதிர்பார்த்தேன்...
சில அவல நிகழ்வுகளை அறைந்தாற்போல் சொல்லி
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறாய்.
உணர்ச்சிக் கவிஞனுக்கு என் பாராட்டு
-
வணக்கம்!
பூ எனப் பெயர் கொண்டு வீசிய கவிதை முள்ளாய் நெஞ்சில்!
கவிதை அருமை!
நிலா
-
அபாரம். புதுவையில் எப்படி அப்படி கவிஞர்கள் பொசுக், பொசுக் எனப் பூக்கிறார்கள் பூ?
உங்கள் ஊரைப் பற்றி ஒரு கவிதை புனைய இந்த ரசிகனின் சந்தடி சாக்கு விண்ணப்பம்.
-
சவுக்கடி போல் வந்து விழும் வார்த்தைகள் ! புண்ணாகும் மனதுக்கு மருந்துதான் இல்லை !
பாராட்டுக்கள் பூ !
-
அருமை அருமை
தம்பி பூ,
தொடர வாழ்த்துக்கள்
இது இந்தியாவில் மட்டுமல்ல
உலகெங்கும் நடக்கும் அவலம்.
திரைமறைவில், நான்கு சுவருக்குள்
நடப்பதுவே பலரின் கஷ்டம் சிலரின்
இன்பம்.
மனோ.ஜி
-
அன்பு தம்பி படைத்த கவிதைகள் காட்டுகின்றன ஆயிரம் அலங்கோலம்....
மாறட்டும் இந்நிலை என மன்றாடுவதை தவிர வழியில்லை நமக்கு
பாராட்டுகள் தம்பி...
-
பாராட்டிய அண்ணன்கள்,அக்கா மற்றும் அன்பு நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம் கலந்த நன்றிகள்!!!
-
பூ..அவலகாட்சிப்பாக்கள்........நன்று
-
மதிய உணவு திட்டம், தொட்டில் குழந்தை, எய்ட்ஸ் விழிப்புணர்வு....
திட்டங்கள் வளர்ப்பவைகளாய்... முறியடிக்க வழியை காணோம்!
-
பூ அண்ணாவின் எழுத்திக் கவி...
அவலங்களை கோடிட்டு காட்டி முகத்தில் அறைந்த கவிதை...
கவி அக்கா சொன்னது போல..
திட்டங்கள் வளர்ப்பதை விடுத்து.... ஆணி வேர் காரணிகளைக் களைய முற்பட வேண்டும்...
பாராட்டுகள் பூ அண்ணா.
நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதை விட...
நோயின் ஆணி வேர் காரணத்தை ஆராய்ந்து களைந்தால் நோயே வராதே..!!
-
அவலங்களின் சேர்வை...
படித்த என் கண்களில் கண்ணீர் கோர்வை..
பாராட்டுக்கள் பூ