நீதிபதியாக இல்லாமல் சராசரி மனிதனாக
கொல்கத்தாவைச் சேர்ந்த அனு, தன் தம்பியை படிக்க வைப்பதற்காக டெல்லியில் ஜனநகர் பகுதியில் உள்ள பாரில் டான்சராக வேலையில் சேர்ந்திருக்கிறார். அவரது அழகும், நடனமும், திறமையும் அவரது வறுமையை போக்கி செழிப்பாக வாழ வைத்திருக்கிறது.
அவரது வளர்ச்சி பிடிக்காத அதே ஹோட்டலில் டான்ஸராக பணிபுரிந்த மீனா, 2004ம் ஆண்டு தன் தம்பியை விட்டு அனுவின் மீதி ஆசிட் வீச வைத்திருக்கிறார். வழக்கம் போல் ஹோட்டலுக்கு புறப்பட்ட அனு மீது ஆசிட் வீசப்பட, அங்கேயே உருக்குலைந்து போயிருக்கிறார்.
அதன் பிறகு லட்சக்கணக்கில் பணம் செலவழித்தும் அவரது இளமை, அழகு, வசதியான வாழ்க்கை என்று எதையும் திரும்ப மீட்க முடியவில்லை.இதற்கிடையே, ஆசிட் வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீனாவுக்கும் அவரது சகோதரருக்கும் 2011-ம் ஆண்டில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, டெல்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் அணுவின் அவல வாழ்க்கை பற்றிய செய்தி தொகுப்பு 2 மாதங்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்த சுப்ரீம் கோர்ட்டில் ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி குரியன் ஜோசப், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
''ஒரு நீதிபதியாக இல்லாமல் சராசரி மனிதனாக அந்த பெண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அனுவின் இடத்தில் எனது மகளோ, சகோதரியோ இருந்தால் என்ன செய்வேனோ..? அதையே தான் நான் அனுவுக்கும் செய்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார் நீதிபதி குரியன் ஜோசப்.