-
அவள் வரலாறே சுவைக்கும்
ஊட்டும் உணவொடு
உணர்வோடும்
உப்பிடும்போதெல்லாம்
உச்சிமுகரும் ஆசிகரையும்
அன்புப் புகையொடு
நெஞ்சைப்புடைத்தெடுத்து
காலும் கையும் வலிமறந்து
உள்ளதெல்லாம் உவப்புக்கே
சமையலைச் சரித்திரமாக்கி
வாழ்வெல்லாம் சுவைகொடுக்க
சுமை எடுப்பாள்
சத்தமிட்டு வரும் சண்டியர்கள்
சத்தின்றித் தெரியும்
சின்னப்பொடியர்க்கு சாப்பிட்டதெல்லாம்
தெருவோடி ஊரோடிச்செரித்துப்போம்
சட்டைவிலக விலாஎன்பு எழும்பும்
கண்களிலே நீர் சத்தாய்ச் சொரியும்
அம்மாளின் கண்களெல்லாம்
சும்மாவே எரியும்
தெரியும் விலாஎன்பின்
விளக்கம் விடியும் வரை
அவள் கனவில் வாளாய்
வந்து போகும்
வகை வகையாய்ச் செய்துபோட
அம்மாளின் உடலெல்லாம்
ஆசை அடுப்பாய் மூளும்
பொச்சடிக்கும் பிள்ளைவாய் பார்த்தால்
அவள் வரலாறே சுவைக்கும்
-
மாறுபட்ட வரிகளில் அம்மாவின் உணர்வுகள்...
-
பிள்ளைக்கு வகையாய் ஆக்கிப்போட இயலாத் தாய்மையின் தவிப்பை வெளிப்படுத்தும் கவிதை.
பொச்சடிக்கும் என்றால் என்னவென்று விளங்கவில்லை எனினும் கவிதையின் கருவைப் புரிந்துகொள்வதில் சிக்கலில்லை.
தாய்மனத்தவிப்பைக் காட்டும், மனம் தொட்ட அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள்.
-
பொச்சடித்தல் (யாழ்ப்பாண பழகு-நடைமுறைத் தமிழ்) சிறு பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் கூட சத்தமெழுப்பிச் சுவைத்துச் சாப்பிடுவதைக் குறிக்கும். மிக்க நன்றி நாஞ்சில் த.க.ஜெய், கீதம் அவர்களே.