உள்ளே வந்த சில நாட்களிலேயே
உயிரை வெளுவெளுவென வெளுத்து
உடம்பை துவைதுவையென துவைத்து
சொர்க்க நரகத்தில் தொங்க வைத்தாயே!
நான் உனக்காக எழுதிய கவிதைகளுக்காக
நீ பதில் கவிதை எல்லாம் எழுதவேண்டாம்!
நானே உன்னிடம் இருந்து பொறுக்கிவிட்டேன்!
உனக்குத் தெரியாமல் நான் கிழித்த
உன் பெயர் எழுதிய உன் நோட்டு முதல் பக்கம்!
உன் முத்தம் கிடைத்து, அதனால் உன் எச்சில் குடித்து
அதனால் உடல் சூடாகி, அதனால் இன்னும் கொஞ்சம்
அதிகமாக கறுப்பாக எழுதும் உன் HB பென்சில்!
உன் அம்மா மடியில் உட்கார்ந்து கொண்டு
போட்டோகாரரை பூச்சாண்டி என நினைத்து
உன் அழுகையை அருமையாய் பதிவு செய்த
அந்த உன் மூன்று வயது புகைப்படம்!
இப்படி எனக்கு கவிதையாக தெரிந்தவைகளை எல்லாம்
உனக்குத் தெரியாமல் திருடி வைத்திருக்கிறேன்!
இவையெல்லாம் போக நீயாக எதாவது கொடுக்க நினைத்தால்
கடைக்கண் மோதல், என் தலை கோதல்,
கன்ன முத்தம், சினுங்கியபடி செல்ல அடி,
உன் விரலோடு என் விரல், என் பெயரை ரசித்துச் சொல்லும் உன் குரல்
இப்படி ஏதாவது ஒன்றை வேண்டுமானால்
என் கவிதைகளுக்கு பதிலாகக் கொடு!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
இதயம் நிரப்பிய உன் நினைவுகள்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
அடிவயிற்றில் எம்பிக் குதித்து
அணுகுண்டாய் வெடிக்கும் போது
என் அகிலமே சும்மா அதிருதுல்லே!!!!!!